
ஒரே நேரத்தில் மலையாளம், ஹிந்தியில் த்ரிஷ்யம் 3 : அஜய் தேவ்கன் விருப்பம்
இந்த இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால், மலையாளம் மட்டுமல்லாது பொதுவான த்ரிஷ்யம் ரசிகர்களிடம் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்கிற ஆர்வம் இருந்து வருகிறது. அதற்கு தீனி போடும் விதமாக இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும், அதற்கான கதையை தயார் செய்து வருவதாகவும், ஆனால் இதுதான் இந்த படத்தின் கடைசி பாகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாக த்ரிஷ்யம் படத்தின் ஒவ்வொரு பாகமும் வெளியான பின் கிட்டத்தட்ட ஒரு வருட, இரண்டு வருட இடைவெளி விட்டு தான் ஹிந்தியில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் வெளியானது. ஆனால் தற்போது த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் மலையாளத்தில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் தயாராக வேண்டும் என அஜய் தேவ்கன் விரும்புகிறாராம்.
காரணம் இதற்கு முன்னதாக ஓடிடி தளங்களின் தாக்கம் குறைவாக இருந்தது. தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைத்து ரசிகர்களுக்கும் அது ரொம்பவே அறிமுகமான படமாக மாறிவிட்டது. இந்த நிலையில் மூன்றாம் பாகத்தில் என்ன சஸ்பென்ஸ் இருக்கப்போகிறது என ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் மலையாளத்தில் இந்த படம் முதலில் வெளியாகி விட்டால் அந்த படத்தையோ அல்லது ஓடிடியில் வெளியாகும் அதன் ஹந்தி பதிப்பையோ பாலிவுட் ரசிகர்கள் ஆர்வம் தாங்காமல் முன்கூட்டியே பார்த்து விடுவார்கள் என்பதால் பின்னர் தாமதமாக ஹிந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டாலும் பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என நினைக்கிறாராம் அஜய் தேவ்கன்.
இது தொடர்பாக தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் தயாரித்து ஒரே சமயத்தில் வெளியிடலாம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்க, ஹிந்தியில் த்ரிஷ்யம்-2 படத்தை வெற்றிகரமாக இயக்கிய அபிஷேக் பதக்கே இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!