நடிகர்கள் ; திலீப், மம்தா மோகன்தாஸ், பிரியா ஆனந்த், அஜூ வர்கீஸ், லேனா, ரஞ்சி பணிக்கர், சித்திக், ஹரிஷ் உத்தமன், வம்சி கிருஷ்ணா, சைஜு குறூப் மற்றும் பலர்
ஒளிப்பதிவு ; அகில் ஜார்ஜ்
இசை ; கோபிசுந்தர் மற்றும் ராகுல் ராஜ்
டைரக்சன் ; பி.உன்னிகிருஷ்ணன்
நீதிமன்றத்திற்கு முன்பாக பாலன் வக்கீல் என்பதுதான் பட தலைப்பு. தொடர்ந்து மோகன்லாலை மட்டுமே வைத்து படங்களை இயக்கிவந்த இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் முதன்முறையாக நடிகர் திலீப்பை வைத்து இயக்கியுள்ள படம் இது.
வக்கீல்களின் திறமையே அவர்கள் வாதத்திலும் பேச்சிலும் தான் உள்ளது. ஆனால், கிட்டத்தட்ட மரத்தடி வக்கீல் என்கிற அளவில் இருக்கும் திலீப்பிற்கு திக்குவாய். அதனால் அவரால் எந்த பெரிய வழக்கையும் எடுத்து நடத்த முடியாமல் தாழ்வு மனப்பான்மை காரணமாக சின்ன சின்ன வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்துகிறார்.. இந்த சமயத்தில போலீஸில் பணிபுரியும் திலீப்பின் மைத்துனர் சுராஜ் மூலமாக திலீப்பை அணுகுகிறார் பிரியா ஆனந்த். தன்னை நேர்முகத்தேர்வுக்கு வரச்சொன்ன ஒரு நிறுவனத்தின் முதலாளி பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்தார் எனக்கூறி அவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பும்படி திலீப்பிடம் கூறுகிறார்
தனது தந்தையின் பிரச்சனை ஒன்றை சமாளிக்க தேவைப்படும் பணத்திற்காக திலீப்பும் ஒப்புகொள்கிறார். ஆனால் அதை அனுப்பிய பின்னர் தான் பிரியா ஆனந்த், குற்றச்சாட்டு வைத்தது போலீஸ் டிஜிபி ரஞ்சி பணிக்கர் மீது என்பது தெரிய வருகிறது.. இதனையடுத்து திலீப்பை பிடித்து விசாரிக்கும் போலீசார் அவர் முன் மம்தா மோகன்தாஸை கொண்டுவந்து நிறுத்தி இவர் தானா உங்களை நோட்டீஸ் அனுப்பச் சொல்லி கூறியது என கேட்கிறார்கள். இந்த ஆள்மாறாட்டத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் அப்போதைக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ஆமாம் என ஒப்புக்கொள்கிறார் திலீப்.
தனது தந்தை காணாமல் போன அதிர்ச்சியில் இருக்கும் மம்தா மோகன்தாஸ், திலீப் இப்படி போய் சொன்னதில் மேலும் அதிர்ச்சியாகிறார்.. தன்னை ஏன் இந்த சிக்கலில் மாட்டிவிட்டீர்கள் என திலீப்பிடம் சண்டைக்குப் போகும் மம்தா, தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி திலீப்பிற்கு நெருக்கடி கொடுத்து அவரை விடாப்பிடியாக பின் தொடர்கிறார்.
எதற்காக பிரியா ஆனந்த் தன்னிடம் இப்படி போலியாக ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப சொல்லவேண்டும்.. அதில் ஏன் ஆள் மாறாட்டமாக மம்தா மோகன்தாஸை சிக்கவைக்க வேண்டும் என குழம்புகிறார் திலீப்.. இந்த நிலையில் மம்தா மோகன்தாஸின் தந்தை மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரியவர, அதன் பின்னணியில் மம்தா மோகன்தாஸும் தானும் போலீஸ் வலையில் சிக்க வைக்கப்பட்டிருப்பது திலீப்பிற்கு தெரியவருகிறது
இதனால் தானே நேரிடையாக களமிறங்கும் திலீப்பிற்கு இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரியவரும்போது மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகிறார். அவர்கள் யார்..? எதற்காக இவர்களை திட்டமிட்டு போலீசில் சிக்க வைத்தார்கள்..? அதன் பின்னணி என்ன..? இந்த பிரச்சனையை திலீப் எப்படி சாதுரியமாக கையாள்கிறார் என்பது மீதிக்கதை.
இருப்பதிலேயே கஷ்டமான நடிப்பு என்றால் அது திக்குவாய் கேரக்டரில் நடிப்பது தான்.. அதிலும் ஒரு படம் முழுவதும் நடிப்பதென்றால் கேட்கவே வேண்டாம்.. ஆனால் காட்சிக்கு காட்சி திலீப் திக்கி திக்கி பேசுவதை பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்திற்காக மனிதர் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.. பாதி படம் முழுவதும் அப்பாவியாக தாழ்வு மனப்பான்மையில் தவிப்பதும், இடைவேளைக்கு பின்பு தனது சுயரூபத்தை காட்டுவதுமாக இரண்டு விதமான நடிப்பில் திகைக்க வைக்கிறார் நடிகர் திலீப். குறிப்பாக அந்த இன்டர்வெல் சண்டைக்காட்சி பாட்ஷா லெவல்
திலீப்புடன் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள மம்தா மோகன்தாஸை இந்த படத்தில் பார்க்கும்போது வழக்கமாக நாம் பக்கத்து வீட்டு தம்பதியை பார்க்கும் உணர்வு தான் ஏற்படுகிறது.. அந்த அளவுக்கு படு யதார்த்தமாக நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.
வில்லத்தனமான நடிப்பால் அடடே என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் பிரியா ஆனந்த். திலீப்பிற்கு எப்போதுமே பக்கபலமாக கைகொடுக்கும் காமெடியன்களான சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் அஜு வர்கீஸ் என இருவருமே இந்தப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.. இருவரும் இரண்டு விதமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் சுவாரசியப்படுத்துகின்றனர்
மகனை ஆரம்பத்தில் திட்டினாலும் பிற்பகுதியில் அவரை ஊக்குவிக்கும் தந்தையாக சித்திக் நம்மை ஈர்க்கிறார்.. போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள லேனா, ரஞ்சி பணிக்கர், வில்லன்களாக நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் வம்சி கிருஷ்ணா மற்றும் பீமன் ரகு உள்ளிட்டோரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
திலீப்பிற்கு பக்கபலமாக உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக கணேஷ் குமார் எம்.எல்.ஏவிடம் பக்குவமான நடிப்பு.. நீதிபதியாக வரும் சைஜு குறூப்பின் நடிப்பும் அவரது கேரக்டரில் ஒளிந்துள்ள சஸ்பென்ஸ் கிளைமாக்ஸில் வெளிப்படுவதும் ஆச்சரியம் தருகிறது
நகரம், மலைப்பகுதி என இரண்டுவிதமான ஏரியாக்களில் நம்மை பரபரப்பாக படத்துடன் சேர்த்து நகர்த்தி செல்கிறது அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு. அதற்கு கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் கோபிசுந்தரின் பின்னணி இசை உடன் பயணிக்கிறது.
பொதுவாகவே தனது படங்களில் டெக்னாலஜி மற்றும் திரில்லிங் அம்சங்களை அதிக அளவில் பயன்படுத்துபவர் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன். இந்தப்படத்தில் முதன்முறையாக காமெடியிலும் களமிறங்கியுள்ளதோடு தனது வழக்கமான டெக்னாலஜி உத்திகளையும் இந்த படத்தில் பயன்படுத்தி விறுவிறுப்பை கூட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு தேர்தலின்போது 570 கோடி ரூபாயுடன் ஒரு கண்டெய்னர் சிக்கி பின் அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது அல்லவா..? அந்த விவகாரத்தை பின்னணியாக வைத்து அழகாக ஒரு த்ரில்லர் கதையை பல திடுக்கிடும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி சென்றுள்ளார் பி.உன்னிகிருஷ்ணன்... குறிப்பாக படத்தில் முதல் பத்து நிமிடங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மீதிப்படம் எங்குமே போரடிக்காத விதமாக ரசிகர்களுக்கு முழு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.
மோகன்லாலுடன் இணைந்து தொடர்ந்து அவரது படங்களை இயக்கியதுபோல, இனி திலீப்புடனும் தனது வெற்றி கூட்டணியை தொடர்வதற்கு இந்த படத்தில் அச்சாரம் போட்டு உள்ளார் இயக்குனர் உன்னி கிருஷ்ணன்.