சரப்ஜித் படத்திற்கு பிறகு ரன்தீப் ஹூடா நடிப்பில் வெளியாகியிருக்கும் காதல் படம் ‛டூ லப்சா கி கஹானி'. அவருக்கு ஜோடியாக தென்னிந்திய படங்களில் அசத்தி வந்த காஜல், கண்பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படம் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, முன்னாள் குத்துச்சண்டை வீரரான சூரஜ் எனும் ரன்தீப் ஹூடா, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஷிப்ட்டுகளில் வேலை பார்த்து கடுமையாக உழைக்கிறார். ஒருநாள் பார்வையற்ற பெண்ணான ஜெனி எனும் காஜல் அகர்வாலை சந்திக்கிறார். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். காஜலுக்கு கண்பார்வை அளிக்க சூரஜ் உதவ முற்படுகிறார். இதற்காக அவருக்கு ரூ.3 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்திற்காக அவர் விஷயம் செய்யப்போக அதுவே சூரஜ், ஜெனி இடையே பிரிவை உண்டாக்குக்கிறது. அப்படி என்ன செய்தார் சூரஜ், சூரஜூம், ஜெனியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது டூ லப்சா கி கஹானி படத்தின் மீதிக்காதல் கதை.
சரப்ஜித் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரன்தீப் ஹூடா. அவரின் நடிப்பு திறன் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது நன்றாகவே தெரிகிறது.
காஜல், முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். இது எவ்வளவு கஷ்டமான, ஒரு வலுவான கதாபாத்திரம், ஆனால் அதற்கு ஏற்ற நடிப்பு காஜல் இடத்தில் தென்படவில்லை, இருந்தாலும் அவரது நடிப்பு ஓகே.,
நடிகராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் தீபக் திஜோரி, ‛‛டூ லப்சா கி கஹானி'' படம் முழுக்க முழுக்க ஒரு காதல் படம் என்ற சொல்லியே விளம்பரப்படுத்தியவர் அந்த காதலை படத்தில் ஆழமாக பதிவு செய்யவில்லை. குறிப்பாக ரன்தீப்-காஜல் இடையேயான காதல், கெமஸ்ட்ரி உள்ளிட்ட விஷயங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படத்திற்கு இசையை தவிர ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் கூட சுமார் ரகம் தான். மேலும் படத்தில் அடுத்த என்ன நடக்க போகிறது என்று படம் பார்ப்பவர்களுக்கு எளிதாக தெரிவதும், விறுவிறுப்பு இல்லாமல் மெதுவாக நகரும் கதையும், திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை தருவது படத்தின் பலவீனம்.
மொத்தத்தில், ‛‛டூ லப்சா கி கஹானி'' - போரிங்''.