
லால் சிங் சத்தா தோல்வியால் 3 வாரங்கள் மனஅழுத்தம்: ஆமீர்கான் வெளிப்படை
2022ல் ஹிந்தியில் ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா நடித்து வெளியான படம் "லால் சிங் சத்தா". ஹாலிவுட் இயக்குனர் ராபர்ட் ஜெம்மெக்கிஸ் இயக்கத்தில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான "பாரஸ்ட் கம்ப்" திரைப்படத்தின் கதையை தற்போதைய சூழல், ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மெருகேற்றி உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
அதன்பிறகு, எந்தவொரு படத்திலும் நடிக்காத ஆமீர்கான், தற்போது "சித்தாரே ஜமீன் பர், லாகூர் 1947" மற்றும் தமிழில் ரஜினி நடிக்கும் "கூலி" படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆமீர்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் படங்கள் தோல்வி அடைந்தால் வருத்தம் அடைவேன். ஒரு படத்தை எடுப்பது கடினமானது. சில நேரங்களில் நாம் திட்டமிட்டது போல் எதுவும் நடப்பது இல்லை. "லால் சிங் சத்தா" படத்தில் என்னுடைய நடிப்பு சற்று அதிகமாக இருந்தது. படம் முழுக்க ஹீரோவின் நடிப்பை சார்ந்த ஒரு படம்.
ஆனால், டாம் ஹேங்ஸின் நடித்த "பாரஸ்ட் கம்ப்" படத்தை போல "லால் சிங் சத்தா" வரவேற்பை பெறவில்லை. என் படம் தோல்வியடையும்போது, நான் இரண்டு, மூன்று வாரங்களுக்கு மன அழுத்தத்துக்குள் சென்று விடுவேன். அதன்பிறகு என்னுடைய குழுவினருடன் அமர்ந்து என்ன தவறு நடந்தது என்று விவாதித்து அதிலிருந்து கற்றுக் கொள்வேன். எனது தோல்விகளை நான் உண்மையிலேயே மதிக்கிறேன். அவைதான் நான் இன்னும் சிறப்பாக செயல்பட தூண்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!