நாயகன் - மஞ்சு மனோஜ்
நாயகி - ரெஜினா
இயக்குனர் - தசரத்
சௌரியா(மஞ்சு மனோஜ்) ஒரு படித்த பட்டதாரி இளைஞன், இவருக்கு நேத்ரா(ரெஜினா) என்ற பெண்ணுடன் காதல் மலருகிறது. இரு வரும் ஆத்மார்த்தமான காதலில் இருக்கிறார்கள், ஒரு நாள் ஊரை விட்டு ஓடிச்சென்று தங்கள் காதலை கல்யாணமாக்க முடிவு செய்கிறார்கள். அப்படி ஓடி போகையில், எதிர்பாராத காட்சிகள் நிகழ்கிறது. நேத்ரா கொல்லப்படுகிறாள். மேலும் திடுக்கிடும் திருப்பமாக கொலைப்பழி சௌரியா மேல் விழுகிறது. காதலுக்கு வந்த ஆபத்து என்ன? ஏன் ஓடிப்போனார்கள்? யார் நேத்ராவை கொலை செய்தது? செளரியா நிரபராதியா என்பதை காதலும் திருப்பங்களும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
சௌரியாவாக மஞ்சு மனோஜ் தனது படங்களிலேயே இதில் தான் ஒரு மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இப்படி நடித்திருப்பது படத்திற்கும் ஏகமாக பொருந்திப் போகிறது. ரெஜினா - நேத்ராவாக தனக்கு கொடுக்கப்பட்தை மிகச்சரியாக செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜுக்கு நடிக்க சொல்லியா தரவேண்டும் கொலைக்கான விசாரணை அதிகாரியாக அசரவைக்கிறார். பிரபாஸ் சீனு சிற்சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார், ரசிக்கும் படியாகவும் இருக்கிறது.
மொத்தமாக கதையில் அனேக முடிச்சுகள் இருக்கிறது அவை ஒவ்வொன்றாக அவிழும் இடம் நம்மையும் ஒரு விசாரணை அதிகாரி போல் மாற்றுகிறது. இரண்டாம் பாதியில் இடம் பெறும் சில திருப்பங்கள் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஒவ்வொரு முடிச்சின் சுவாரஸ்யத்தையும் அது வெளிச்சத்திற்கு வரும் வரை அழகாக கையாண்டிருக்கிறார்கள். மேலும் படத்தின் நீளம் ஒரு நல்ல த்ரில்லர் படத்துக்கானதாக அமைகிறது.
இப்படிபட்ட சுவரஸ்யமான பல விசயங்களுக்கு மத்தியில் சில காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்கின்றன. மேலும் பாடல்கள் எதிர்பாரா நேரத்தில் வந்து திரைக்கையின் குறுக்கே நின்று மேலும் சோதிக்கிறது. இதை தவிர்த்திருந்தால் இன்னும் படம் வேகமெடுத்திருக்கும்.
இயக்குனர் இன்னும் முயன்றிருந்தால், கூடுதலான சுவாரஸ்யத்தோடு கொடுத்திருக்கலாம். படத்தின் விளம்பரத்தை ஒப்பிடும் போது அதை நிறைவேற்ற கொஞ்சமாக தவறியிருக்கிறது.
சௌரியா - கொஞ்சம் காதல், கொஞ்சம் திகில்!