
சிம்புவால் ரூ.15 கோடி நஷ்டம் : போலீசில் மைக்கேல் ராயப்பன் புகார்
சிம்புவுக்கு எதிராக, பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர் சங்கம், நடப்பு வினியோகஸ்தர் சங்கமும் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன. சிம்பு நடித்துள்ள, மாநாடு என்ற படத்தை வெளியிட முடியாதபடி மிரட்டல் விடுக்கின்றனர் என சிம்புவின் தாய் உஷா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அவரது வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்போம் என்றார்.
இவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மைக்கேல் ராயப்பன் நேற்று அளித்துள்ள புகார்: சிம்பு நடிப்பில், 2016ல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தேன். இந்த படத்தை சொன்னபடி சிம்பு நடித்து கொடுக்கவில்லை. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கினார்.படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில், படத்தை வெளியிடுங்கள். நஷ்டம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக, மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பேன் என, சிம்பு உறுதி அளித்தார். அவரை நம்பி, நானும் படத்தை வெளியிட்டேன்.படம் சரியாக ஓடவில்லை. 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
அதில், 12 கோடி ரூபாய் வினியோகஸ்தர்களுக்கு தர வேண்டி உள்ளது. இது பற்றி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன்.அப்போது தலைவராக இருந்த விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் விசாரித்தனர். அவர்களிடம் படம் நடித்து தருவதாக, சிம்பு உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் மாறிய பின், ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டார்.
இது தொடர்பாக, பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்தேன். சங்க நிர்வாகிகள், நஷ்டத்தை ஈடுசெய்ய சிம்பு புதிய படத்தில் நடித்து கொடுப்பது பற்றி தான், அவரது தாய் உஷாவிடம் கேட்டனர். மற்றபடி கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. உஷா பொய் புகார் அளித்துள்ளார். அதற்கு, அவரது கணவர் உடந்தையாக உள்ளார். என்னை ஏமாற்றிய சிம்பு, உஷா, டி.ராஜேந்தர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!