3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - பிரதீப் ரங்கநாதன்
இசை - ஹிப்ஹாப் தமிழா
வெளியான தேதி - 15 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் மருத்துவத்தை மையமாக வைத்து வரும் படங்கள் மிகவும் குறைவு. மருத்துவம் என்றாலும் அதை மனநலம் சம்பந்தப்பட்டதாகத்தான் பல படங்களில் கதையாக அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 16 வருடங்கள் கோமாவில் இருந்து எழுந்து வந்த ஒருவருக்கு நடக்கும் விஷயங்களைப் படத்தின் கதையாக வைத்திருக்கிறார்கள். ஆனாலும், அதை சீரியசான கதைக்குள் வைக்காமல் படம் முழுவதும் கலகலப்பான காட்சிகளுடன் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ரசிகர்களுக்கு எதைக் கொடுத்தால் பிடிக்கும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். குறிப்பாக தியேட்டருக்கு அதிகமாகப் படம் பார்க்க வரும் 90ஸ் கிட்ஸுகளைக் கவர அதிகமாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் அனைத்து வயதினருக்குமான படமாகத்தான் இருக்கிறது.

ஜெயம் ரவி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது உடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டேவிடம் காதலைச் சொல்லும் போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார். 16 வருடங்கள் கழித்து கண் விழிக்கிறார். நெருங்கிய நண்பனாக இருந்த யோகி பாபு, ஜெயம் ரவி தங்கையைத் திருமணம் செய்து கொண்டு மச்சானாக மாறியிருக்கிறார். அதோடு அத்தனை வருடங்களாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால், குடும்பம் கடனில் சிக்கித் தவிக்கிறது.

ஒரு வாரத்திற்குள் கடனை அடைக்க வங்கிக்காரர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். குடும்பத்துக்கு சொந்தமான சில கோடி மதிப்புடைய குடும்பத்து பரம்பரை சிலை பற்றி ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. ஆனால், அது எம்எல்ஏ கேஎஸ் ரவிக்குமாரிடம் இருக்கிறது. அதைத் திருடி குடும்பத்து கடனை அடைக்க முடிவெடுக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

16 வருடங்கள் கோமாவில் இருந்த நாயகன் என்றதும் அதை மையமாக வைத்தே கலகலப்பான காட்சிகளை படம் முழுவதும் வைத்திருப்பார்கள் என நினைத்தால் அதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். இடைவேளை வரை யோகிபாபுவின் தயவில் படம் கலகலப்பாக நகர்கிறது. அதன்பின் பரம்பரை சிலை, கடன் என வேறு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. 16 வருட இடைவேளி ஒரு மனிதனுக்கு எப்படி புதிதாக இருக்கிறது என்பதை ஒரு பாடலிலும், சில காட்சிகளிலும் மட்டும் காட்டிவிட்டு கடந்து போகிறார் இயக்குனர்.

குடும்பத்து கதாபாத்திரங்களுக்குள் அப்படியே பிட் ஆகி விடுகிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த துறுதுறுப்பை அப்படி கொண்டு வந்திருக்கிறார். 16 வருடங்களாக கோமாவில் இருந்த வந்த பின் கம்ப்யூட்டர், மொபைல் போன், ஊர் எப்படி மாறிப் போய்விட்டது என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். டெக்னாலஜி மாறினாலும் நம்மிடம் எமோஷன் மட்டும் மாறவில்லை என்பதை கிளைமாக்சுக்கு முன்பாக பக்கம் பக்கமாக வசனம் பேசி கொஞ்சம் யோசிக்க வைக்கிறார்.

ஜெயம் ரவியின் பள்ளிக் காதலியாக பிளாஷ்பேக்கில் சம்யுக்தா ஹெக்டே. வேறு ஒருவருடன் திருமணம் நடந்த பின்னரும் ஜெயம் ரவி மீது காதலுடன் தான் இருக்கிறார். இடைவேளைக்கு முன்பாகத்தான் வருகிறார் காஜல் அகர்வால். அவரும் கதாநாயகிதான் என்பதை சொல்லாமல் சொல்லி ஜெயம் ரவியுடன் ஒரு டூயட்டை வைத்திருக்கிறார்கள். இரண்டு கதாநாயகிகள் என்றாலும் இருவருக்குமே படத்தில் அதிக வேலையில்லை.

படத்தின் இரண்டாவது கதாநாயகனாக யோகி பாபு. படம் முழுவதும் ஜெயம் ரவியுடனே வருகிறார். எங்கெங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார். நீ என் பிரண்டுடா அதுக்காகத்தான் உனக்கு பண்ணன்டா எனச் சொல்லும் போது கண் கலங்கவும் வைக்கிறார்.

வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார். சாதாரண ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறி எம்எல்ஏவாக இருப்பவர். பெரிய வில்லத்தனம் எல்லாம் செய்யாமல் இரண்டொரு காட்சிகளே என்றாலும் நடிப்பில் ரவுடித்தனம் காட்டுகிறார்.

ஹிப்ஹாப் தமிழாவின் அதே நான்கு டியூன், வெவ்வேறு வார்த்தைகளில் இந்தப் படத்திலும் ஒலிக்கிறது. அந்த நான்கு டியூனில் உருவான நான்கு பாடல்களையும் அவரே பாடியிருப்பார் போலிருக்கிறது. எப்போதுதான் மாற்றிக் கொள்ளப் போகிறாரோ.

யு சர்டிபிகேட் படத்தில் ஆரம்பத்தில் டீக்கடையில் அந்தப் பெண்மணியின் இடுப்பை அப்படி காட்டுவதற்கு ஏ சர்டிபிகேட்டே கொடுத்திருக்கலாம். குழந்தைகளும் ஜெயம் ரவி படத்தைப் பார்ப்பார்கள் என்பதை இயக்குனர் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது ஜெயம் ரவியாவது கவனித்து அந்தக் காட்சியை வேறு விதமாக மாற்றச் சொல்லியிருக்கலாம்.

டிரைலரில் இடம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்த் பற்றிய அரசியல் வசனத்தை மாற்றிவிட்டார்கள். ஆனாலும், அந்த ரஜினிகாந்த்தின் அரசியல் என்ட்ரி காட்சி ஏற்படுத்திய தாக்கதை மாற்றப்பட்ட காட்சி நிகழ்த்தவில்லை.

இடைவேளைக்குப் பின் திரைக்கதை சிலை, கடன், மனிதம் தள்ளாட ஆரம்பிக்கிறது. முதல் படத்திலேயே தான் சொல்ல ஆசைப்படும் அட்வைஸ்களை அள்ளித் தெளிக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். ஆனாலும், ஒரு இரண்டரை மணி நேரம் போனது தெரியவில்லை.

கோமாளி - ஏமாற்றவில்லை....

 

பட குழுவினர்

கோமாளி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமர்சனம் ↓