தினமலர் விமர்சனம் » உதயன்
தினமலர் விமர்சனம்
"வம்சம்" படத்தில் அறிமுகமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி, கமர்ஷியலாக காலடி எடுத்து வைத்துள்ள 2வது படம்தான் "உதயன்". 2வது படத்திலேயே இரட்டை வேடம் ஏற்றிருக்கும் அருள்நிதிக்கு மொரம்பவே துணிச்சல் தான்!
கதைப்படி அராஜகப்பேர்வழியான அப்பா மாதிரி ஒரு அருள்நிதி பெரியதாதா. அவரது தம்பியான மற்றொரு அருள்நிதி அப்படியே அப்பாவுக்கும், அவருக்கும் ஆப்போசிட்டான சாது! மூத்த அருள்நிதி தனது மூர்க்கத்தனத்தால், வில்லன் கோஷ்டியிடம் சிக்கி சின்னாபின்னமாக, தனது தம்பியின் மடியில் மூச்சை விட, இதைகண்டு தம்பி அருள்நிதி, தாதாயிசத்தில் குதித்து, அப்பா, அண்ணன் வழியில் ஜெயித்தாரா...? அல்லது தனது அகிம்சை வழியில் அப்பாவையும் திருத்தி வில்லனையும் விரட்டி, ஆசைக்காதலியுடன் வாழ்ந்தாரா...? என்பது "உதயன்" படத்தின் வித்யாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
அண்ணன்-தம்பியாக டூயல் ரோலில் அள்நிதி நன்றாகவே நடித்திருக்கிறார். அவருக்கு சப்போர்ட்டாக சந்தானம் வழக்கம் போலவே தன் டபுள் மீனிங் காமெடியில் கலக்கி இருக்கிறார். புதுமுக நாயகிகள் இருவரும் டபுள் ஓ.கே., மணிகாந்த் கத்ரியின் இசையும், எஸ்.டி.விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், புதியவர் சாப்ளினின் இயக்கத்திற்கும், எழுத்திற்கும் உறுதுணையாக இருந்து "உதயன்" படத்தை உயர்த்தி பிடித்திருக்கின்றன.
மொத்தத்தில் "உதயன்", "ஓ.கே.தான்!" "ஓஹோ தான்!!"
-------------------------------------------
உதயன்
தொண்ணூறுகளின் இறுதியில் இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் வந்திருக்க வேண்டிய படம். மேலும், அப்போது வந்த படங்களில் சாயலிலே இப்போது வந்திருக்கும் "திருஷ்டிப்பொட்டு படம் உதயன்.
ஹீரோ அருள்நிதி. நடிப்புன்னா என்னானு கேட்கிறார். இவர் ஒரு பக்கம் நடித்தால், நடிப்பு ஒரு பக்கம் போகுது. ஃபைட், பாட்டு எல்லாவற்றுக்கும் ஒரே எக்ஸ்பிரஷன். கலைந்த தலையோடு, வாயில் பீடா குதப்பியபடி வந்தால் ரவுடி அண்ணன். சிரிக்கிற மாதிரி வந்தால் வங்கியில் ஒர்க் பண்ணும் தம்பி என்று பார்வையாளர்களே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அருள்நிதி நடிப்பில் எந்த வித்தியாசமும் காட்டவில்லை; காட்டவும் தெரியவில்லை.
ப்ரணிதா, மலையாள வரவு. கதையைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம். கண்களாலே காட்சிகளை சமாளித்து விடுகிறார். வழக்கம்போல சந்தானம் காமெடியில் பவுண்ட்ரி சிக்ஸர். தியேட்டர் முழுக்க சிரிப்பலையில் சில்லிடுகிறது. மற்றபடி முதல் பாதியில் ஜிவ்வுன்னு கண்ணைக் கட்ட இரண்டாம் பாதியில் மயக்கம் வந்துவிடுகிறது. போதாததற்கு இடையிடையே பாட்டு வேறு. மனுஷன் எவ்ளோ கஷ்டத்தைத் தான் தாங்கறது! நடனம் ஆடறேன்னு அருள்நிதி அவர் பங்குக்கு காமெடி பண்ணறார். இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை எதுவுமே மனசுக்குள் உட்கார மறுக்கிறது. "அருள்நிதி, இன்னும் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு என்பதை எல்லோருக்கும் தெரிவித்திருக்கும் படம் இது.
உதயன் - உட்டாலக்கடி கிரிகிரி...
நன்றி கல்கி