நடிப்பு - வசி, பூஜாஸ்ரீ, சீமான் மற்றும் பலர்
தயாரிப்பு - ஆசிப் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - விஜயானந்த் - சூரியன்
இசை - ஸ்ரீகாந்த்தேவா
வெளியான தேதி - 8 நவம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
விவசாயத்தின் பெருமையைப் பற்றிச் சொல்லி வந்திருக்கும் மற்றுமொரு படம். ஆனால், விவசாயிகளின் பிரச்சினையை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு, அதைச் சுற்றி ஒரு காதல், பழி வாங்கல் என கதை மேல் கதை வைத்து இழுத்துக் கொண்டே செல்கிறார்கள்.
தான் வேலை பார்க்கும் சீட்டு கம்பெனி முதலாளி மகள் திருமணத்திற்காக அன்னை வயல் என்ற கிராமத்திற்குச் செல்கிறார் கதாநாயகி பூஜா ஸ்ரீ. அங்கு திருமணத்தை நடத்தி வைக்கும் ஏஜென்சி வேலை பார்க்கும் வசி தான் படத்தின் கதாநாயகன். சிறு வயதில் தான் பிறந்து வளர்ந்து ஓடித் திறந்த கிராமம் அது என்பதால்தான் பூஜாஸ்ரீ அங்கு செல்கிறார். அவருடன் சிறு வயதில் ஒன்றாக ஓடிப் பிடித்து விளையாடிய தோழன்தான் நாயகன் வசி என்பதைத் தெரிந்ததும் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். ஊரில் நடக்கும் ஒரு கொலைக்கு சாட்சி சொல்ல முன் வருகிறார் பூஜாஸ்ரீ. அதனால், அந்தக் கொலையைச் செய்த வில்லன் பூஜாவைக் கொல்லத் துடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இதுதான் படத்தின் மெயின் கதை. அதில் வசிக்கும், பூஜாஸ்ரீக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அந்த பிளாஷ் பேக்கில் வசி அப்பாவாக சீமான். ஊரில் இருக்கும் விவசாய நிலங்களைக் காப்பாற்றத் துடிக்கும் வாத்தியார். அதனால் நடக்கும் மோதலில் சீமான் கொல்லப்படுகிறார். ஆனால், நிலங்களைக் காப்பாற்ற உதவி செய்த சிறு வயது பூஜாஸ்ரீயை எப்போதும் காப்பாற்ற வேண்டும் என சீமான் சத்தியம் செய்ய அதை இப்போதும் செய்து முடிக்கத் துடிக்கிறார் வசி என இடைவேளைக்குப் பின்னும் கதை வேறு விதமாக நீ....ள்கிறது.
அறிமுக நாயகன் வசி, அறிமுக நாயகி பூஜா ஸ்ரீ இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாகவே இருக்கிறார்கள். முடிந்தவரையில் இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். அதில் கதாநாயகன் வசியை ஓவர் டேக் செய்கிறார் பூஜாஸ்ரீ. அழகாகவும் இருக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரலாம்.
படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான விஜய் ஆனந்த் மெயின் வில்லனாகவும், மற்றொருவரான சூரியன், புலிகேசி என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். தாங்களும் படத்தில் அதிகம் இருக்க வேண்டும் என அவர்களுக்கான காட்சிகளை அதிகமாகவே வைத்துக் கொண்டுள்ளார்கள்.
படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் பட்டியலில் உள்ளவர்கள் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். நகைச்சுவையையாவது சிரிக்கும்படி வைத்திருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். படத்தில் அடிக்கடி பாடல்கள் வருகின்றன. அதில் ஒன்றிரண்டாவது ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.
சீமான் வரும் பிளாஷ்பேக் காட்சிகள், விவசாயப் பிரச்சினைகள் என அவற்றை நிறைவாக செய்திருக்கிறார்கள். அது போலவே மொத்த படத்தையும் கொடுத்திருந்தால் முழு படத்தையும் ரசித்திருக்கலாம்.
தவம் - தவறும்...