நடிப்பு - சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனு சித்தாரா, சுபிக்ஷா, யோக் ஜபி மற்றும் பலர்
தயாரிப்பு - எவிஆர் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சீயோன்
இசை - ஹரிகணேஷ்
வெளியான தேதி - 7 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2/5
தமிழ் சினிமாவில் சில படங்களின் தலைப்பே நம்மை படத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமையும். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்ததும், ஏதோ ஒரு சமூகப் பார்வையுடன் படத்தை எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க வைத்து நம்மை பெரிதாக ஏமாற்ற வைத்திருக்கிறது.
வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்ட இருவரது தொழில் போட்டிதான் இந்த பொதுநலன் கருதி. அதற்குப் பதிலாக சுயநலன் கருதி என படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
சென்னையில் வட்டிக்குப் பணம் கொடுத்து அதைக் கறாராக வசூலிப்பவர் யோக் ஜபி. அவரிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் சந்தோஷ். தன் அண்ணன் காணாமல் போக அவரைத் தேடிக் கொண்டிருப்பவர் கருணாகரன். யோக் ஜபியிடம் காதலிக்காக ஒரு ஸ்கூட்டர் வாங்க கடன் வாங்கி அவஸ்தைப்படுபவர் அருண் ஆதித். தொழில் போட்டியாளர் யோக் ஜபியைக் கொல்லத் துடிப்பவர் பாபு ஜெயன். இவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை.
நல்ல கதைக்களம், கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டு, அதைக் குழப்பமான திரைக்கதையால் மேலும் குழப்பியிருக்கிறார் இயக்குனர் சீயோன். சொல்ல வந்த விஷயத்தை முன், பின் என வருடம், தேதி எனக் குறிப்பிட்டுச் சொல்லாமல் நேரடியாகத் தெளிவாகச் சொல்லியிருந்தால் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கும்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே காட்சிகள் துண்டு துண்டாக வருகிறது. ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாமல் போகிறது. படத்தைத் தொடர்வது சிக்கலாக இருக்கிறது.
சந்தோஷ், கருணாகரன், அருண் ஆதித் ஆகியோர் கதாநாயகர்கள் என்று சொன்னாலும், யோக் ஜபி முதன்மைக் கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறார். நாயகிகளில் அனு சித்தாராவுக்குத்தான் காட்சிகள் அதிகம். அதிலும் சில உணர்வு பூர்வமான காட்சிகள். சுபிக்ஷாவுக்குப் பெரிய வேலை இல்லை. அருணைக் காதலிப்பதுடன் அவர் வேலை முடிகிறது. பாபு ஜெயன்தான் படத்தின் வில்லன். அவரும் இடைவேளைக்குப் பின்தான் வருகிறார்.
ஒரு ராவான ஆக்ஷன் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கலாம். இப்படி திரைக்கதை அமைத்தால் அது வித்தியாசமாகப் பேசப்படும் என்று இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதுவே படத்திற்கு வினையாகவும் அமைந்துவிட்டது. அடுத்த படத்திலாவது மாற்றிக் கொண்டால் நல்லது.
பொதுநலன் கருதி - பொறுப்பின்மை