தினமலர் விமர்சனம்
பிதாமகன், நான் கடவுள் ஸ்டைலில் இருக்குமென நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் வீரசேகரன்!
சுடுகாட்டில் தொடங்கி சுடுகாட்டிலேயே முடியும் வீரசேகரன் கதையை விலாவரியாக சொல்வதென்றால்., கதாநாயகனாக காதல், வெயில் படங்களின் கலை இயக்குனர் வீரசமர் முதன்முறையாக நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படம்! அழுகை, ஆத்திரம், பொறுப்பு, விறுப்பு, வெறுப்பு என முதல் படத்திலேயே மனிதர் நிறைய ரெளத்திரம் காட்டி நடித்து இருக்கிறார் பேஷ்... பேஷ்! ஆனாலும் பூ படத்தில் கதாநாயகியின் கணவராக, கிராமத்து மளிகைக்கடைகாரராக இவர் பொருந்திய அளவிற்கு, வீரசேகரனாக, கதாநாயகனாக இவர் இப்படத்தில் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பது வருத்தம்!
கதாநாயகியாக புதுமுகம் அமலா பால். எதிர்பாலினரை கவரும் தோற்றம். எதிர்பார்ப்பை கூட்டும் அளவிற்கு நடித்திருக்கிறார். இந்த ஜோடி தவிர வில்லனாக பிரதாப் போத்தன், எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், 'பூ' ராமு, ஜோதி, ஆர்த்தி, ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே பேர் சொல்லும் அளவிற்கு நடித்திருக்கிறது.
நாக்அவுட் நந்தாவின் சண்டைப்பயிற்சி, வீரசமரின் கலை இயக்கம், சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பு, மாதவ்வின் (இவர், பிரபல மலையாள பட இசையமைப்பாள் ரவீந்திரனின் மகனாம்...) இசை, எஸ்.வி.எழில் செல்வனின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் புதியவர் நவி.சதிசு குமாரின் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஆனாலும் சதிசுகுமாரின் கதை, திரைக்கதை, வசனத்தில் இருக்கும் தெளிவு, காட்சிப்படுத்தலிலும், இயக்கத்திலும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
வீரசேகரன் : ஆர்ட் டைரக்டர் வீரசமரின் 'வீரதீர' திரை விஜயம்!
ஆமாம் கதை?! அதான் சொன்னோமே...! எண்ணற்ற சுடுகாட்டுப் பாடல்களுடன் சுடுகாட்டில் சுடுகாட்டிலேயே முடிய வேண்டும் என முடிந்திருக்கும் படம் என்று...! கதைப்படி ஊரில் பருவம் அடைந்து பல ஆண்டுகளாகியும் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் இரண்டு அக்காக்கள்... அவர்களை வைத்துக் கொண்டு தடுமாறும் வயதான அப்பா, அம்மா... என இத்தனை கமிட்மென்ட்களுடன் ஹீரோ வீரசமர், சிட்டிக்கு வருகிறார்...! வேலை பார்க்க வரவில்லை... கல்லூரி படிக்க வருகிறார். பிள்ளை படிக்கத்தான் போயிருக்கிறான் என்பது புரியாமல்அடிக்கடி பணம் கேட்கிறது மொத்த குடும்பமும். இதனால் தனக்கு நெருக்கமாகும் ஆளுங்கட்சி அமைச்சருக்கு மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அடியாள் வேலைபார்க்கும் ஹீரோ, லட்ச லட்சமாக சம்பாதித்து மொத்த குடும்பத்தையும் கரை சேர்க்கிறார். அமைச்சரின் அட்டூழியங்கள் அதிகரித்து, அரசியல் ஆதாயத்துக்காகவும், அனுதாபத்திற்காகவும் அவரது மகனையே (கவனிக்கவும் அமைச்சரின் மகன் ஹீரோவின் உயிர் நண்பர்...) போட்டுத் தள்ள உத்தரவிடும்போது, வெகுண்டெழும் ஹீரோ என்ன செய்கிறார்? என்பதுதான் வீரசேகரனின் வித்தியாசமும்(?) விறுவிறுப்புமான(!) மீதிக்கதை! அதுவும் வேண்டுமா?