தினமலர் விமர்சனம் » உன்னை கண் தேடுதே
தினமலர் விமர்சனம்
வழக்கமான 'கைகூடா' காதல் கதைதான்! ஆனால், அதை கண் மூடாமல் பார்க்க வைக்க முயற்சித்துள்ளனர்!
கல் உடைக்கும் கலைராணியின் மகன் உதயாவிற்கு அந்த கல் குவாரியின் முதலாளி மகள் மான்யாவுடன் முதலில் முட்டல், மோதல், அதன் பின் கட்டல் (கட்டிபிடித்தல்), காதல்! பெற்றோர்கள் பெரிதாக எதிர்க்கவில்லை என்றாலும், எதிர்பாராத சூழலால் மான்யா மாற்றானுக்கு மாலையிட வேண்டிய சூழல்! இந்த விவகாரம் எதுவும் தெரியாமல் 'சிட்டி' க்கு வெறும் பெட்டி படுக்கையுடன் வந்த உதயாவோ, வேறு ஒரு தோழி செய்த உதவியால் பெரும் தொழிலதிபர் ஆகி, காதலியை தேடி ஊருக்கு போகிறார். அங்கு மான்யா மாற்றானுக்கு மாலையிட்ட செய்தி கண்டு நொந்து நூடுல்ஸ் ஆகி வீடு திரும்புகிறார். அப்புறம்? அப்புறமென்ன... ஹீரோ உதயாவை ஒன் சைடாக லவ் பண்ணும் உதவி செய்த தோழி தன் காதலை வெளிப்படுத்த, நண்பர்களும் பெரியவர்களும் பேசி முடிவெடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நாள் குறிக்கின்றனர். ஆனால் அதற்குள் மான்யா மீண்டும் உதயாவை தேடி வருகிறார். உதயா -மான்யா சந்தித்தார்களா? உதவி செய்த தோழி - உதயா திருமணம் நடந்ததா, இல்லையா? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சுவாரஸ்யமான பதிலை சொல்கிறது மீதிக்கதை!
உதயா முந்தைய படங்களை காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். மான்யாவும் ஏற்கனவே பார்த்த, பழகிய முகம்தான் என்பதால் நடிப்பில் பிடிப்பும், துடிப்பும் இருக்கிறது. உதயாவிற்கு உதவி செய்யும் தோழியாகவும் காதலியாகவும் சார்மிளா நீண்ட இடைவெளிக்குப்பின் கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
வையாபுரி, பாலாஜி, சாப்ளின்பாலு, ராம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வழக்கம் போலவே காமெடி எனும் போர்வையில் கடிக்கின்றனர். கலைராணி, டெல்லி கணேஷ், விணுசக்கரவர்த்தி உள்ளிட்டோர் பாத்திரத்திற்கேற்ற 'பளிச்' தேர்வு !
பெற்றோருக்கு கூட சொல்லாமல் போலீஸ் அதிகாரி விணுசக்கரவர்த்தி வலுகட்டாயமாக உதயா நண்பர் ராம்ஜிக்கும், மான்யாவுக்கும் திருமணம் செய்து வைப்பதும், கல்யாணம் ஆன பின் கணவனையே தன் காதலர் உதயாவுடன் சேர்த்து வைக்க சொல்லி மான்யா வற்புறுத்துவதும், கிளைமாக்ஸில் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிக்கும் மான்யாவை இங்குள்ள டாக்டர்கள் அமெரிக்கா தூக்கி போக சொல்வதும், உதயா காதலிக்காக விமானங்களை எதிர்பார்த்து தினமும் விமான நிலையத்தில் காத்திருப்பதும் அக்மார்க் சினிமாத்தனங்கள். இவற்றை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நீண்ட நாட்களுக்கு பின் சிற்பியின் இசையும், பி.எஸ்.தரணின் ஒளிப்பதிவும், ரித்திஸ் ராமய்யாவின் இயக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. செந்தில் மாத்தூரின் கதை, திரைக்கதை, வசனத்தில் இருக்கும் புதுமை கதையிலும், திரைக்கதையிலும் இருந்திருந்தால் 'உன்னை கண் தேடுதே' இன்னும் பலரின் கண்களை தேட வைத்திடும் படமாக அமைந்திருக்கம்!
'உன்னை கண் தேடுதே' படம் முழுக்க 'காதல் சோகமே வாட்டுதே!'--