நடிகர்கள் : மம்முட்டி, வரலட்சுமி, பூனம் பஜ்வா, மஹிமா நம்பியார், உன்னி முகுந்தன், மக்பூல் சல்மான், கோகுல் சுரேஷ், முகேஷ், ஜான் கப்பலில், லேனா, கலாபவன் சாஜன் மற்றும் பலர்
இசை : தீபக் தேவ்
கதை : உதயகிருஷ்ணா
இயக்கம் : அஜய் வாசுதேவ்
ஏற்கனவே மம்முட்டியை வைத்து ராஜாதிராஜா என்கிற படத்தை இயக்கிய அஜய் வாசுதேவும், 'புலி முருகன்' ஹிட்டுக்குப்பின் கதாசிரியர் உதயகிருஷ்ணாவும் இந்தப்படத்தில் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது 'மாஸ்டர்பீஸ்'. அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளார்களா..?
திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் படிக்கும் மக்பூல் சல்மான் மற்றும் ஜான் என இரண்டு கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் அடிதடியில் இறங்குவது வாடிக்கை. இதே கல்லூரியில் படிக்கும் கோகுல் சுரேஷை, அருகில் உள்ள பெண்கள் கல்லூரியில் படிக்கும் லோக்கல் அரசியல்வாதியின் மகளான மஹிமா நம்பியார் காதலிக்கிறார். மஹிமாவின் பிறந்தநாளன்று தனது காதலை சொல்ல, நள்ளிரவில் அவரை தேடிச்செல்லும் கோகுல் வழியில் போலீசிடம் சிக்கி லாக்கப்பில் வைக்கப்படுகிறார்.
ஆனால் மறுநாள் காலை மஹிமா, மகாராஜா கல்லூரிக்குள் கொல்லப்பட்டு கிடக்கிறார். கோகுல் தான் அவரை கொலைசெய்துவிட்டார் என போலீஸ் அதிகாரி உன்னிமுகுந்தன் அவரை கைதுசெய்ய, அவமானத்தால் தற்கொலை செய்துகொள்கிறார் கோகுல். இதை தொடர்ந்து அந்த வழக்கு போலீஸ் உயர் அதிகாரியான வரலட்சுமியிடம் மாற்றப்பட, இந்த இரண்டு மாணவர்கள் கேங்கில் ஒருவரான ஜானுக்கு மஹிமா கொலையில் சம்பந்தம் இருப்பதாக கூறி அவரை கைது செய்ய முயல்கிறார் வரலட்சுமி.
அந்த கல்லூரியில் அப்போதுதான் புதிதாக புரபெஷராக மாற்றல் ஆகி வந்த மம்முட்டி, கல்லூரியில் வைத்து போலீஸார் மாணவர்களை கைது செய்வதை எதிர்ப்பதோடு, ஜான் நிரபராதி என்பதை உணர்ந்து, அவரை போலீஸில் சிக்கவிடாமல் தடுக்கிறார். அத்துடன் உண்மையான கொலைகாரன் யார் என்பதையும் கோகுல் தற்கொலை செய்யவில்லை, கொல்லப்பட்டார் என்பதையும் நிரூபிக்கிறார்.
அந்த இருவரையும் கொன்ற குற்றவாளி யார், கொலைக்கான பின்னணி என்ன, இந்த விஷயத்தில் புரபெஷரான மம்முட்டி சீரியஸாக இறங்க வேண்டிய காரணம் என்ன என்பதற்கு க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது.
படத்தின் ஹீரோ மம்முட்டி என்றாலும் படம் ஆரம்பித்து சரியாக முக்கால் மணி நேரம் கழித்து தான் என்ட்ரியே கொடுக்கிறார் மம்முட்டி. அதனால் அதற்கு முந்தைய கல்லூரி காட்சிகள், போலீஸ் விசாரணை எல்லாம் சுவாரஸ்யம் குறைவாகவே நகர்கின்றன. மம்முட்டிக்கு மூன்று சண்டை காட்சிகள், கார் சேசிங் காட்சிகள் இருந்தாலும் அவரின் வயது கருதி, அவை அனைத்தும் பொத்தி பொத்தி எடுக்கப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. குறிப்பாக பின்னணி இசையால் பில்டப் ஏற்றுகிறார்கள். ஆக்சன் படம் என்றாலும் மம்முட்டியின் 'மாஸ்' இதில் ரொம்பவே மிஸ்ஸிங்.
போலீஸ் அதிகாரியாக நடிப்பில் மிடுக்கு காட்டும் வரலட்சுமி, மம்முட்டியை கெட்டவார்த்தையால் திட்டி முந்தைய படத்தில் மம்முட்டி மீதான கோபத்திற்கு பழிதீர்த்துக் கொண்டுள்ளார். கல்லூரி புரபெஷராக அவ்வப்போது வந்து செல்லும் பூனம் பஜ்வா கவர்ச்சி ஏரியாவை கவனித்துக் கொள்கிறார்.. அவ்வளவு தான் அவர் வேலை. மஹிமாவுக்கு சில காட்சிகள் தான் என்றாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம்.
போலீஸ் அதிகாரியாக புஜபல பராக்கிரமம் காட்டியுள்ள உன்னிமுகுந்தன் படத்தின் திருப்பத்திற்கு துணை நிற்கிறார். சுரேஷ்கோபியின் மகனான கோகுல் சுரேஷ் வரும் காட்சிகளில் எல்லாம் இளமைக்கால சுரேஷ்கோபியை கண்முன் நிறுத்துகிறார். அவரது முடிவுதான் பரிதாபப்பட வைக்கிறது.
மாணவர் கோஷ்டிகளான மக்பூல் சல்மான், ஜான் கப்பலில் ஆகியோரிடம் மாணவர்களுக்கே உண்டான வேகம் வெளிப்பட்டுள்ளது. 'த்ரிஷ்யம்' படத்திற்கு பிறகு இந்தப்படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார் கலாபவன் சாஜன். முகேஷ், லேனா, பாஷாணம் ஷாஜி, பிஜூகுட்டன் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்துள்ளனர்.
கடந்தமுறை மம்முட்டியை வைத்து இயக்கிய 'ராஜாதி ராஜா'வை தொடர்ந்து இயக்குனர் அஜய் வாசுதேவுக்கு ரஜினியின் 'பாட்ஷா' தாக்கம் இன்னும் குறையவில்லை என்பது இந்தப்படத்திலும் நன்றாகவே தெரிகிறது. அது பல இடங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் வெளிப்படுகிறது.
ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஜானை கைது செய்ய கல்லூரிக்குள் போலீஸ் வருவது சரி. ஆனால் வீட்டில் இருந்து வந்துசெல்லும் கோகுல் சுரேஷையும் கல்லூரிக்குள் வைத்து அத்தனை ஆர்ப்பாட்டமாக கைதுசெய்வதில் என்ன லாஜிக் இருக்கிறது. அதேபோல கல்லூரிக்குள் புகுந்த நூற்றுக்கணக்கான போலீசாரை மாணவர்கள் வெளுத்து வாங்குகிறார்கள் ஆனால் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை அடிக்கும் பத்து ரவுடிகளை கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். இப்படி இன்னும் நிறைய ஓட்டைகள் படத்தில் இருக்கின்றன.
'புலிமுருகன்' என்கிற மாஸ் ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதய கிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை.
மொத்தத்தில் 66 வயதான மம்முட்டி தனது ரூட்டை வேறுதிசையில் மாற்ற வேண்டிய சரியான தருணம் இது தான் என்பதைத்தான் இந்த 'மாஸ்டர்பீஸ்' உணர்த்தியுள்ளது.