நிழற்குடை,Nizharkudai
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : தர்ஷன் பிலிம்ஸ்
இயக்கம் : சிவ ஆறுமுகம்
நடிகர்கள் : தேவயானி, விஜித், கண்மணி, ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா, தர்ஷன் சிவா,பேபி அஹானா, பேபி நிஹாரிக்கா
வெளியான தேதி : 09.05.2025
நேரம் : 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதைக்களம்
இலங்கைத் தமிழரான தேவயானி அங்கு நடந்த போரில் தனது மூன்று வயது குழந்தை மற்றும் குடும்பத்தினரை பறிகொடுத்து அகதியாக இந்தியா வந்து சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொருபுறம் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் விஜித் - கண்மணி தம்பதி அந்த காப்பகத்திற்கு தன் குழந்தையின் பிறந்த நாளுக்காக வருகின்றனர். தங்களின் குழந்தையை கவனித்துக் கொள்ள சரியான ஆள் தேடிக் கொண்டிருக்கும் அவர்கள் தேவயானியை பார்த்து தங்கள் குழந்தையை கவனிக்க வீட்டிற்கு வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.

எப்படியாவது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வரும் விஜித் தம்பதிக்கு அமெரிக்கா செல்ல அழைப்பு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் தேவயானியின் பாசத்தில் வளரும் அந்த குழந்தை, அவருடனே இருக்க நினைக்கிறது. குழந்தையை பிரிய போகிறோமோ என்ற ஏக்கம் தேவயானி மனதை வதைக்கிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கா செல்லும் முன் தங்களுடைய நண்பர்களுக்கு விஜித் தம்பதி பார்ட்டி கொடுக்கின்றனர். அந்த விருந்தில் திடீரென குழந்தை காணாமல் போகிறது. உடனே போலீசில் புகார் கொடுக்கின்றனர். போலீசார் பலரை விசாரித்துவிட்டு தேவயானி இடமும் விசாரணை நடத்துகின்றனர். உண்மையில் குழந்தையை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? விஜித் தம்பதி அமெரிக்கா சென்றார்களா? இந்த பிரச்சனையிலிருந்து தேவயானி எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த காலத்தில் பெரும்பாலானோர் பணம், கார், பங்களா, சொகுசு வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். அதோடு பெற்ற குழந்தையை பார்த்துக் கொள்ளக் கூட நேரமில்லாமல் பணத்தின் பின்னால் ஓடுகின்றனர். இதனால் தங்கள் குழந்தையை ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர். அந்த குழந்தை வளர்ந்து வந்து பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க விரும்புகின்றனர். இந்த மையக்கருவை கதையாக வைத்து தேவயானி மூலம் எமோஷன் கலந்து நிழலின் அருமை வெயிலில் இருக்கும்போதுதான் தெரியும் என்பது போல இந்த நிழற்குடை படத்தை இயக்குனர் சிவ ஆறுமுகம் தந்துள்ளார். கதை தேர்வு சரியாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் பெரிதும் ரசிக்க முடியவில்லை. இருப்பினும் இந்த காலத்துக்கு ஏற்ற கதையை சரியான நேரத்தில் கொடுத்திருக்கிறார், அதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

பல வருடங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் கம் பேக் கொடுத்துள்ள தேவயானி தனது கேரக்டரை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். அவருடைய இலங்கை தமிழ் உச்சரிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. அதோடு சின்ன சின்ன முக பாவங்களும் கவனிக்க வைக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய அம்மா கிடைத்திருக்கிறார்.

விஜித் மற்றும் கண்மணி இருவருமே ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இன்றைய தலைமுறை தம்பதியை அப்படியே திரையில் காட்டி நடித்துள்ளனர். குழந்தையை பார்த்துக் கொள்ள அவர்கள் இருவரும் போட்டா போட்டி போடும் காட்சிகளும், நாள்தோறும் உணவை ஆர்டர் மூலம் வாங்கி சாப்பிடுவதும் இன்றைய ரியாலிட்டி காட்சி. அதோடு வெளிநாட்டு மோகம் என்பது சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி ஊழியர்களின் கனவாகவே மாறி வருகிறது. அதையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அஹானா, நிஹாரிக்கா இருவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். தேவயானி உடன் அந்த குழந்தைகளின் கெமிஸ்ட்ரி பொருந்தி உள்ளது. அதேபோல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் இளவரசு, ஆபீஸ் எம்டி யாக வரும் ராஜ்கபூர், வடிவுக்கரசி ஆகியோர் கேரக்டர்கள் ரசிக்க வைக்கின்றன.

குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. நரேன் பாலகுமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார்.

பிளஸ் & மைனஸ்
சமீபகாலமாக பெருகிவரும் முதியோர் இல்லங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த கதை மூலம் விதையாக இயக்குனர் போட்டுள்ளார். இருப்பினும் அந்த பாசத்திற்கு பக்க பலமாக திரைக்கதை அமைந்திருந்தால் எமோஷன் இன்னும் அதிகமாக கனெக்ட் ஆகி இருக்கும். ஒரு சீரியல் போல ஸ்டேட்மெண்டாக காட்சிகள் இருப்பது படத்தின் பலகீனம்.

நிழற்குடை - ஒதுங்கலாம்

 

நிழற்குடை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நிழற்குடை

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓