நடிகர்கள் : இர்பான்கான், பார்வதி
இயக்கம் : தனுஜா சந்திரா
நடிகை பார்வதி, முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து, இர்பான் கான் உடன் நடித்து வெளிவந்துள்ள வித்தியாசமான காதல் படம் தான் காரிப் காரிப் சிங்கிள். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி மும்பையில், இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர் கணவனை இழந்த ஜெயா எனும் பார்வதி. ஒருநாள் ஆன்லைன் மூலமாக யோகி எனும் இர்பானின் அறிமுகம் கிடைக்கிறது. இணையதளங்களில் பார்த்தவர்கள் நேரிலும் சந்திக்கிறார்கள். இர்பான் இதற்கு முன்னர் தனக்கு 3 கேர்ள்பிரண்ட் இருந்ததாக கூற, அவர்களை பார்க்க வேண்டும் என்கிறார் ஜெயா. இர்பானும், தன் முன்னாள் காதலிகளை காண்பிக்க ஜெயாவுடன் கிளம்புகிறார். இந்த பயணத்தில் இர்பான் - பார்வதி இடையே காதல் மலர்ந்ததா... இருவரும் இல்வாழ்வில் இணைந்தார்களா... என்பது காரிப் காரிப் சிங்கிள் படத்தின் மீதிக் கதை. வித்தியாசமான காதல் கதையுடன், நகைச்சுவையும் கலந்து அருமையாக தந்திருக்கிறார் இயக்குநர் தனுஜா.
இர்பானை பற்றி சொல்லவே வேண்டாம். எப்படிப்பட்ட ரோலிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அதற்கு காரிப் காரிப் சிங்கிள் படம் விதிவிலக்கல்ல.
பாலிவுட்டில் அறிமுக நாயகியாக பார்வதியும், இர்பானுக்கு இணையாக அருமையாக நடித்திருக்கிறார். எந்த மொழியாக இருந்தாலும் தன்னால் நடிப்பில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இயக்குநர் தனுஜா சந்திரா, காரிப் காரிப் சிங்கிள் படத்தை இயக்கி உள்ளார். இதுவரை சொல்லப்படாத ஒரு வித்தியாசமான காதல் கதையை இயக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இருக்கிறார் இயக்குநர் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு துணையாக ஒளிப்பதிவும், இசையும் பலமாக அமைய, காரிப் காரிப் சிங்கிள், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
மொத்தத்தில் காரிப் காரிப் சிங்கிள் : காதலின் புது வடிவம்!