நடுவன்,Naduvan
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கியூ என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ஷாரங்
இசை - தரண்குமார்
நடிப்பு - பரத் நிவாஸ், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த்
வெளியான தேதி - 24 செப்டம்பர் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

ஓடிடியில் வெளிவருவதற்காகவே எடுத்திருக்கிறார்களோ என்று சொல்லுமளவிற்கு சில படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. இந்த நடுவன் படத்தைப் பார்க்கும் போதும் அந்த எண்ணமே வருகிறது. தியேட்டர்களில் வந்தால் இந்தப் படங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்குமா என்பது சந்தேகம் தான், ஆனால், ஓடிடியில் பார்க்க பெரிய சிக்கலில்லாத ஒரு படம்.

கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து டீ தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். பரத் தான் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறார். கோகுல் ஆனந்த் கம்பெனியிலேயே குடிக்கும் ஒரு முழு நேர குடிகாரர். பரத்திற்கு அழகான ஒரு மனைவி, அன்பான ஒரு பெண் குழந்தை. நண்பன் பரத் மனைவி அபர்ணாவினோத்தும், கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். அந்த விவகாரத்தை பரத் வீட்டிற்கு வந்து தங்கி அவரது கம்பெனியிலேயே வேலை பார்க்கும் உறவுக்கார இளைஞர் அருவி பாலா, பார்த்துவிடுகிறார். அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார். பரத்திடம் விசுவாசமாக இருக்கும், பாலா கள்ளக் காதல் விவகாரத்தை பரத்திடம் சொன்னாரா, அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் தடுமாற்றத்துடன் மிக மிக மெதுவாக நகர்கிறது. சில காட்சிகளைப் பார்ப்பதற்கு சீரியல் போலவே உள்ளது. அபர்ணா, கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் படத்தில் சற்றே வேகம் கூடுகிறது. அதன் பிறகு கதை எங்கெங்கோ போகிறது. படத்தின் கதாநாயகன் பரத்தைச் சுற்றித்தான் திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். ஆனால், கோகுல், பாலா ஆகியோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களைச் சுற்றியும் அதிகமான காட்சிகள் நகர்கிறது. ஒரு ஆந்தாலஜி போல திரைக்கதையை சில பிரிவுகளாகப் பிரித்து அதற்கு ஒரு தலைப்பு கொடுத்து நகர்த்தியிருக்கிறார்கள். ஒரு பரபரப்பான த்ரில்லராகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஷாரங்.

டீ கம்பெனி முதலாளியாக பரத் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். எப்போதோ ஒரு முறை திக்கிப் பேசும் கதாபாத்திரத்தை ஏன் அவருக்கு வடிவமைத்தார் இயக்குனர் எனத் தெரியவில்லை. கம்பெனியே கதி என இருக்கிறார் பரத். அதனால், மனைவியின் கள்ளக் காதல் பற்றிக் கூட அவருக்குத் தெரியவில்லை. அவ்வளவு அப்பாவியான கதாபாத்திரம் அவருக்கு.

முழு நேர குடிகாரர், புகை பிடிப்பவர், கள்ளக் காதலர் என ஒட்டு மொத்த கெட்டவன் ஏரியாவை சரியாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார் கோகுல் ஆனந்த். தமிழ் சினிமாவில் உள்ள இளம் வில்லன்கள் பஞ்சத்தை இவரால் தீர்க்க முடியும்.

பரத்தின் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக அபர்ணா வினோத். அதிகமான குளோசப் காட்சிகள் கூட இவருக்கு இல்லை. அதனால், நம் மனதில் அவரது கதாபாத்திரம் சரியாகப் பதியவில்லை. ஆனால், கோகுல் ஆனந்த் மனதில் பதிந்துவிடுகிறார். பரத்தை விட்டு கோகுல் உடன் பழகுவதற்கு எந்த ஒரு காரணத்தையும் சரியாகச் சொல்லவில்லை, ஒரு வசனத்தில் சொல்லிவிட்டார்கள்.

பரத் வீட்டிற்கு வந்து தங்கியிருந்து அவரது கம்பெனியிலேயே வேலை செய்யும் இளைஞராக அருவி பாலா. கம்பெனியில் உள்ள சில நண்பர்களுடன் சேர்ந்து செய்யக் கூடாத விஷயங்களைச் செய்கிறார். கூடா நட்பு கேடில் முடியும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் சிறந்த உதாரணம். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் இப்படியான நண்பர்களிடம் சிக்கி, குடி, புகை என தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். இதை நாம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, படத்தில் ஒரு வசனத்திலாவது சேர்த்திருக்கலாம்.

இந்த மாதிரியான எமோஷனல் த்ரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்க வேண்டும். அதை செய்யத் தவறியிருக்கிறார் இசையமைப்பாளர் தரண் குமார். கொடைக்கானல்தான் கதைக்களம் என்றாலும் பரத் வீடு, கம்பெனி ஆகியவற்றில்தான் கதை அதிகம் நகர்கிறது. அதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா.

பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உடன் இருக்கும் மனைவியும், கூடவே வரும் நண்பனும், உதவி செய்ய அழைத்து வந்த உறவும் இப்படித்தான் இருக்கிறது. படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் முகமூடி மனிதர்கள்தான். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

நடுவன் - பொய் மனிதர்கள்

 

நடுவன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நடுவன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓