கண்பார்வையற்ற தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் கண்பார்வையற்ற கணவனின் கதை தான் ‛காபில்'. ஹிருத்திக்ரோஷன் - யாமி கவுதம் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த காபில் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, கண் பார்வையற்ற ரோகன் பதன்கர் எனும் ஹிருத்திக் ரோஷன், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்க்கிறார். ரோகனுக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை. ஒருநாள், இவரைப்போன்றே பார்வையற்ற சுப்ரியா எனும் யாமி கவுதமை சந்திக்கிறார் ரோகன். இருவருக்கும் காதல் மலருகிறது, திருமணமும் செய்து கொள்கிறார்கள். இல்லற வாழ்வு சிறப்பாக சென்று கொண்டிருக்க, திடீரென வில்லன் அமித் எனும் ரோகித் ராய் ரூபத்தில் புயல் வீசுகிறது. அமித் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து சுப்ரியாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விடுகிறார்கள். இதனால் கோபமடையும் ரோகன், போலீஸில் புகார் கொடுக்கிறார், ஆனால் அமித்தின் அண்ணன் மாதவ்ராவ் எனும் ரோனித் ராய், அரசியல் பின்புலத்தோடு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் மறுக்கிறது. இதனால் ரோகனே களத்தில் இறங்கி தன் பூத்தி கூர்மையால் எதிரிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் காபில் படத்தின் மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கண்பார்வையற்றவராக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மனைவியுடனான ரொமான்ஸ் காட்சிகளிலாகட்டும், எதிரிகளை பழிவாங்கும் இடங்களில் அவர் காட்டும் கோபங்களாகட்டும் அசத்தியிருக்கிறார் மனிதர்.
ஹிருத்திக்கை போலவே அவரது பார்வையற்ற மனைவியாக வந்து மடிந்து போகும் யாமியும் சிறப்பாக தன் ரோலை செய்திருக்கிறார்.
வில்லன் வினித் ராய், சக நடிகர்களான நரேந்திர ஜா, கிரிஷ் குல்கர்னி, அகிலேந்திர மிஸ்ரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ராஜேஷ் ரோஷனின் இசையில் ஹசீனா கா தீவானா... மெயின் தேறி காபில் ஹூம்... உள்ளிட்ட பாடல்கள் மனதை வருடுகின்றன.
சுதீப் சாட்டர்ஜி மற்றும் அயன்கனா போஸ் இருவரின் ஒளிப்பதிவும் ரம்மியமாக தெரிகிறது. அவிக் அலியின் படத்தொகுப்பும் ஓகே.
ஒரு சாதாரண கதையை ரசிகர்களுக்கு எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு ரசிக்கும்படியாக அதேசமயம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் குப்தா. அதிலும் ஆக்ஷ்ன் காட்சியை கூட யதார்த்தம் மீறாமல் படமாக்கியிருப்பது படத்திற்கு பெரும் பலம்.
மனைவியை இழந்து வாடும் பார்வையற்ற கணவனின் துயரத்தை உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிவு செய்திருக்கிறது இந்த ‛காபில்'.
மொத்தத்தில் ‛காபில்' - ‛பலம்'