நடிகர்கள் : மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், ஜான் விஜய், இந்திரஜித், சாய்குமார், பாசில், கலாபவன் சாஜன், பாலா மற்றும் பிரித்விராஜ்
இசை : தீபக் தேவ்
ஒளிப்பதிவு : சுஜித் வாசுதேவ்
கதை : முரளிகோபி
டைரக்சன் : பிரித்விராஜ்
மாநில முதல்வரின் மறைவிற்குப் பின் அவரது மருமகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் யுத்தம் தான் இந்த லூசிபர் படத்தின் கதை.
முதல்வர் மறைந்தபின் இன்னும் ஒரு வருட காலம் பதவி இருக்கும் நிலையில் அடுத்ததாக சீனியாரிட்டியில் இருக்கும் சாய்குமார் முதல்வராக நினைக்கிறார்.. ஆனால் முதல்வரின் மருமகன் விவேக் ஓபராய் கட்சியை நடத்த நிதி வேண்டும் என்பதற்காக மும்பையைச் சேர்ந்தவர்கள் உடன் கூட்டணி அமைக்கிறார். அதற்கு பிராயசித்தமாக கேரளாவில் போதைப்பொருள் உள்ளே நுழைய வழிவகை செய்து கொடுக்கிறார். தனது கைப்பாவையாக இருக்க வேண்டும் என தனது மனைவி மஞ்சு வாரியர் சம்மதத்துடன் முதல்வரின் மகன் டொவினோ தாமஸை அடுத்த முதல்வராக அறிவிக்கிறார் விவேக் ஓபராய்.
இதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஒரே நபர் என முதல்வரின் வளர்ப்பு மகனாக அறியப்படுகின்ற, அரசியலை விட்டு ஒதுங்கி நின்று அனாதை ஆசிரமம் நடத்திவரும் மோகன்லாலையும் வளைக்க நினைக்கின்றார் விவேக் ஓபராய். ஆனால் அதற்கு இணங்க மறுக்கின்ற மோகன்லால், போதை பொருட்களை கேரளாவுக்குள் கொண்டுவர திட்டமிடும் விவேக் ஓபராயின் திட்டத்தையும் முறியடிப்பேன் என்கிறார்.
இதனால் மோகன்லால் மீது வீண்பழி சுமத்தி அவரை சிறையில் தள்ளுகிறார் விவேக் ஓபராய். இதற்கிடையே தனது மனைவி மஞ்சுவாரியரின் முதல் கணவரின் மகளுக்கு போதைப்பொருளை அவ்வப்போது வழங்கி, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தும் வருகிறார். ஒரு கட்டத்தில் இது மஞ்சுவாரியருக்கு தெரியவர, விவேக் ஓபராயை கண்டிப்பதுடன் நீண்டகாலமாக தான் எதிரியாக நினைத்து வந்த மோகன்லாலிடமே உதவி கேட்க செல்கிறார்.. மோகன்லால் தன் மீதுள்ள பழியை துடைத்து சிறையிலிருந்து வெளியே வந்தாரா, விவேக் ஓபராயின் சதித்திட்டங்களை முறியடித்தாரா என்பது மீதிக்கதை
நடிகர் பிரித்விராஜ் ஒரு இயக்குனராக மாறியுள்ளதுடன் தனது முதல் படத்தை அக்மார்க் அரசியல் படமாக இயக்கியுள்ளார். அதேசமயம், இது அவரது முதல் படம் என தெரியாத வகையில் மேக்கிங்கில் பிரம்மாண்டம் காட்டி வியப்பூட்டியுள்ளார்.
ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்து என்ட்ரி கொடுத்தாலும் மோகன்லாலின் அறிமுகமே அமர்க்களமாக ஆரம்பிக்கிறது. மிக நிதானமான வேகத்துடன் எந்த பரபரப்பும் இல்லாமல் எதிரிகளை எதிர்கொள்ளும் மோகன்லாலின் லாவகம் ரொம்பவே புதுசு. அதேசமயம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள இரண்டு சண்டைக்காட்சிகளும் மெர்சல் ரகம். குறிப்பாக மோகன்லால் பற்றிய சஸ்பென்ஸ் உடையும் இடம் செம மாஸ்.
மோகன்லாலை தாண்டி படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அனைவருக்குமே சம முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரித்விராஜ். குறிப்பாக மோகன்லாலுக்கு சமமான வில்லன் கதாபாத்திரமாக விவேக் ஓபராய் கேரக்டர் ரொம்பவே ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுதும் தனது எதார்த்தமான நடிப்பால் அந்த கேரக்டரை வெகு சிறப்பாக பிரதிபலித்துள்ளார் விவேக் ஓபராய்.
அரசியல்வாதியின் மகளாக, இரண்டாவது கணவனை மணந்துகொண்ட ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சராசரி சங்கடங்களை சந்திக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியர் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். அவரது தம்பியாக வரும் டொவினோ தாமஸ் முதல்வரின் வாரிசாக தான் பொறுப்பேற்கும் காட்சியிலும், விவேக் ஓபராயிடம் தில்லாக பதிலளிக்கும் காட்சியிலும் செம அப்ளாஸ் பெறுகிறார்.
போலீஸ் அதிகாரியாக எப்போதும் தமிழில் பேசும் ஜான்விஜய் வாய்ப்பு கிடைக்கும்போது மோகன்லால் மீது கைவைக்கும்போதும் முதல்வர் குடும்பத்திற்குள்ளேயே அத்துமீற முயற்சிக்கும்போதும் ஒரு குள்ளநரி தனமான போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். ஒரே ஒரு காட்சியில் அடியாளாக வந்து அய்யோ பாவம் என்று சொல்ல வைக்கிறார் நடிகர் பாலா. இவர்கள் தவிர படம் நெடுகிலும் வரும் சில கதாபாத்திரங்கள் படத்தை நன்கு தாங்கிப் பிடிக்கின்றனர்.
தீபக் தேவின் பின்னணி இசை தேவையான இடங்களில் அமைதியாகவும், அதிரடியாகவும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கில் கூடும் துணை நடிகர்களின் கூட்டத்தை அப்படியே தனது கேமராவில் அழகாக கட்டுப்படுத்தியிருக்கிறது.
முதல் படத்திலேயே வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் என அனைத்திலுமே கவனம் செலுத்தியுள்ளார் இயக்குனர் பிரித்விராஜ். அதற்கு முரளிகோபியின் தெளிவான நீரோட்டம் போன்ற கதை அழகாக கைகொடுத்திருக்கிறது. மோகன்லால் ரசிகர்களை எங்கெங்கே உற்சாகப்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் தானும் ஒரு ரசிகனாக மாறி அந்த வேலையை செவ்வனே செய்துள்ளார் பிரித்விராஜ். அதனால் தியேட்டரில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கைதட்டல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்ல இந்த படத்தில் தனக்கும் ஒரு கேரக்டரை உருவாக்கி மோகன்லாலுடன் தன்னை அழகாக இணைத்துக்கொண்ட விதத்திலும் சபாஷ் சொல்ல வைத்துள்ளார் பிரித்விராஜ்.
மொத்தத்தில் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்லாது, மொத்த மலையாள ரசிகர்களையும் தனது முதல் படத்திலேயே அறிமுக இயக்குனராக திருப்திப்படுத்தி விட்டார் பிரித்விராஜ்.