விமர்சனம்
கிருஷ்ணதேவ ராயர் மற்றும் ராமராக வராலாற்று படங்களில் நடித்த பாலகிருஷ்ணா இம்முறை சடர்கனி மன்னனாக தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீனிபோட்டிருக்கின்றார். பாலகிருஷ்ணாவின் கம்பீரமான நடிப்பும் போர் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்புகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. பாலகிருஷ்ணாவிடம் ஏற்பட்டுள்ள முதுமை அவரது, கதாபாத்திர பொலிவை குறையச்செய்துள்ளதே தவிர அவரது நடிப்பிலும், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளிலும், ஸ்ரேயாவுடனான ரொமேன்ஸ் காட்சிகளிலும் எவ்வித குறையும் சொல்ல முடியாது.
நாயகி ஸ்ரேயாவை கவர்ச்சிக்கு மட்டுமல்லாது நடிக்கவும் வைத்திருக்கின்றார் இயக்குனர் க்ரிஷ். சடர்கனி மன்னனின் மனைவி வஷிஷ்தா தேவியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஸ்ரேயாவின் மிகச்சிறந்த படங்களில் கௌதமிபுத்ர சடர்கனி முதலிடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரேயா தவிர மற்றொரு வலிமையான பெண் கதாபாத்திரம் ராஜமாதாவாக நடித்துள்ள ஹேமமாலினியின் கதாபாத்திரம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் டோலிவுட்டில் என்ட்ரி ஆகும் ஹேமமாலினி சரியான வாய்ப்பை தேர்வு செய்துள்ளார். அதனை சரியாக பயன்படுத்தி தனது முத்திரையையும் ஹேமமாலினி பதித்துவிட்டார்.
முதல் பாதியின் இறுதியில் வரும் போர்காட்சிகளும், இடைவேளை காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்துள்ளன. மேலும் கம்பியூட்டர் கிராஃபிக்ஸை அதிகம் நாடாத க்ரிஷ் காட்சிகளை நிஜமாக சித்தரித்திருப்பது கூடுதல் சிறப்பு. ஸ்ரேயாவின் கதாபாத்திரத்தை ரசனையுடன் செதுக்கியுள்ள க்ரிஷ் ஹேமமாலினியின் ராஜமாதா வேடத்திற்கு துணிவு மற்றும் வலிமையால் மெருகேற்றியுள்ளார். இருவரும் க்ரிஷின் கைவண்ணத்தில் கதாபாத்திரங்களுக்கு உயிர்வூட்டியுள்ளனர்.
பிற கதாபாத்திரங்களையும் க்ரிஷ் இதே திறமையுடன் கவனித்திருக்கலாம். பாலகிருஷ்ணா, ஹேமமாலினி, ஸ்ரேயா இம்மூன்று பேரை சுற்றி மட்டுமே பெரும்பாலும் திரைக்கதை நகர்வது சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஒரே வரியில் படத்தின் மையக்கரு அடங்கும் போது திரைக்கதையில் தனது ஜாலத்தைக்காட்ட இயக்குனர் க்ரிஷ் தவறிவிட்டார். பலவீனமான திரைக்கதை படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றது.
சாய் மாதவின் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. பாடல்களுக்கு சுமாராக இசையமைத்துள்ள சிரத்தன் பஹத் பின்னணி இசையில் கவனிக்க வைக்கின்றார். கலை இயக்குனர்கள் கொடுத்த வேலையை கட்சிதமாக செய்துள்ளனர். அதனை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர். எடிட்டிங் சுமார் ரகமே.
கஞ்சே படத்தின் வாயிலாக தன்னை கவனிக்க வைத்த இயக்குனர் க்ரிஷ், தெலுங்கு தேசத்தில் அதிகம் புகழப்படாத வீரமன்னனை தற்போது கவனிக்க வைத்திருக்கின்றார். குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால் குறுகிய காலத்தில் சரித்திர படத்தை இயக்கிய க்ரிஷின் முயற்சி பாராட்டப்படவேண்டியது தான்.
மொத்தத்தில், கௌதமிபுத்ர சடர்கனி - வாள் வீச்சின் வேகம் குறைவு!
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!