த்ரிஷ்யம், பாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் இது..
அப்பா பாலச்சந்திர மேனன், அம்மா சீதா, தங்கை ரஸ்னா, வளர்ப்புத்தம்பி நீரஜ் மாதவ் என அழகான குடும்பம் பிருத்விராஜூடையது. அமெரிக்காவில் வேலைபார்க்கிறார் பிருத்விராஜ். உள்ளூரில் சுகாதார துறை அதிகாரியான பாலச்சந்திர மேனன், போலீஸ் அதிகாரியான நண்பருடன் சேர்ந்து தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மருந்துக்கம்பெனி மோசடிகளை கண்டுபிடிக்கிறார்..
இதனால் அந்த போலீஸ் அதிகாரி கொல்லப்பட, இந்த தகவலை ஆன்லைனில் ஸ்கைப் மூலமாக அமெரிக்காவில் இருக்கும் அண்ணனிடம் வீடியோ சாட்டிங்கில் பகிர்ந்துகொள்கிறார் தங்கை ரஸ்னா. சரியாக அந்த சமயத்தில் ஜெயபிரகாஷின் ஆட்கள் வீட்டிற்குள் நுழைந்து தங்கை, அப்பா, அம்மா மூவரையும் கொல்வதை ஸ்கைப் மூலமாக பார்க்கும் பிருத்விராஜ் பதறுகிறார்.
பின்னர் ஊர் திரும்பும் பிருத்விராஜ், தனது குடும்பத்தினரை கொன்ற நபர்களை பழிதீர்க்க முடிவெடுக்கிறார். உடன் வளர்ப்பு தம்பி நீரஜ் மாதவ், கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் தங்கை திவ்யா பிள்ளை ஆகியோரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு 'பாம் பிளாஸ்ட்' என்கிற லேட்டஸ்ட் டெக்னாலாஜியின் உதவியுடன் ஒவ்வொரு ஆளாக போட்டுத்தள்ளுகிறார்..
இரண்டாவது நபர் கொல்லப்பட்டதுமே சுதாரித்துக்கொண்ட ஜெயபிரகாஷ், தங்கள் ஆட்களை கொல்வது யார் என கண்டுபிடிக்க, ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பாம் ஸ்குவாடு அதிகாரியான பசுபதியை நியமிக்கிறார்.. பசுபதி இதற்கான ஆணிவேரை கண்டுபிடிப்பதற்குள் ஜெயபிரகாஷின் இளைய மகன் கொல்லப்படுகிறார்..
இதனால் ஜெயபிரகாஷிடம் அவரது பகையாளிகள் பட்டியலை விடாப்பிடியாக கேட்டு வாங்கி, கொலையாளி யார் என்பதை ஷார்ட் லிஸ்ட் செய்து, இறுதியில் பிருத்விராஜை ஸ்கெட்ச் பண்ணுகிறார் பசுபதி. இதனால் ஜெயபிரகாஷையும் அவரது மகனையும் பிருத்விராஜால் திட்டமிட்டபடி கொல்ல முடிந்ததா. இல்லை பசுபதியின் கையிலோ அல்லது போலீசின் பிடியிலோ சிக்கினாரா என்பது க்ளைமாக்ஸ்.
சில பல லாஜிக் குளறுபடிகள் இருந்தாலும் அட்டகாசமான ரிவெஞ்ச் த்ரில்லராக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்... இதுவரை ஹாலிவுட் படங்களில் கூட பயன்படுத்தாத விஷயம் என ஜீத்து ஜோசப் சொன்னது பழிவாங்குவதற்காக அவர் தேர்ந்தெடுத்த விதத்தைத்தான். டிவி மற்றும் செல்போன் மூலமாக பாம் வைத்துக்கொள்வது ஏற்கனவே ஒருசில படங்களில் இடம்பெற்றிருந்தாலும் இந்தப்படத்தில் அதை புதிய யுக்தியில் கையாண்டு இருக்கிறார்கள்..
அதற்கேற்றார்போல, பிருத்விராஜ் வெளிநாட்டில், பழைய கட்டங்களை வெடிவைத்து தகற்கும் வேலைபார்ப்பவர் என்பதும் லாஜிக்காக ஒகே ஆகிறது.. இதில் பிருத்விராஜுக்கு நடிப்பில் திறமை காட்ட பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதை இழுத்த இழுப்புக்கெல்லாம் அவரும் நன்றாகவே ஓடியிருக்கிறார்.
பிருத்விராஜூக்கு அடுத்ததாக மிக முக்கியமான கேரக்டரில் பசுபதி.. ஜெயபிரகாஷின் பாதுகாப்பை தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர் போடும் திட்டங்களும், எதிரியை நெருங்குவதும் சூப்பர்.. ஆனால் கிளைமாக்ஸில் பிருத்விராஜிடம் கோட்டை விடுகிறார் மனிதர்.. பாவம்.. கோபமும் கொக்கரிப்பும் குமுறலும் அழுகையுமாக கலவையான ஹைடெக் வில்லத்தனம் காட்டியுள்ளார் நடிகர் ஜெயபிரகாஷ்.. அவரது இரண்டு மகன்களும் அதிகப்பிரசங்கித்தனம் காட்டி தங்களது முடிவைதேடிக்கொள்ளும் விதம் பரிதாபம்.
உடன்பிறவா தம்பியாக வரும் நீரஜ் மாதவ், காதலும் டூயட்டும் இல்லாத கதாநாயகியாக திவ்யா பிள்ளை என இருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.. அதிலும் செல்போன் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதலுக்கு ஆளாகும்போது திவ்யா பிள்ளை பாரிதபத்தை அள்ளுகிறார்.. வாயாடிப்பெண்ணாக வரும் தங்கை கேரக்டரில் ரஸ்னா கவனம் ஈர்க்கிறார்.
பழிவாங்குவதற்கு பாம் பிளாஸ்ட் என்கிற என்கிற புதிய டெக்னிக்கை பயன்படுத்தி இருப்பது சூப்பர்தான் என்றாலும், காவல்துறை நடவடிக்கைகளை தீவிரமாக்காமல், வேண்டிய இடத்தில் கட்டிப்போட்டு தனக்கேற்ற வகையில் திரைக்கதையை வளைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப். அதேபோல ஆரம்ப காட்சிகளில் பிருத்விராஜை பசுபதியின் ஆட்கள் துரத்துவதை காண்பிக்கும் ஜீத்து ஜோசப், அதை பிளாஸ்பேக் காட்சிகளை காட்டுவதற்காக படம் முழுவதும் விட்டுவிட்டு பயன்படுத்தியிருப்பது அலுப்பை தருகிறது.. புதிதாக யோசித்திருக்கலாம்.
மற்றபடி ரசிகர்கள் கொடுத்த காசிற்கு கொஞ்சமும் குறை வைக்காத சுவாரஸ்யமான த்ரில்லர் தான் இந்த 'ஊழம்'.