பஞ்சராக்ஷரம்
விமர்சனம்
நடிப்பு - சந்தோஷ் பிரதாப், கோகுல், அஷ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்தாப்
தயாரிப்பு - பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பாலாஜி வைரமுத்து
இசை - சுந்தரமூர்த்தி கே.எஸ்
வெளியான தேதி - 27 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம்
ரேட்டிங் - 3/5
படத்தின் தலைப்பே ஆன்மீகமாக அமைந்து ஏதோ சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சில இயக்குனர்கள் மட்டும்தான் வழக்கமான சினிமாவிலிருந்து விலகி புதிதாக ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும என முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக தன்னை அறிமுகப்படுத்துக் கொள்கிறார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி வைரமுத்து.
இந்தப் படம் ஒரு வித்தியாசமான சூப்பர் நேச்சுரல் அட்வெஞ்சரஸ் சைக்காலஜிகல் த்ரில்லர் என படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியேதான் படமும் அதன் கதையும் அமைந்திருக்கிறது.
ஒரு இசை நிகழ்வில் சந்தோஷ் பிரதாப், கோகுல், அஷ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்தாப் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே நண்பர்கள் ஆகிறார்கள். டிராவலரான சந்தோஷ் பிரதாப் அனுபவத்தைக் கேட்டு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஒரு இடத்தில் தங்கும் போது, அவர்கள் ஒரு பழங்கால புத்தகத்தைத் தேர்வு செய்து ஏதோ ஒரு பக்கத்தைப் படிக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் புத்தகத்தில் படித்தபடியே அவர்களது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கிறது. இதனிடையே, சனா திடீரென காணாமல் போகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் அவர்கள் சனாவைத் தேட ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்து படித்து அதன்படி நடக்க முடிவெடுக்கிறார்கள். தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்தப் படத்தில் திரைக்கதை அமைப்பிற்கு ஒரு புது யுக்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். பேன்டஸியான கதையும் கூட என்பதால் அது அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. இப்படித்தான் திரைக்கதை வேண்டும் என்று முடிவு செய்து அதை எழுதிவிட்டு, அந்த புத்தகத்தில் இப்படித்தான் எழுதியிருக்கிறது என்று சொல்லி குறைகள் இருந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், ஒரு பரபரப்பிற்காக என்ன செய் வேண்டுமோ அதைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.
ஐந்து விதமான வேலை செய்பவர்கள் ஒன்றாக சந்தித்து நண்பர்களாகிறார்கள். புல்லட்டிலேயே இலக்கில்லாமல் பயணம் செய்பவராக சந்தோஷ் பிரதாப். இசைக்குழு நடத்தி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் கோகுல். கார் ரேஸராக வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அஷ்வின் ஜெரோம். பத்திரிகை வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராக வேண்டும் என நினைக்கும் மதுஷாலினி. சமூக சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சனா அல்தாப். ஒவ்வொவருவரும் அவரவர் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக சீமான், இந்த சீமான் வேறு ஒருவர். கட்டு மஸ்தான உடம்பில் முரட்டுத்தனமான வில்லத்தனத்தை வெளியிடலாம். பலசாலியை எதிர்க்க வேண்டும் என நினைக்கும் ஹீரோக்கள் இவரை தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க வைக்கலாம்.
படத்தை ஒன்றை ரசிக்க வைப்பதற்கு ஒளிப்பதிவாளர் யுவா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். காமிரா ஆங்கிள், லைட்டிங் என படத்தில் முடிந்த அளவு வித்தியாசத்தைக் காட்டியிருப்பதில் அவருடைய பங்கு அதிகம். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியும் பின்னணி இசையில் பரபரப்பூட்டி இருக்கிறார்.
படத்தில் நமக்கு அதிகம் தெரிந்த முகமாக யாரும் இல்லை என்பதுதான் படத்தின் ஒரே குறை. இருந்தாலும் இம்மாதிரியான படங்களில் கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்தால் கூட பொருத்தமாகத்தான் இருக்கும். மாறாக ஒரு சில படங்களில் நடித்த வளரும் நடிகர்களைப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இடைவேளை வரை இருக்கும் ஒரு பரபரப்பு, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் குறைகிறது. எப்படியும் புத்தகம் காட்டும் வழியில் அவர்கள் நினைத்த இலக்கை அடைந்து விடுவார்கள் என நாம் யூகிக்க முடிவது சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.
பஞ்சராக்ஷரம் - பரபரப்புடன்
பட குழுவினர்
பஞ்சராக்ஷரம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்