தினமலர் விமர்சனம் » வர்மம்
தினமலர் விமர்சனம்
தங்கையை கற்பழித்து, அவரது சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் பாசக்கார அண்ணனின் கதைதான் "வர்மம்". இந்த காவு வாங்கும் மோதல் கதையுடன் ஒரு அழகிய காதல் கதையையும் கலந்து கட்டி சினிமா தர்மத்தையும் தாங்கி வந்திருப்பதுதான் வர்மத்தின் ப்ளஸ் பாயிண்ட்!
புதுமுகம் என்றாலும் புதுமுகம் அறிமுகம் எனும் அளவில் இல்லாமல் ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என அத்தனையிலும் ஆழம் தெரிந்தோ, தெரியாமலோ காலை வைத்து இறங்கி அப்படி, இப்படி பாஸ் செய்துவிடுகிறார் ஹீரோ அகிலன்!
ஹீரோயின் அனகாவும் புதுமுகம்தான் ஆஹா-ஓஹோ என்றில்லை.. ஆனாலும் அனகாவும், ஆக்ஷன் படங்களில் நாயகியருக்கு என்ன பங்கோ அதை அழகாய் வந்து பூர்த்தி செய்து போகிறார்.
நிழல்கள்ரவி, மீரா கிருஷ்ணன், பாலாசிங், ரிஷா, புவனா, நீலகண்டன், மோகன்குமார் என இன்னும் பலரும் இய்குநர் சொன்னதை செய்து சபாஷ் வாங்கி விடுகின்றனர். ஆனால் கிரேன் மனோகர், சிஸர் மனோகர், முத்துக்காளை, ஸ்ரீராட்டாசூரி என அரைடஜன் காமெடியன்கள் இருந்தும் சிரிப்பு மட்டும் வராதது குறை!
மீராலால் இசையில் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும்பலம். அதேபோன்று டபில்யூ பால்கிரகோரியின் ஒளிப்பதிவும் "வர்மம்" படத்தை கர்மமே கண்ணாக காத்திருக்கிறது.
ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன் எழுத்து இயக்கத்தில் ஹீரோவின் அப்பா நிழல்கள்ரவியும், மீராகிருஷ்ணனும் சொல்லும் ப்ளாஷ்பேக்கில் இருக்கும் கவிநயமும், கலைநயமும் படம் முழுக்க இருந்திருந்தால் "வர்மம்" மேலும் வசீகரித்திருக்கும்! ஆனாலும், "வர்மம்" அதர்மம் செய்பவர்களுக்கு போதிக்கிறது "தர்மம்!"
மொத்தத்தில் "வர்மம் - தர்மம்"