
சென்னையில் மற்றுமொரு பிரம்மாண்டத் திரை
ஒலித்தரத்தில் "டிடிஎஸ்" தொழில்நுட்பம் வந்தது. அடுத்து டால்பி அட்மாஸ் தரத்திற்கு மாறியது. கடந்த சில வருடங்களில் ஐமேக்ஸ் அளவிலான திரையில் படத்தைப் பார்ப்பது வந்தது. வழக்கமாக நாம் பார்க்கும் சினிமாஸ்கோப் அளவை விட இன்னும் பெரிய அளவில் இருப்பதே ஐமேக்ஸ் திரையளவு.
இந்தியா முழுவதும் பல ஊர்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் திரையரங்கம் அவர்களுக்கென "பிஎக்ஸ்எல்" என்ற திரையை பயன்படுத்தி வருகிறது. அது சற்றேக்குறைய ஐமேக்ஸ் அளவில்தான் இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரையில் வடபழனி நெக்சஸ் மாலில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் வளாகத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் லக்ஸ் மல்டிபிளக்ஸ் வளாகத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் உள்ளது. அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் வளாகத்தில் ஒரு பிஎக்ஸ்எல் தியேட்டர் உள்ளது.
இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் பழமையான தியேட்டர் வளாகமான சத்யம் தியேட்டர் வளாகத்தில் உள்ள சத்யம் திரையரங்கம் பிஎக்ஸ்எஸ் தியேட்டராக மாற உள்ளது. சென்னையில் ஒரு காலத்தில் சத்யம், சபையர், தேவி ஆகிய தியேட்டர்களின் திரைகள் பிரம்மாண்டமாக இருக்கும். அங்கு ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் வரும். சபையர் தியேட்டர் மூடப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது.
சத்யம் தியேட்டரை பிவிஆர் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு வாங்கியது. இப்போதுதான் ஏற்கெனவே இருந்த பெரிய திரையை மாற்றி இன்னும் பெரிய திரையாக பிஎக்ஸ்எல் திரையாக மாற்றப் போகிறார்கள். இதனால், சென்னையில் மட்டும் நான்கு பிரம்மாண்டமான திரைகளில் படங்களைப் பார்க்கும் அனுபவம் சினிமா ரசிகர்களுக்குக் கிடைக்கும்.
சென்னையில் இன்னும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டுமானங்கள் நடந்து வருகிறது. அடுத்த சில வருடங்களில் அவை திறக்கப்படலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!