விமர்சனம்
நடிப்பு - கரிகாலன், ரிஷா, நளினிகாந்த்
தயாரிப்பு - கேஎல் புரொடக்ஷன்
இயக்கம் - வைகறை பாலன்
இசை - முத்தமிழ்
வெளியான தேதி - 25 டிசம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடங்கள்
ரேட்டிங் - 3.25/5
தமிழ் சினிமாவில் எப்போதோ ஒரு முறைதான் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவரும். அப்படிப்பட்ட படங்களில் நம் மண் சார்ந்த கதைக்களம் இருந்தால் அது இன்னும் ஆச்சரியம் தான். அப்படிப்பட்ட ஒரு ஆச்சரியத்தை அச்சு அசலாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வைகறை பாலன்.
வயதான பெற்றோர்களை ஒரு சிலர் சரியாக கவனிப்பதில்லை. அவர்களுக்குத் தேவையானவற்றை சரிவரச் செய்வதில்லை. வயது முதிர்ந்த காலங்களில் தங்கள் மீது யாராவது பாசம் செலுத்த மாட்டார்களா, அன்பாக இருக்க மாட்டார்களா என ஏங்கித்தவிப்பார்கள். அப்படி தங்கள் குடும்பத்திலிருந்து எந்தவிதமான பாசமும் கிடைக்காத வயதான நண்பர்கள் சிலரது இயல்பான வாழ்க்கையை நெகிழ்ச்சியான ஒரு படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர்.
தேனிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் 60 வயதைக் கடந்த ஏழு பேர் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். கிராமத்தில் இளம்தாரிகள் அடிக்கும் லூட்டிகளை இந்த பெருசுகள் அடிக்கும் லூட்டிகள்தான் அதிகம். அவரவர் குடும்பத்தில் தங்களது பிள்ளைகளால் அடிக்கடி அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் மருமகள் கையால் அடிவாங்கிய அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார். இன்னொருவரை அவரது மகன்களே சொத்துக்கு ஆசைப்பட்டு மருந்து கொடுத்து கொலை செய்துவிடுகிறார்கள். மீதமுள்ள ஐந்து நண்பர்கள் எஞ்சியிருக்கும் காலத்தில் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வாழ ஆசைப்படுகிறார்கள். அது நிறைவேறியதா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதாநாயகர்களே அந்தப் பெரியவர்கள் தான். அவர்களில் நமக்குத் தெரிந்த முகமாக 80களின் வில்லன் நடிகர்களில் ஒருவரான நளினிகாந்த் தான் இருக்கிறார். இருந்தாலும் அந்த வயதான நண்பர்கள் அனைவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதைவிட அவரவர் கதாபாத்திரங்களில் அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். கிராமத்தை விட்டு பிழைப்புக்காக மாநகரம் பக்கம் வந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர் தங்கள் கடைசி காலத்தை இப்படி வாழ்ந்த சொந்த கிராமத்தில் ஆசை தீர வாழ வேண்டும் என்ற ஏக்கத்தை இந்தப் படம் நிச்சயம் ஏற்படுத்தும்.
முதியோர்களைப் பற்றிய ஒரு கதையில் ஒரு அழகான காதலையும் இயல்பாக நுழைத்திருக்கிறார்கள். ஊருக்கே டாக்டர் போல வைத்தியம் பார்க்கும் கரிகாலன். முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சி எடுத்திருக்கிறார். அவரது காதலியாக ரிஷா. கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத ஒரு முகம். முயற்சித்தால் தமிழ் சினிமாவில் ஒரு இயல்பாக கதாநாயகியாகப் பெயரெடுக்கலாம். இந்த காதலுக்கு ஒரு வில்லன் வேண்டுமே, அதற்காக சரவண ராஜேந்திரன். இவரும் ஊருக்கு டாக்டர் போலவே இருக்கிறார், ஆனால், ஊசி போட்டு கொல்லும் டாக்டர்.
மற்ற கதாபாத்திரங்களில் வந்து போகும் பலரும் நடிகர்கள் மாதிரியே தெரியவில்லை. படப்பிடிப்பு நடந்த ஊரிலுள்ளவர்களையே நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் 70 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்களாம்.
முத்தமிழ் பின்னிணி இசை, பாபுகுமார் ஒளிப்பதிவு, ரவீஸ் அரங்க அமைப்பு, கதிரவன் ஆடை வடிவமைப்பு இந்த எளிய படத்திற்கு இயக்குனருக்கு சரியான விதத்தில் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.
பல கோடிகளில் எடுக்கப்படும் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் இம்மாதிரியான சிறிய, அதே சமயம் நல்ல கருத்துள்ள படங்களையும் பார்த்தால் மட்டுமே சினிமாவும் வாழும். ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருந்தாலும் அவை கடந்து போகும் விதத்தில்தான் உள்ளன.
படத்தை முடித்திருக்கும் விதமும் நெகிழ்வு. முதியோர்களை அனைவருமே போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெற்றவர்களால் கைவிடப்பட்டாலும் அவர்களைக் காக்க ஒரு தனி அமைப்பு எனச் சொல்லும் இயக்குனரின் எண்ண ஓட்டத்திற்கு எழுந்து நின்று கைதட்டலாம்.
சியான்கள் - மரியாதை
பட குழுவினர்
சியான்கள்
- இயக்குனர்