தினமலர் திரைவிமர்சனம்
தனியார் கல்வி கொள்ளையர்களுக்கு சரியான சவுக்கடி தந்து வெளிவந்திருக்கும் தரமான படம்தான் “உடும்பன் கல்வி கொள்ளை - சவுக்கடி, என்றதும் ஏதோ கனத்த விஷயங்கள் பலத்த சர்ச்சைகளைப் பற்றி மட்டுமே பேசி பொழுதுபோக்கிற்கு பொல்லாங்கு செய்து விடும்படம் போல... என்று யாரும் கருதிவிட வேண்டாம். காமெடியாக கலக்கலாக கல்வி கொள்ளையர்களை கட்டம் கட்டியிருக்கும் படம் தான் “உடும்பன்’ என்பது கவனிக்கத்தக்கது!
கதைப்படி, கதாநாயகன் திலீப் ரோசர் உடும்பின் உதவியுடனும், கன்னக்கோல் போட்டும் திருடும் பலே திருடன், பரம்பரை திருடன்! ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டிற்கு திருட போகும் அவனுக்கு திருட்டை விட லாபம் தரும் தொழில், கல்வி வியாபாரம்தான் என்பது புரிகிறது. அதன் விளைவு லாபநோக்கில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறான். பள்ளிக்கூடம் சின்னஅளவில் பக்காவாக செயல்படத் தொடங்கும் தருணத்தில் ஒரு திருட்டு வழக்கிற்காக ஹீரோ சிறைசெல்ல வேண்டிய நிலை. இத்தருணத்தில் கொலை வழக்குகளுக்காக ஜெயிலுக்கும் போய் திரும்பும் ஹீரோவின் அண்ணன் காளை எனும் சுனில் தம்பியின் பள்ளிக்கூடத்தை பார்த்துக் கொள்ள சம்மதிக்கிறார். தம்பி உடும்பன் சிறையில் இருந்து திபரும்பும்போது அண்ணனின் பள்ளிக்கூடமாகிவிடும். அந்த ஸ்கூல் கணஜோராக வளர்ந்து நிற்கிறது! அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அண்ணன் காளையை எதுவும் செய்யாமல் இருக்கும் உடும்பன், ஒரு கட்டத்தில் கதாநாயகி சனாவுடன் இணைந்து அநியாய வசூல்வேட்டை செய்யும் அண்ணனை எதிர்க்க துணிகிறார். அதன்பிறகு ஜெயித்தது மாணவர்களுக்காக போராடும் தம்பியா? மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் அண்ணனா என்பது கிளைமாக்ஸ்! இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கலர்ஃபுல்லாகவும் இயக்க முடியுமோ, அத்தனைக்கு அத்தனை அழகாக எடுத்து இயக்கியிருகிறார் எஸ். பாலன். “பலே’ பாலன்!
உடும்பனாக பைக்ரேஸர் திலீப்ரோசர் உடும்பும் கையும் கயிறுமாக மிரட்டி இருக்கிறார் என்றால் அவரது அண்ணன் வில்லன் காளையாக வரும் சுனிலும் கண்களாலேயும், கண்களை கட்டிக் கொண்டும் வாளும் வீச்சுமாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.
தனியார் கல்வி பற்றி ஆய்வு செய்யும் பி.ஹெச்டி மாணவி “கம்’ காளையின் ஸ்கூல் டீச்சராக கதாநாயகி சனா இசைப்பிரியா கேரக்டரில் நம்பிக்கைக்குரியவராக “நச்’சென்று நடித்திருக்கிறார். உடும்பனின் நண்பனாக வரும் புதுமுகம், உடும்பனுக்கு நிச்சயித்த பெண்ணாக சேலை திருடியாக வரும் கீர்த்திகா இன்ஸ்பெக்டர் குற்றாலமாக செல்லக்குறி, அம்மா கம்பம் மீனா எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!
இயக்குநர் எஸ். பாலனின் இசையில் பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்வரிகள் இந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தும் ர(ரா)கம்! கிச்சாஸின் ஒளிப்பதிவில் இருட்டும், திருட்டும் கூட இதமாக தெரிவது படத்தின் பெரிய ப்ளஸ்! வி.டி. விஜயனின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு!!
சற்றே இழுவையாக இருக்கும் “உடும்பனி’ன் பின்பாதி கதை காட்சியமைப்புகள் மட்டுமே
நெருடல்! ஆனாலும் “உடும்பன்’ உயர்வானவன்!!