2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கார்த்திக் வேணுகோபாலன்
இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மிரா பர்தேஷி, தியாகராஜன்
வெளியான தேதி - 24 மே 2024
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

நாட்டில் நடக்கும் சர்ச்சையான விஷயங்களை மையமாக வைத்து திரைப்படங்களை உருவாக்குவது பல காலமாகவே இருந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஒருவரது மரணம் கடும் அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதை மையமாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.

தவறு செய்பவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதுதான் இப்படத்தின் கருத்து. நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் அடுத்தவர் கஷ்டத்திலும் பங்கு கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஈரோட்டில் ஒரு பெரிய தனியார் பள்ளியில் பி.டி. ஆசிரியராக இருக்கிறார் ஆதி. அவருடைய எதிர்வீட்டில் வசிக்கும் இளவரசுவின் மகள் அனிகா சுரேந்திரன். ஒரு நாள் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால், அது தற்கொலை அல்ல, கொலை என வழக்கு தொடுக்கிறார் ஆதி. மேலும், அவர் வேலை பார்க்கும் பள்ளியின் சேர்மன் தியாகராஜன் தான் அதற்குக் காரணம் என்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. பொய் சாட்சிகளுடன் தப்பிக்க முயல்கிறார் தியாகராஜன். உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகிறார் ஆதி. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பி.டி. சார் என படத்தின் பெயரை வைத்திருப்பதால், ஒரு பள்ளியில் விளையாட்டைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தின் கதை அப்படி இல்லாமல் மாணவிக்கான பாலியல் துன்புறுத்தல், அது தொடர்பான பிரச்சனைகள் என படம் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் உணர்வுபூர்வமாகய் இருப்பதால் அவற்றை ரசிக்க முடிகிறது.

வழக்கம் போல ஒரு துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் ஆதி. எந்த பிரச்சனைக்குள்ளும் அவர் போகக் கூடாது என ஜோசியர் சொல்லியிருப்பதால் அவரை பொத்திப் பொத்தி வளர்க்கிறார் அவரது அம்மா தேவதர்ஷினி. கண் எதிரே ஏதாவது நடந்தால் கூட அதை வேடிக்கை மட்டுமே பார்ப்பவர் ஆதி. ஆனால், எதிர்வீட்டு அனிகாவிற்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்று கேள்விப்பட்டதுமே 'சாது மிரண்டால்' என அம்மா பேச்சையும் கேட்காமல் அதிரடியில் இறங்குகிறார். எப்படியாவது அனிகாவிற்கு நீதி வாங்கிக் கொடுக்க தனது வருங்கால மாமனார் பிரபுவுடன் சேர்ந்து போராடுகிறார். சீரியசான கதை என்பதால் படத்தில் ஆதியின் காமெடிக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது.

ஆதியின் காதலியாக காஷ்மிரா பர்தேஷி. ஆதி படிக்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கிறார். ஆதிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். சில பல காட்சிகளுடன் இவரது வேலை முடிந்து போகிறது. ஆதியின் எதிர்வீட்டுப் பெண்ணாக கதையின் மையக் கதாபாத்திரமாக அனிகா சுரேந்திரன். சமூக வலைத்தள கமெண்ட்டுகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறது என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம். சமீபத்தில் இப்படி நடந்த ஒரு செயல் ஒரு இளம் தாயின் தற்கொலைக்குக் காரணமாகிவிட்டது. இனியாவது, சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்பவர்கள் எல்லை மீறக் கூடாது என்பதற்கு இது ஒரு பாடம்.

கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஆக தியாகராஜன். தான் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை அமைதியான அதிரடியுடன் காட்டியிருக்கிறார். கன்னம் துடிக்க தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். ஆதியின் பெற்றோர்களாக பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி. காஷ்மிராவின் அப்பாவாக பிரபு. இவர்களை விடவும் அனிகாவின் அப்பா இளவரசுக்கு அழுத்தமான ஒரு கதாபாத்திரம். நீதிபதியாக பாக்யராஜ், அவரது வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் சினிமாத்தனமாக படமாக்கப்பட்டுள்ளன.

ஆதியின் படங்களில் இளைஞர்களைக் கவர சில பாடல்களாகவது இருக்கும். இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. பின்னணி இசைக்கு மட்டும் உணர்வுபூர்வமான சில காட்சிகள் அமைந்துள்ளன.

முழுமையான கமர்ஷியல் படமாக யோசிக்காமல் இடைவேளைக்குப் பிறகு 'கோர்ட் டிராமா'வாகப் போய்விட்டார்கள். 80களிலேயே இப்படியான கோர்ட் டிராமாக்களின் காலம் முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் எதிரிகளை போட்டுத் தள்ளும் படங்கள்தான் வந்து கொண்டிருக்கிறது. P.T. Sir -ஐ Pottu Thallum (போட்டுத் தள்ளும்) சார் ஆக மாற்றி அதிரடி ஆக்ஷனில் இறங்கியிருக்கலாமோ ?.

பி.டி. சார் - பார்ட் டைம்

 

பட குழுவினர்

பி.டி சார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓