தினமலர் விமர்சனம்
"வீரசேகரன்", "சிந்து சமவெளி", "மைனா", என அமலாபால் நடித்து தமிழில் கால் டஜன் படங்கள் வெளிவந்திருந்தாலும் அம்மணி அமலா பால் நடித்து முடித்த முதல் தமிழ்படம் "விகடகவி" தான். பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துகளால் சற்றே தாமதமாக திரைக்கு வந்திருக்கிறது இத்திரைப்படம்.
கதைப்படி, புதுமுகம் சதீஷ், அமலாபால், பேச்சி, விருச்சிககாந்த், குண்டு பிரபு இந்த ஐந்து பேரும் அந்த ஊரில் பிறந்தது முதலே அறந்த வாலுகள்! ஐந்து பேரும் ஆளுக்கு ஒரு விதமான குணாதிசயத்துடன் வாலு தனத்தில் ஊரை உசுப்பேற்றினாலும், அமலாபால் மட்டும் பண்ணையார் மகள் என்பதால் ஊருக்கே அவள் மீது பாசம்! குழந்தை பருவத்தில் இருந்தே அவருடன் நட்பு பாராட்டும் ஹீரோ சதீஷூக்கோ அமலா மீது காதல்! சொத்துக்காக அமலாவை, தன் மகனுக்கு தான் மணம் முடிக்க வேண்டும் என அமலாவின் குடும்பத்தையே தீர்த்து கட்டிய அவரது தாய்மாமன், அமலாவை விடுவாரா? வீட்டிலேயே சிறை வைக்கிறார். தாய்மாமனை ஹீரோ சதீஷ் எவ்வாறு தன் ஞாபகமரதி தோழி, ஸ்லோமோஷன் தோழன், அதிரடி குண்டன் ஆகியோர் உதவியுடன் வென்று காதலியை மீட்டு கரம்பிடிக்கிறார் என்பதுதான் "விகடகவி" கதையின் மொத்தமும்.
புதுமுகம் சதீஷ், ஹேண்ட்ஸ்மாய் வந்து கிராமத்து இளைஞனாய் நடிக்க முற்பட்டிருக்கிறார். பேஷ், பேஷ் இல்லை என்றாலும் வேஸ்ட்டுன்னு சொல்ல முடியாது. அமலாபால் வசதியான கிராமத்து பெண் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஞாபகமறதி பேச்சி, ஸ்லோமோஷன் விருச்சிககாந்த், அதிரடி குண்டு பிரபு உள்ளிட்டோரின் சிறு வயது, நடுவயது, இளம்வயது பருவங்களும் அவர்கள் செய்யும் சேட்டைகளும்தான் படத்தின் பலம்.
பின்னணி இசையில் இருக்கும் பிரமாதத்தை, இசையமைப்பாளர் தரண், பாடல்கள் இசையிலும் காண்பித்திருந்தால் "விகடகவி" மேலும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆனந்தின் ஒளிப்பதிவு பலவீனம் என்றாலும், ஜி.கிருஷ்ணனின் இயக்கத்தல் "விகடகவி" "வித்தியாசமான மூவி!" வெற்றிமூவியா? என்பது ரசிகர்கள் கையில்!