
பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் தயாரான இரண்டு பட்டினத்தார் படம்
1935ம் ஆண்டு முதல் "பட்டினத்தார்" படம் உருவானது. இதில் சி.எஸ்.சுந்தரமூர்த்தி நாயனார் பட்டினத்தாராக நடித்தார். இதே ஆண்டில் இன்னொரு "பட்டினத்தார்" படமும் தயாரானது. இதில் பட்டினத்தாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்தார். இரு படத்தில் யார் படத்தை முதலில் வெளியிடுவது என்ற போட்டி வந்தது. இதனால் சுந்தரமூர்த்தி நாயனார் நடித்த படத்தை தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் டைட்டிலில் சேர்த்து "தாமரை பட்டினத்தார்" என்ற பெயரில் அவசர அவசரமாக வெளியானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் கனத்த தோற்றம் பட்டினத்தார் கேரக்டருக்கு செட்டாகவில்லை என்பதாலும் தொழில்நுட்ப கோளாறாலும் படம் தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.
அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1936ம் ஆண்டு தண்டபாணி தேசிகர் நடித்த பட்டினத்தார் படம் வெளிவந்தது. படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இதனை டி.சி.வடிவேலு நாயக்கர் இயக்கி இருந்தார். வி.என்.சுந்தரம், டி.ஆர்.முத்துலட்சுமி, டி.கே.ருக்மணி உள்பட பலர் நடித்திருந்திருந்தார்கள். கோபால் சர்மா இசை அமைத்திருந்தார், வேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இரண்டு படத்தின் பிரதிகளுமே இப்போது இல்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!