Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மன்னாரு

மன்னாரு,Mannaru
16 செப், 2012 - 16:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மன்னாரு

  

தினமலர் விமர்சனம்



"அழகர்சாமியின் குதிரை" அப்புக்குட்டி கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் அடுத்தபடம் தான் "மன்னாரு". காமெடி நடிகர் மீது கனமான பாத்திரத்தை திணித்திருக்கும் மற்றுமொரு படம்! தன் பாத்திரம் எத்தனை கனமென்றாலும் அதை அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக தூக்கி சுமந்திருக்கும் அப்புக்குட்டிக்கு தாரளமாக ஒரு "ஹேட்ஸ் ஆப்" சொல்லலாம்!!

சோறு கண்ட இடமே சொர்க்கம்., பீரு... கண்ட இடமே ஊரு... என்று லாரி கிளினிராக ஊர் ஊராய் சுற்றும் அப்புக்குட்டி, ஒரு இக்கட்டான சூழலில் நண்பனின் அழகிய காதலி கம் புது மனைவியுடன் சொந்த ஊருக்கு அருகே உள்ள கொடைக்காணல் போகவேண்டி நிலை! அங்கு எக்கு தப்பாக ஊராரின் கண்களில் சிக்கும் இவர்கள் மன்னாரின் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு எல்லோரும் இவர்களை புருஷன்-பொண்டாட்டியாக முடிவு செய்து பஞ்சாயத்து பண்ண ஊர்காரர்களிடம் மன்னாருக்கும் தன் நண்பரின் ‌மனைவி இவரென்று நாயகி சுவாதியை அடையாளம் காட்ட முடியாத நிலை... சுவாதிக்கும் தான் இன்னார்... என்று சொல்ல முடியாத நிலை! இதனால் மனமுடைந்து போகும் மன்னாரின் மாமன் மகள் மல்லிகா எனும் வைஷாலி படும்பாட்டில் இருந்து மீண்டாரா என்பதும், சுவாதியின் காதல் கணவன், சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ., மகனிடம் சிக்கி படும்பாட்டிலிருந்து தப்பி வந்தாரா...? மன்னாருக்கும் - மல்லிகாவுக்கும் திருமணம் நடந்ததா...? என்பதும் தான் "மன்னாரு" படத்தின் உருக்கமும் கிறக்கமுமான மீதிக்கதை!

"மன்னாரு"-வாக அப்புக்குட்டி தான் ‌காமெடியன் மட்டுமல்ல, கலைப்பட நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நண்பனின் காதலி கம் மனைவியாக வந்து மன்னாருவின் மனைவியாக நம்பப்படும் ராட்டினம் சுவாதி, மாமன்மகள் மல்லிகாவாக வரும் வைஷாலி இருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். தம்பி ராமையா, சிஸர் மனோகர், மன்னாருவின் முரட்டு அப்பாவாக தவசி உள்ளிட்டவர்களும் சபாஷ் சொல்ல வைக்கின்றனர். நிஷாவின் குத்தாட்டமும் படத்தின் பெரும்பலம்!

தம்பி ராமையாவின் வசனம், அகு அஜ்மலின் ஒளிப்பதிவு, உதயனின் இசை உள்ளிட்டவைகளும் மன்னாருவின் பலம்! அப்புக்குட்டியும், சுவாதியும் தாங்கள் கணவன் - மனைவி அல்ல... இப்படி ஒரு இக்கட்டான சூழல் என்பதை ஊர் பஞ்சாயத்தின் மூன் சொல்வதில் என்ன தயக்கம் என்பதை இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர் இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தார் என்றால் "மன்னாரு" - மனதில் "நின்னாரு" என்று "நச்" என்று இருந்திருக்கும் ! - அவ்வாறு இல்லாதது "மன்னாரு - நின்னாரு" என்ற அளவிலேயே இருக்கிறது!!


----------------------------------------------


குமுதம் விமர்சனம்



தேசிய விருது வாங்கிய இருவர் சேர்ந்து நடித்திருக்கும் படம்!

சிக்ஸ் பேக்ஸ் என்று தமிழ் சினிமாவே “ஜிம்’மிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் சிக்ஸ்டி பேக்குடன்... அதாங்க மலையளவு தொப்பையுடன், அதுவும் முதல் காட்சியிலேயே குலுங்கும் தொந்தியுடன் தோன்றும் துணிச்சல், இந்திய, உலக, பிரபஞ்சத்திலேயே அப்புக்குட்டியைத் தவிர யாருக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான்!

வித்தியாசமான கதை. ரகசியத் திருமணம் செய்து கொள்ளும் ஒருவனைப் பெண் வீட்டார் துரத்த, தன் நண்பன் அப்புக்குட்டியுடன் புது மனைவி ஸ்வாதியை பஸ் ஏற்றி அனுப்புகிறான் மாப்பிள்ளை. பஸ் கொடைக்கானல் வந்து சேர, அப்புக்குட்டியும், ஸ்வாதியும், கணவன் - மனைவி என்று சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அதைக் கேள்விப்பட்டு அப்புக்குட்டியின் அத்தைப் பெண் தற்கொலை முயற்சி செய்கிறாள். பஸ் ஏற்றிவிட்ட மாப்பிள்ளையை அதற்குப் பிறகு காணவே இல்லை. அப்புக்குட்டி என்ன செய்தான்? அந்த மாப்பிள்ளை திரும்பி வந்தானா? அத்தைப் பெண் பிழைத்தாளா என்பதை நகைச்சுவையுடன், மண் வாசனையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர்.

வரிக்கி போட்டால் ஒரு நாய் கூடத் தின்னாத மரியாதை உள்ள மன்னாரு, ஷகீலா போஸ்டரைப் பார்த்தால் குதிரை போல் இளிக்கும் அப்பாவித்தனம், யாரோ ஒரு நண்பனுக்கு திடீரென்று சாட்சிக் கையெழுத்துப் போட்டதால் வாழ்க்கையே திசை மாறும்போது ஏற்படும் தவிப்பு, அவரவர்கள் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போக, தான் மட்டும் தனித்த விடப்பட்டதாய் பொங்கும் எரிச்சல் என்று சரியாகச் செய்திருக்கிறார் அப்புக்குட்டி.

கதாநாயகி பொம்மை போல் வந்து போகிறார். எல்லாவற்றுக்கும் காரணம் கதாநாயகனின் அப்பாதான் என்று பொங்கும்போது மட்டும் சாவி கொடுத்த பொம்மை!

பார்க்க சுமாராக இருந்தாலும் அந்த முறைப்பெண் வைஷாலி, கொள்ளை கொள்கிறாள். கிணற்றில் விழுந்து சாக முயற்சிப்பதும், குடம் நசுங்கியது பார்த்து பம்முவதும், இப்படி ஊர்ல இருக்கிற ஒரே கிணத்துல சாகிற வேலையெல்லாம் வேணாம், அதுக்கு வேற வழி பாருங்க என்று ஊர்ப் பெரியவர் சொல்வதும் ரசனை.

ஒரு பாட்டு மட்டும் ஓகே!

மரியாதையே இல்லாத ஊர்த்தலைவர் பாத்திரத்தை தம்பி ராமைய்யா அசால்ட்டாகச் செய்திருக்கிறார்.

மன்னாரு - ராமராஜன் டைப் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு மட்டும்!

ஆஹா - கதை, அப்புக்குட்டி, வைஷாலி

ச்சே - மற்ற எல்லாம்தான்.

குமுதம் ரேட்டிங் - சுமார்



வாசகர் கருத்து (2)

anna - madurai,இந்தியா
05 அக், 2012 - 03:40 Report Abuse
 anna ஐயா புண்ணியவான்களே படம் எடுங்க வேண்டாம் என்று சொல்லல...ஆனா படம் எடுக்கிறதாக சொல்லி, பார்க்கிற எங்களை கொள்ளாதீர்கள்..........
Rate this:
logu - dubai,இந்தியா
22 செப், 2012 - 22:34 Report Abuse
 logu GREAT THALAIVA
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in