விமர்சனம்
நடிப்பு - ராஜு, சுகுமார் சண்முகம், ஜெயலட்சுமி
தயாரிப்பு - ரெக்லஸ் ரோசஸ்
இயக்கம் - பிரிய கிருஷ்ணசாமி
இசை - வேத் நாயர்
வெளியான தேதி - 21 பிப்ரவரி 2020
நேரம் - 1 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
2018ம் ஆண்டிற்கான 66வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற படம் இது. படத்தைப் பார்க்கும் போது ஒரு முழுநீளத் திரைப்படமாக இல்லாமல் ஒரு டாகுமென்டரி படம் பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது.
அழுத்தமான கதையோ, திரைக்கதையோ, சினிமா இலக்கணத்திற்குள் அடங்கிய கேமரா கோணங்களோ இல்லாமல் இருக்கும் ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்பது ஆச்சரியம் தான்.
ஒரு காலத்தில் தமிழ்நாடன் தென்பகுதி மாவட்டங்களில் வழக்கத்தில் இருந்த தலைக்கூத்தல் என்ற விஷயத்தை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் வழக்கொழிந்து எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்போதும் அது போல நடப்பதாகக் காட்டியிருப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
சமீபத்தில்தான் இந்த தலைக்கூத்தல் விஷயத்தை வைத்து கே.டி என்கிற கருப்புதுரை படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தின் பெயரை கருப்பசாமி என வைத்திருக்கிறார்கள்.
கருப்பசாமி என்பவர் மகனின் ஆதரவு இல்லாமதல் தன் தங்கை வீட்டினரின் ஆதரவுடன் இருப்பவர். வயதானாலும் செக்யூரிட்டி வேலை செய்கிறார். ஒரு நாள் விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிந்து படுத்த படுக்கை ஆகிறார். டாக்டர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்கிறார். ஆனால், அவரது மகன் அதற்கு வசதியில்லை எனக் கூறி அப்பாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று நாட்டு வைத்தியம் செய்து கொள்வதாகக் கூறுகிறார். இதனிடையே, அப்பாவை கருணை கொலை செய்ய சிலர் வந்து சொல்ல அதன்படியே செய்கிறார் மகன். விஷயமறிந்த கருப்பசாமியின் தங்கை குடும்பத்தினர் அதை மீடியாவிற்குக் கொண்டு செல்கின்றனர். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்தான். அனைவரையும் முடிந்தவரை இயல்பாக நடிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி.
கருப்பசாமியின் தங்கையாக நடித்திருக்கும் ஜெயலட்சுமி, அவரது மகன்களாக நடித்திருக்கும் பிரேம்நாத், சுகுமார் சண்முகம் இவர்கள் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
கருப்பசாமி விபத்தில் சிக்கி சாலையில் விழுந்த பின் உடனடியாக 108க்கு போன் செய்யாமல் அவரை ஒரு வீட்டின் முன் சில மணி நேரம் படுக்க வைக்கிறார்கள். இந்தக் காலத்தில் இப்படி கூட செய்வார்களா என்பது உள்ளிட்ட சில கேள்விகள் படத்தில் இருக்கின்றன.
தலைக்கூத்தல் என்பது பற்றித்தான் படம் வெளிப்படுத்த நினைக்கிறது. ஆனால், கருப்பசாமிக்கு அப்படி செய்யாமல் விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள்.
சரி, தலைக்கூத்தல் செய்வது கொடும் குற்றம், மன்னிக்க முடியாதது என்று சொல்லி படத்தில் கருப்பசாமியைக் கொன்றவர்களைத் தண்டனைக்குள்ளாக்கினால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், சாதி பிரச்சினை, தேர்தல் வருகிறது எனச் சொல்லி சட்டத்தின் ஓட்டைகளை வைத்து படத்தை முடித்திருப்பது சரியா என கேள்வி கேட்க வைக்கிறது.
வேத் நாயர் பின்னணி இசை அமைத்திருக்கிறார். திடீரென அமைதி, திடீரென இசை என ஒரு நேர்த்தி இல்லை. ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் கேமராக கையில் வைத்துக் கொண்டே படத்தை எடுத்திருப்பார் போலிருக்கிறது.
நம் நாடு முழுவதும் பழைய சம்பிரதாயங்கள் பல இருந்தன. ஆனால், அவையெல்லாம் காலப் போக்கில் போய்விட்டன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து இப்போதும் நடப்பது போல காட்டுவது உலகத்தின் முன் நம்முடைய கலாச்சாரத்தை குறைத்து மதிப்பிட வைக்கும் ஒன்றாகவே இருக்கும்.
பாரம் - கேள்விக்குரிய பாசம்
பாரம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பாரம்
- இயக்குனர்