விமர்சனம்
அர்ஜூன் வழக்கம்போலவே ஆடுகிறார், பாடுகிறார், ஆக்ஷனில் தூள் பறத்துகிறார். அடிக்கடி கதாநாயகி ஹரிப்ரியா உள்ளிட்டவர்களை விட்டு உங்க ஆர்ம்ஸூம், மூக்கும் முழியும் அழகோ அழகென்று புகழ்பாட விடுகிறார். ஆனால் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் அர்ஜூனுக்கு வயசாகி போனது சீன் பை சீன் தெரிவதை தவிர்க்க தவறி இருப்பது வேதனை. அதேமாதிரி அடிக்கடி மாறுவேடத்தில் வரும் அர்ஜூனை ரசிகர்களுக்கு அடையாளம் தெரிவதும், எதிராளிகளுக்கு தெரியாததும் காமெடி!!
புதுமுகம் ஹரிப்ரியா அர்ஜூனுக்கு ஈடுகொடுத்து ஆடிப்பாடி ரசிகர்களை தன் கவர்ச்சியால் கவிழ்க்கிறார். சுரேஷ், ஆஷிஷ் வித்யார்த்தி, கஞ்சா கருப்பு, லதா, வின்சென்ட் அசோகன், சத்யன், லிவிங்ஸ்டன், பிரேம், ஓ.ஏ.கே. சுந்தர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தும் சிரிப்பும், சிறப்பும் வர மறுக்கிறது.
வல்லக்கோட்டை என முருகன் தள பெயரையும், வேல் கம்பையும் டைட்டில் ஆக்கிவிட்டு, படம் முழுக்க அர்ஜூனை வாயுபுத்ரன் என்று கூறி ஆஞ்சநேயர் பாடலை பாட விடுவது கோட்டையா... குறட்டையா? என்பதை டைரக்டர் ஏ.வெங்கடேஷ்தான் சொல்ல வேண்டும்.
தினாவின் இசை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும், அர்ஜூனின் மாறுவேடங்களில் விட்ட கோட்டை, காமெடி எனும் பெயரில் கஞ்சா கருப்பும், சத்யனும் விடும் குரட்டை உள்ளிட்டவைகளால் வல்லக்கோட்டை வல்லிய கோட்டை (விட்டிருக்கின்றனர்) என்றே தெரிகிறது.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!