தினமலர் விமர்சனம் » ஒளியும் ஒலியும்
தினமலர் விமர்சனம்
இந்தியா சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முந்தைய கதை! சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தியர்கள் இவ்வளவு சுதந்திரமாக (குறிப்பாக பெண் மோகத்துடன்) இருந்தார்களா? என கேட்கத் தூண்டும் கதையும் கூட!
கதாநாயகி அஸ்வதி. அவரது அம்மா மாதிரியே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகுதான் கல்யாணம் எனும் முடிவில் இருக்கிறார். அவரது அர்த்த புஷ்டியானஅந்த முடிவிற்கு அப்பாவி காதலன் மோகனும் துணை நிற்கிறார்! ஆனால் நாயகியின் தாயின் "அதுமாதிரி" லட்சியத்தை தனது அற்ப சுகத்திற்காக குலைத்த அஸ்வதியின் பண்ணையார் அப்பா, மகளது சுதந்திர தாகத்தையும் தான் தேடிப்பிடித்த பெண் பித்து மாப்பிள்ளை பிரபா மூலம் தீர்த்துக் கட்ட பார்க்கிறார்.
வில்லன் பிரபா, அஸ்வதியின் பண்ணை அப்பா கூட்டணி ஜெயித்ததா? காதலன் மோகன் - காதலி அஸ்வதி ஆகியோரின் காதல் இந்திய சுதந்திரத்திற்கு பின் கல்யாணத்தில் முடிந்ததா? இல்லையா என்பது மீதிக்கதை!
இப்படி ஒரு தேச பக்தியான கதையை, எவ்வளவுக்கு எவ்வளவு தேச பக்தியுடன் சொல்ல முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபாசமாக சொல்லி அலுக்க செய்திருக்கிறார் இயக்குனர் சக்தி செல்வம்! சாரி சொல்வோம்!!
அப்பாவி கதாநாயகனாக, காதலனாக மோகன் முன்பாதியில் ஓ.கே., பின் பாதியிலும் அப்பாவியாகவே திரிவது அடப்பாவி ஆகி விடுகிறது பாவம்!
நாயகி அஸ்வதி, "அப்பாடா" என சொல்லுமளவிற்கு அம்சமாக நடித்திருக்கிறார்.
மொட்டைத் தலை வில்லன் ராமுவாக வரும் பிரபா பிரமாதம்பா! இவரது நடிப்பிற்கு "லாங் லாங் எகோ, ஹவ் லாங் எகோ..." எனும் பள்ளியறை பாடம் நடத்தும் ஒரு வசன காட்சி போதும்!
பாலம் கல்யாணசுந்தரம், அண்ணன் ஆனந்தபாபு, அண்ணி பிரகதி, வில்லன் பண்ணையார் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.
பண்ணையாரின் கையாள் சிசர் மனோகர், பன்னாரி, தேஜேஸ், துவாரக் என பழைய, புதிய காமெடியன்கள் எல்லோரும் கடிக்கிறார்கள்! தியேட்டருக்கு ஏன் வந்தாய்? எனக் கேட்டு நம்மை துரத்தி அடிக்கிறார்கள்!!
யானிதேஷின் இசை, எஸ்.ரவியின் ஒளிப்பதிவு, எம்அரசுவின் படத்தொகுப்பு இவை மூன்றும் படத்திற்கு பாதி பலம்! மீதி?
பத்து பாடல்கள், திரைக்கதை, வசனம், கதை, இயக்கம் என ஏகப்பட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கும் புதியவர் சக்தி செல்வம், குட்டி குட்டி பாடல்களில் காட்டிய கவனத்தை மற்றவற்றிலும் காட்டி இருந்தால் ஜெயித்திருப்பார்!
ஒளியும் ஒலியும் : வலியும் வஞ்சனையும்!!