தினமலர் விமர்சனம் » வித்தகன்
தினமலர் விமர்சனம்
முன்பாதியில் போலீஸ், பின் பாதியில் தாதா... என புதுமைப்பித்தன் பார்த்திபன் வித்தியாசமும், விறுவிறுப்புமாக யோசித்திருக்கும் படம் தான் "வித்தகன்" எனும் "வித்-த-கன்" திரைப்படம்!
பார்த்திபனின் அப்பா சம்பத்ராம், ஆசை ஆசையாய் பார்த்து வந்த போலீஸ் வேலையை அம்போ என விட்டுவிட்டு வேறு வேலை, வேறு ஊர் என குடும்பத்தோட குடிபெயர காரணமாகிறார் வில்லன் மிலிந்த் சோமன். அவரை பழிவாங்க, தன் அப்பா மற்றும் குடும்பத்திற்கே தெரியாமல் அநாதை என்று சொல்லி ஐ.பி.எஸ். ஆபிஸராகும் பார்த்திபன், உத்தியோகத்தில் நேர்மையாகவும், புதுமையாகவும் செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கிறார். இவரது நற்பெயரால், கெட்டதை மட்டுமே சம்பாதித்து வரும் உயர் அதிகாரியின் கைகளில், பார்த்திபன் அநாதை அல்ல, அவருக்கு குடும்ப பின்னணி உண்டு எனும் தகவல் ஆதாரபூர்வமாக கிடைக்கிறது. அதையே காரணமாக வைத்து பார்த்திபனை போலீஸ் உத்தியோகத்தில் இருந்து தூக்குகிறார் அந்த அதிகாரி! அப்புறம்? அப்புறமென்ன...? தானும், தன் தந்தையும் போலீஸ் வேலையை விட்டு போக காரணமாக இருந்தவர்களையும், சமூகத்தில் ஒழுக்கம் கெட காரணமாக இருப்பவர்களையும் பார்த்திபன் எப்படி அழிக்கிறார் என்பது வித்தகன் படத்தின் விஸ்வரூப மீதிக்கதை!
போலீஸ் - தாதா என இரு வேறு துருவங்களில் நின்று, சமூகத்தை காக்கும் வித்தகனாக வித்தியாசமான வேடங்கள் ஏற்றிருக்கும் பார்த்திபன், மற்ற ஹீரோக்கள் மாதிரி பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களின் செவிகளை பஞ்சராக்காமல், "நீங்க துப்பு துலக்கிட்டீங்க... இங்க எவனோ துப்பிட்டு போயிருக்கான்..." என்பது உள்ளிட்ட எதிராளிகளை டேஞ்சர் ஆக்கி, டின்ஜர் போட்டு விடும் டயலாக்குகளில் ஒரு சேர கண்ணையும், கருத்தையும் கவருகிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் பார்த்திபன் படம் பார்த்த திருப்தி ஒன்று போதும் என்றாலும், முன்பாதி போலீஸ் பார்த்திபனின் கம்பீரமும், காமெடியும் ஓ.கே. பின்பாதி தாதா பார்த்திபனின் கெட்-அப் ஆங்காங்கே சாதாவாக தெரிவது மைனஸ்!
அழகு பதுமையாக பூர்ணா, பார்த்திபன் செய்யும் கொலை ஒன்றை கண் எதிரே பார்த்தும்கூட அவரை காதலிக்க தொடங்குவது நம்ப முடியாத சுத்த ஹம்பக். மற்றபடி, பூர்ணாவின் புடவையில் வரையப்பட்டிருக்கும் பூக்கள் கூட, கிராபிக்ஸில் மெய்யான பூக்களாய் மலர, மலர வெளிநாட்டு லொகேஷன்களில் டூயட் பாடிய படி பார்த்திபனை காதலிப்பதெல்லாம் சூப்பர்! ஓ.கே.
கடைசிவரை பார்த்திபன் தனக்கேன் வில்லன் ஆனார்...? என்பது தெரியாமலே, பார்த்திபனால் கொல்லப்படும் இண்டர்நேஷனல் வில்லன் மிலிந்த் சோமன், பார்த்திபனின் அப்பாவாக, பொறுப்பான போலீஸ்காரராக ப்ளாஷ்பேக்கில் வரும் சம்பத்ராம், மினிஸ்டர் மோகன் நடராஜன், அவரது கெட்ட மகனாக கொஞ்ச நேரம் வந்து, செத்து போகும் வின்சென்ட் அசோகன், பார்த்திபனுக்கே பின்பாதியில் டானாக வந்து பார்த்திபனாலேயே டப் பென்று சுடப்படும் ரவிசங்கர், ஒருபாடலில் மைக்கும் கையுமாக தோன்றி மறையும் ராக்கி பார்த்திபன்(பார்த்திபனின் ஆண் வாரிசு...) உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்!
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில், ரா.பார்த்திபனே 6 பாடல்களையும் எழுதி இருக்கிறார். "இக்குதே கண்கள் விக்குதே..." பாடல் மட்டுமே அடிக்கடி காதில் ஒலிக்குதே... எனப்பாராட்டும்படி இருக்கிறது. ஆண்டனியின் படத்தொகுப்பும், எம்.எஸ்.பிரபு-ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ரா.பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இயக்கத்தில் "வித்தகன்" வசனத்திலும், இயக்கத்திலும் பளிச்சிட்டிருக்கிறது!
ஆக மொத்தத்தில் "வித்தகன்", கெட்டவர்களுக்கு "எமகாதகன்!" ரசிகர்களுக்கு...?!