தினமலர் விமர்சனம் » நீதானே என் பொன்வசந்தம்
தினமலர் விமர்சனம்
"மின்னலே", "காக்க காக்க" போன்ற எவர்கிரீன் படங்களை தந்த கெளதம் வாசுதேவ் மேனனின் படம் தானா இது? எனக்கேட்கும் அளவிலேயே இருக்கிறது "நீதானே என் பொன்வசந்தம்" என்பது நிஜம்!
அவரே இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் பார்ட்-2 அல்லது பார்ட்-1 என்கிற மாதிரியான ஒரு கதை! அதில் மணிரத்னத்தின் "அலைபாயுதே" தொடங்கி கெளதமின் "விண்ணைத்தாண்டிய வருவாயா" உள்ளிட்ட எண்ணற்ற படங்களின் அல்டா உல்டா காதல் காட்சிகள்.... என்னாச்சு கெளதம் உங்களுக்கு..?!
கதை அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை..., சின்ன வயது முதலே ஜீவாவுக்கு தெரிந்த சமந்தாவிற்கும், சமந்தாவிற்கு தெரிந்த ஜீவாவுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலும், காதல் ஊடல், கூடலும் தான் கதை! அதை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் ஜீவா, சமந்தாவின் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரையிலான இன்பாக்ட்சுவேஷன் ஈர்ப்பு, ப்ளஸ் 2, கல்லூரி காதல் உள்ளிட்டவைகள் நீண்டு கொண்டே போகாமல் இருந்திருந்தால் இன்றைய இளம் கதாலர்களை இப்படம் பெரிதும் கவரும் என்பது நிதர்சனம்.
படத்திற்கு ஒரே ஆறுதல் சந்தானத்தின் காமெடி மட்டுமே. அதிலும் சந்தானமும், ஜெஸியாக வரும் அந்த குண்டு பெண்ணும் ரொமான்ஸ் பண்ணும் விண்ணைத்தாண்டி வருவாயா காமெடி செம ரகளை.
ஆ, ஊ... என்றால் அது சோகம் என்றாலும் சரி, சந்தோஷம் என்றாலும் சரி இசையமைப்பாளர் இளையராஜா பாடுவதை தவிர்த்திருந்தாலே படம் பாதி பழைய படங்களின் சாயலில் இருந்து தப்பித்திருக்கும்! பரவாயில்லை ஓம் பிரகாஷ் மற்றும் எம்.எஸ்.ஸ்ரீபிரபுவின் ஒளிப்பதிவு அழகிய ஆறுதல்!
எடிட்டர் ஆண்டனியின் கைகளை இயக்குனர் கெளதம் கட்டிப்போட்டு விட்டாரா தெரியவில்லை...? நீள நீளமான காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்டைலான ஜீவா, சமந்தா, சந்தானம் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கின்றனர் ஆனாலும் என்ன பயன்..?!
"நீதானே என் பொன்வசந்தம்" - கெளதம், "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!"-------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
நான்காம் வகுப்பு படிக்கும்போது ஜீவாவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது. பிரிகிறார்கள். பத்தாம்வகுப்பு படிக்கும்போது ஜீவாவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது. பிரிகிறார்கள். கல்லூரி படிக்கும் போது ஜீவாவும், சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது பிரிகிறார்கள். வேலைக்கும்போதும் போது ஜீவாவும் சமந்தாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் சண்டை வருகிறது. பிரிகிறார்கள்.
என்னங்க? எதாவது ஃப்ரூப் மிஸ்டேக்கா என்று சந்தேகம் வருகிறதா? அதெல்லாம் இல்லை. விண்னை தாண்டி வருவாயா படத்தின் வெற்றியை பார்த்து கௌதம் சூடு போட்டு கொண்ட கதை இது தான்.
படத்தின் நிஜ ஹீரோ இளையராஜாதான் சாய்ந்து சாய்ந்து பாட்டின்போது நமக்கும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. என்னோடு வா வா பாடலின் போது நமக்கும் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தான் என்றைக்கும் இளையராஜா தான் என்பதை நிரூபித்திருக்கிறார் இசைஞானி.
ஜீவா ஓகே முடியை கொஞ்சம் கட பண்ணி முறைப்பாக இருந்தால் சின்ன பையன் மாதிரி இருப்பாய் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை. வெளிநாடு செல்லும் காதலியிடம் அந்த ஊருல எனக்கு ஒரு பிரண்ட் இருக்கா. அவளை சீக்கிரம் வரச் சொல்லு. நான் காத்திக்கிட்டிருக்கேன்னு சொல்லு. என்று வசனம் பேசும்போது ரசிக்க வைக்கிறார். டைம் கிடைக்கும் போது எல்லாம் கிஸ் அடித்து விட்டு திடீரென நல்ல பிள்ளையாக படிக்க போவது எல்லாம் பூவுல காது.
வசனம் பல இடங்களில் கவிதை. பளிச்சென்று ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிறார் சமந்தா. பள்ளிக்கூடப் பெண். கல்லூரி மாணவி,. பள்ளிக்கூடத்தை நடத்தும் பெண்மணி, என்று ஒவ்வொன்றுக்கும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்திருப்பது அசத்தல்.
சுடிதாருங்க கழட்டி விட்ட பின்னாடி தானேடா உனக்கெல்லாம் பேண்ட் ஷர்ட் போட்டவனையே தெரியும்? சந்தானத்தின் வழக்கமான (ப)பிஞ்ச் டயலாக்குகள்.
சொந்தக்கார பெண்ணை தாலி கட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தவிக்க விட்டு ஓடிப்போய் ஹீரோ காதலியை தேடிப்போவது செமை செயற்கை.
கொஞ்சம் ஜிவ்வு. மீதி ஜவ்வு.
நன்றி: குமுதம்