டினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், இலியானா நடிப்பில் வெளியாகியுள்ள கிரைம், த்ரில்லர் படம் தான் ‛ருஸ்டம்'.
கப்பற்படை அதிகாரி ருஸ்டம் பாவ்ரி எனும் அக்ஷ்ய் குமார். இவரது மனைவி சிந்தியா எனும் இலியானா. மனைவி மீது உயிராக இருக்கிறார் ருஸ்டம். ருஸ்டம் தன் கப்பற் பயணத்தை முன்னரே முடித்து விட்டு வீடு திரும்புகிறார். ஆனால் வீட்டில் அவரது மனைவியான சிந்தியா இல்லை. மனைவி எங்கே என்று தேடும் ருஸ்டம், தன் மனைவி தொழிலதிபர் விக்ரம் எனும் அர்ஜூன் பஜ்வாவுடன் கள்ள உறவுவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் ஆத்திரம் கொள்ளும் ருஸ்டம், தொழிலதிபர் விக்ரமை கொலை செய்து விடுகிறார். அதோடு குற்றத்தை தானே ஒப்புக்கொண்டு போலீஸிலும் சரணை அடைகிறார். தன் சகோதரனை கொலை செய்த ருஸ்டமை தண்டிக்க வேண்டும் என்று விக்ரமின் சகோதரியான பிரியா எனும் இஷா குப்தா களமிறங்குகிறார். சட்டத்திற்கு முன்பாக ருஸ்டம் தண்டிக்கப்பட்டாரா.?, கொலைக்கான பின்னணியில் இருக்கும் மற்றுமொரு முக்கியமான காரணம் என்ன.? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடையளிக்கிறது ருஸ்டம் படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
கப்பற்படை அதிகாரி ருஸ்டமாக அக்ஷ்ய், சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனாலும் ஆங்காங்கே சில காட்சிகளில் அவரது நடிப்பு ‛எக்ஸ்பிரஸன்' சற்று குறைவாக இருக்கிறது.
இலியானா, தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை பக்காவாக செய்திருக்கிறார். அவரைப்போலவே இஷா குப்தாவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் டினு சுரேஷ் தேசாயின் இயக்கம் சூப்பர். குறிப்பாக திரைக்கதை ஓட்டம் அருமையாக இருக்கிறது. அதிலும் இடைவேளைக்கு பிறகு கதையின் வேகம் விறுவிறுப்பாக நகருகிறது. குறிப்பாக கோர்ட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும், வசனங்களும் ரசிகனை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது. இசையும், ஒளிப்பதிவும், படத்திற்கும் பக்காவாக பொருந்தியிருக்கிறது.
அக்ஷ்யின் குமாரின் நடிப்பு, கோர்ட் காட்சிகள் ஆகியவற்றுடன் கிரைம், திரில்லராக வெளிவந்துள்ள ‛ருஸ்டம்' படத்தை ஒருமுறை பார்க்கலாம்.