‛‛துருவங்கள் பதினாறு", "பகடி ஆட்டம்" வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ரகுமான் நடிக்க, இந்த ஆண்டு துவங்கி, மூன்றாவது மாதம் முடிவதற்குள்ளேயே வந்திருக்கும் மற்றுமொருப் படமே "ஒரு முகத்திரை".
செந்தில்நாதன்.ஆர் எழுத்து, இயக்கத்தில் ஆர்.செல்வம், எல்.டி.சரவணன் தயாரிப்பில், ஷிரிஷ்.ஆர், அதீதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி உள்ளிட்ட புதுமுகங்களுடன் டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, பாண்டு, ரவி, ரேகா சுரேஷ் ஆகிய பழகிய முகங்களும் நடிக்க மனோதத்துவ நிபுணராக ரகுமான் மகுடம் சூடியிருக்கும் "ஒரு முகத்திரை".
படத்தின் கதைப்படி, இப்பட நாயகிகளான அதிதி ஆச்சர்யா, ஸ்ருதி இருவரும் மனநல மருத்துவம் படிக்கும் கல்லூரி மாணவிகள். ஒரே வகுப்பில் படிக்கும் இருவருக்குமிடையில் ஆரம்பம் தொட்டே பெரும் ஈகோ மோதல். அந்த மோதல் ஒரு கட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கும் போகிறது. நிர்வாகம், இவர்கள் இருவருக்குமிடையில், சமாதானம் செய்து வைக்க முயன்று அது முடியாது, இருவருக்குமிடையில் ஒரு போட்டி சூழலை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. அதன் விளைவு, மனோதத்துவத்தில் பிரபல மருத்துவரான ரஹ்மானை, தங்கள் கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த அந்த கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தும் அந்தக்கல்லூரிக்கு வர ரஹ்மான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அதிதி-ஸ்ருதி ஆகிய இருவரும் எப்படியாவது குறிப்பிட்ட தேதிக்குள் அந்த பிரபல மனோதத்துவ நிபுணர் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்று கல்லூரியின் தலைமை உத்தரவிடுகிறது. நாயகியர் இருவரில் யார்? எப்படி.? ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வந்தனர்? என்பதும் மனோதத்துவ நிபுணர் ரஹ்மான் வந்த பின் கதைக்குள் நிகழும் மாற்றங்களும் அதீதி, ஸ்ருதி இருவரது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், ஏமாற்றங்களும் தான் "ஒரு முகத்திரை" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!
"துருவங்கள் பதினாறு", "பகடி ஆட்டம்" படங்களில் போலீசாக நடித்த ரஹ்மான் இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக கச்சிதமாக நடித்திருக்கிறார். மனோதத்துவ நிபுணர் கம் பேராசிரியர் கதாபாத்திரத்தை தனது அனுபவமிக்க நடிப்பால் சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சைக்ரியாடிஸ்டாக ரஹ்மான் செய்யும் சைக்கோத்தனங்கள் இப்படத்திற்கு கூடுதல், வலு சேர்க்க முயற்சித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பிரதான நாயகனான ஷிரிஷ் ஐ.டி., இளைஞராகவும், இளம் காதலராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மூன்று நாயகியரில் ஒருவரான அதீதி, அட்டகாசம். அழகான பெண்ணாக வரும் ஸ்ருதி, அதீதியுடன் ஈகோ சண்டை போடும் காட்சிகளில் புதுமுகம் என்பதையும் தாண்டி மிரட்டி இருக்கிறார். இவர்கள் இருவர் தவிர இன்னொரு நாயகியான தேவிகாவும் பிரமாதம்.
ஷிரீஷ்வுடனான காதல் காட்சிகளில் ரசிகனை கவரும் தேவிகா, தன் காதலை உதறி தள்ளும் காட்சியிலும் மெச்சும் படி நடித்திருக்கிறார் பாராட்டுக்கள்.
டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, பாண்டு, ரவி, ரேகா சுரேஷ் ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
எஸ்.பி.அகமதுவின் படத்தொகுப்பில், மெதுவாக நகரும் சில காட்சிகளில் கத்திரி இன்னும் வேகமாக வேலை செய்திருக்கலாம்.
சரவண பாண்டியன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.
பிரேம்குமார் சிவபெருமான் இசையில் , "மாயா மாயா... " , " உன்னோடு ...." ஆகிய பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. படத்தின் பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது.
படத்தின் இயக்குநர் செந்தில் நாதன்.ஆர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாட்டிக்கொண்டு பெண்கள் படும் இன்னல்களை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். அதற்கேற்ப படத்தின் திரைக்கதையையும் "நச் - டச்"சாக அமைத்துள்ளார். ஆனாலும், விறுவிறுப்பான காட்சிகள் இருந்தும் அதற்கேற்ற வேகம் இல்லாததது பலவீனம். அதேமாதிரி, படத்தில் நிறைய காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் காமெடி காட்சிகளை இன்னும் இயக்குநர் அழகாக கோர்த்து வாங்கியிருந்தார் என்றால், "முகத்திரை" இன்னும் அழகாக அமைத்திருக்கும் .
மொத்தத்தில், ஒரு முகத்திரை - ஒரு மாதிரி, வித்தியாசமாக அலங்கரித்திருக்கிறது தமிழ் திரை"யை!