தினமலர் விமர்சனம் » ஜன்னல் ஓரம்
தினமலர் விமர்சனம்
பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, ராஜேஷ், இளவரசு, சிங்கம்புலி, பூர்ணா, மனீஷா, மோனிகா, யுவராணி... என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து, கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஜன்னல் ஓரம்.
பழனியில் இருந்து பண்ணைக்காடு மலைகிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன். புதிய நடத்துனர் விமல். அந்தப் பேருந்தில் பயணிக்கும் இளம்பெண்கள் எல்லோர் மீதும் பார்த்திபனுக்கு ஜொள் என்றால், விமலுக்கு மனீஷா மீது மட்டும் காதல்! ஊர் பெரிய மனிதர் ராஜேஷ். அவரது மருமகளாக ஆகப்போகும் வளர்ப்பு மகள் பூர்ணா, ஆசிரியை பூர்ணாவின் மீது காதல் கொள்ளும் சக ஆசிரியர் ரமணா. அதே பூர்ணாவின் மீது சின்ன வயது முதல் அதீத அன்பும் ஆசையும் கொண்டிருக்கும் விதார்த், கட்டிங்கிற்கு கடையாய் கடக்கும் சிங்கம்புலி, மாஜி ஊர் பெரிய மனிதர் பாலாசிங், அவரது கையாள் ஆதேஷ் என அழகிய பண்ணைக்காடு கிராமத்திற்கு, வெளியூர் வேலையில் இருந்து திருவிழாவிற்கு முதல்நாள் திரும்புகிறார் ஊர் பெருசு ராஜேஷின் வாரிசு சஞ்சய்.
கும்மிருட்டில் புல் மப்பில் இருக்கும் பார்த்திபனுக்கு பதில் பழுதான பேருந்தை ஓட்டி வரும் விமல், அவர் மீது பேருந்தை மோதிவிட, அதில் மூர்ச்சையாகும் சஞ்சய் பாரதியை அந்த வழியாக வரும் ஒரு மினி லாரியில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி ஊர் திரும்புகின்றனர் பார்த்திபனும், விமலும். ஊர் திரும்பியதும் தான் தெரிகிறது, தாங்கள் ஓட்டி வந்த பேருந்தில் வந்து விழுந்தது ஊர் பெரிய மனிதர் ராஜேஷின் ஒற்றை வாரிசு சஞ்சய் பாரதி என்பது. ஆனாலும், யாரிடமும், மூச்சு காட்டாமல், சஞ்சையை ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாக தேடி அலைகின்றனர் பார்த்திபனும், விமலும்! ஆனால் எங்கேயும் சிக்காத சஞ்சய், இரண்டொரு நாள் கழித்து பிணமாக ஏதோ ஒரு இடத்தில் கிடப்பதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. திருவிழா கலை இழந்து ஊரே சோகமயமாகிறது. ஆனால் அப்பொழுதும் வெளிகாட்டிக் கொள்ளாத பார்த்திபனும், விமலும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட சஞ்சய், அந்த மலை அடிவாரம் போய் பிணமாக காரணம் என்ன? என துப்பறிய களம் இறங்குகிறது.
இதற்குள் விமல், விபத்தின் போது எடுத்து வந்த சஞ்சயின் பையும், பூர்ணா அவருக்கு எழுதிய காதல் கடிதங்களும், மனீஷாவின் துறுதுறுப்பால் பூர்ணா வசம் சிக்குகிறது. ஊர் கூடுகிறது. சஞ்சய்யை பேருந்து மோதி நான் தான் கொன்றுவிட்டதாக கதறுகிறார் விமல். போலீஸ் விமலை கைது செய்கிறது. பிறகு ஜாமினில் வெளியே வரும் விமலுடன், பார்த்திபனும் சேர்ந்து கொண்டு மினிலாரி டிரைவரை தேடிப்பிடித்து அவர் வாயிலாக உண்மை குற்றவாளியை ஊர் முன்பு நிறுத்துவது க்ளைமாக்ஸ். அதனுடன் விமல், மனீஷா திருமணத்தையும், பூர்ணா யாருக்கு மாலையிட்டார்? எனும் சஸ்பென்ஸையும் கலந்து கட்டி ஜன்னல் ஓரம் படத்தை வெகு ஜோராக முடித்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்!
வழக்கம் போலவே நக்கல், நய்யாண்டியுடன் பார்த்திபன், அந்த அரசு பேருந்தை மட்டுமல்ல... படத்தையும் கலகலப்பாக நகர்த்துவது இவர்தான். அந்த பஸ்ஸில் ஏறும் முக்கால்வாசி பெண்களுடன் இவர் அடிக்கும் லூட்டி பத்தாது... என்று கெஸ்ட் ரோலில் வரும் மோனிகாவுடன் செய்யும் சில்மிஷ காதலும் செமக்ளாஸ்!
விமல், புதிய கண்டக்டராக அந்த பழனி - டூ - பண்ணைக்காடு அரசு பேருந்துக்கு பொறுப்பேற்றது முதல், மனீஷா மீது காதல் கொள்வதில் தொடங்கி, க்ளைமாக்ஸில் கொலைக் குற்றவாளியை ஊர் முன் நிறுத்துவது வரை பொளந்து கட்டியிருக்கிறார். மனீஷாவின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குவது, ராஜேஷின் வாரிசை கொன்றுவிட்டதாக புலம்புவது, ஊரில் இருக்கும் அம்மா யுவராணியுடன் போனில் பாசத்தை பொழிவது என ஜன்னல் ஓரம் விமல், சற்றே விழியோரம் ஈரமும் எட்டிப்பார்க்க வைத்துவிடுகிறார்.
டேம் ஆபரேட்டராக - வில்லானிக் ஹீரோவாக வரும் விதார்த், ஆரம்பகாட்சிகளில் யதார்த்தமாகவும், அதன்பின் குரூரமாகவும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
ராஜேஷ், ரமணா, இளவரசு, சிங்கம்புலி, பாலாசிங், ஆதேஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்.
நாயகிகள் பூர்ணா, மனீஷா இருவரில் பூர்ணாவே கூடுதல் ஸ்கோர் செய்திருக்கிறார். அலட்டல் இல்லாத அம்மா யுவராணியும் ப்ளஸ்!
பழநி பஸ் நிறுத்தத்தையும், பண்ணைக்காட்டின் பளபள வளத்தையும் தன் ஓவிய ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்ட படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. வித்யாசாகரின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தாலாட்டு!
விமல், ஏதோ கிறிஸ்தவ ஆலயமணி மாதிரி இந்து கோவில் மணியை அடித்து ஊரை கூட்டுவது மாதிரியான நாடக காட்சிகள், தன்னால் விபத்தில் இறந்ததாக கருதப்படும் ஒருவரது கைப்பையையும், காதல் கடிதங்களையும் தான் தங்கியிருக்கும் வீட்டு வராண்டாவில் பப்பரப்பா... என விமல் போட்டு வைத்திருப்பது.., அப்புறம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் எல்லாம் உ.பா., அருந்திவிட்டு தான் வண்டி ஓட்டி வருவது மாதிரி ஒரு பிரம்மையையும், பயத்தையும் ஏற்படுத்திவிட்டிருப்பது உள்ளிட்ட ஒருசில மைனஸ் பாயிண்ட்டுகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், கரு.பழனியப்பன் இயக்கத்தில்
ஜன்னல் ஓரம் - வசூல் காற்று எகிறும்!