ஆயிரம் பொற்காசுகள்,Aayiram porkaasukal
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜிஆர்எம் ஸ்டுடியோ
இயக்கம் - ரவி முருகையா
இசை - ஜோஹன்
நடிப்பு - விதார்த், சரவணன், அருந்ததி நாயர்
வெளியான தேதி - 22 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 3/5

2023ம் ஆண்டில் சில சிறிய பட்ஜெட் படங்கள் அதன் கதைப் பின்னணியிலும், கதை சொல்லப்பட்ட விதத்திலும், கதாபாத்திரங்களை உருவாக்கிய விதத்திலும், அதில் பொருத்தமான நடிகர்களின் தேர்வுகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளன. அப்படியான ஒரு படமாக வந்துள்ள படம்தான் இது.

இயக்குனர் ரவி முருகையா கிராமத்துக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் இந்தப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பல விதத்திலும் யதார்த்தமாக அமைந்து ஒரு ரசனையான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது தாய்மாமா சரவணன் வீட்டிற்கு வருகிறார் விதார்த். மத்திய அரசின் தூய்மை பாரத் இயக்கத்தின் மூலம் கிராமங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் கழிவறை கட்ட வேண்டும் என ஊர் தலைவர் சொல்கிறார். ஆனால், சரவணன் கழிவறை கட்டாமலேயே கட்டியதாகச் சொல்லி பணத்தை வாங்கிவிடுகிறார். அதைத் தெரிந்து கொண்ட ஊர் தலைவர் கழிவறை கட்டியே ஆக வேண்டும் என சரவணனிடம் கறாராகச் சொல்லிவிடுகிறார். கழிவறை கட்ட சரவணன், விதார்த் இருவரும் வீட்டில் பள்ளம் தோண்டிய போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் புதையலாகக் கிடைக்கிறது. அந்தப் புதையலை அரசாங்கத்திடம் சொல்லாமல் மறைத்து சரவணனும், விதார்த்தும் பங்கு போட்டுக் கொள்ள நினைக்கிறார்கள். அவர்கள் மறைக்க நினைத்தும் முடியாமல் அந்த ரகசியம் ஒவ்வொருத்தர் மூலமாக வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அந்த புதையல் ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்களை சரவணன், விதார்த் எப்படி சமாளிக்கிறார்கள். அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்கள் அதில் தங்களுக்கும் பங்கு கேட்டு எப்படி தொந்தரவு செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கலகலப்பு.

இயல்பான கதாபாத்திரமா, சிறிய பட்ஜெட் படமா, கூப்பிடுங்கள் விதார்த்தை என தொடர்ந்து சில நல்ல சிறிய பட்ஜெட் படங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விதார்த். கடந்த மாதம் வெளிவந்து அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்த 'குய்கோ' படத்திற்குப் பிறகு, இந்தப் படமும் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தரும். கிராமத்துக் கதைகளை எழுத நினைக்கும் பல இயக்குனர்களுக்கு இனி விதார்த் பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

'பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனித்து பெயர் வாங்கியவர் சரவணன். இந்தப் படத்தில் அவரும் படம் முழுவதும் அதே கலகலப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார். எந்த வேலைக்கும் போகாமல் அடுத்தவர் வீட்டுப் பொருட்களைத் திருடி வாழ்க்கையை ஓட்டுபவர். புதையலை சொந்தமாக்கிக் கொள்ள என்னென்னமோ செய்கிறார்.

விதார்த்தைப் பார்த்த மாத்திரத்திலேயே காதலிப்பவராக அருந்ததி நாயர். இருவரும் ஊரை விட்டு ஓட திட்டம் போட்டு அது முடியாமல் போய் திரும்பிப் போவதைக் கூட நகைச்சுவையாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஒரு படத்தில் ஓரிரு கதாபாத்திரங்களுக்குத்தான் பொதுவாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் பல கதாபாத்திரங்களுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். சரவணன் வீட்டின் எதிர் வீட்டுக்காரராக ஹலோ கந்தசாமி, பள்ளம் தோண்ட வந்தவர்களான ஜார்ஜ் மரியான், பவன் ராஜ், நகையை உருக்க உதவி செய்ய வரும் வெற்றிவேல் ராஜா, ஊர் தலைவர் கர்ண ராஜா, இன்ஸ்பெக்டர் பாரதி கண்ணன், கதாநாயகின் தோழி செம்மலர் அன்னம் என ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

கிராமத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கதாபாத்திரங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது பானுமுருகனின் கேமரா. நகைச்சுவைப் படங்களுக்குரிய இசையைக் கொடுத்திருக்கிறார் ஜோஹன்.

முழுவதுமாக நகைச்சுவையை மட்டுமே வைத்துள்ளார்கள். உணர்வுபூர்வமாக சில அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது மட்டுமே சிறிய குறை.

ஆயிரம் பொற்காசுகள் - பொன்னகையில் புன்னகை

 

பட குழுவினர்

ஆயிரம் பொற்காசுகள்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓