தினமலர் விமர்சனம்
செந்தில்.செல்.அம். எனும் புதியவர் கதை, திரைக்கதை , வசனம் எழுதி முதலீடு செய்து தயாரித்து இயக்கி இருப்பதுடன், நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "திரு.வி.க. பூங்கா".
கதைப்படி., பூராசாமி எனும் புதுமுகம் செந்தில்.செல்.அம்., விழுப்புரம் பகுதியில் உள்ள கிராமத்தில் தாயுடன் வசிக்கும் டிரைவிங் தெரிந்த இளைஞர். ஊரிலேயே டிராக்டர் ஓட்டியபடி ஜூவனம் நடத்தும் அவரை நண்பர்கள் டவுனுக்கு வேலைக்கு கூப்பிட்டும், அம்மாவை பிரிந்து வர மனமின்றி வர மறுக்கிறார்....
வெளுத்ததெல்லாம் பால் என நம்பும்...வெகுளியான அவரை வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு சொந்த பந்தங்களை பார்க்க வரும் யுவதி ஒருவர் காதல், கத்தரிக்காய் ஆசைக்காட்டி ஏமாற்றி செல்கிறார். இதில் வெக்ஸாகும் செந்தில்.செல்.அம். அந்த ஊரில், அவள் நினைப்புடனேயே இருக்க பிடிக்காமல் விழுப்புரத்தில் உள்ள டிராவல்சில் கார் ஓட்டப்போகிறார். அங்கும் எதிர்வீட்டு பெண்., ஏதேச்சையாக இவர் வேலை பார்க்கும் டிராவல்சில் கார் புக் செய்யும் பெண்...உள்ளிட்ட எல்லோரும் இவரை காதல், காதல் என்று துரத்த., இதற்கெல்லாம் காரணம் தன் அழகுதான்...என புலம்பும் பூராசாமி ஒருவழியாக நாயகி சுவாதி மூலம் உண்மையான காதலை உணரும்போது ., விதி விளையாடுகிறது. அந்த விதியை மீறி பூராசாமி - செந்தில்,செல்.அம்மும், நாயகி சுவாதியும் ஜோடி சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் திரு.வி.க. பூங்காவின் திருப்பங்கள் நிரம்பிய க்ளைமாக்ஸ்!. படத்தின் பல காட்சிகளில் தியேட்டரில் அப்ளாஸ் அடி பின்னுகிறது...என்றாலும், காட்சிகளில் இருக்கும் வித்தியாசம்., படத்தில் விறுவிறுப்பாக கோர்வையாக சொல்லப்படாதது மைனஸ்!.
பூராசாமியாக வரும் செந்தில்.செல்.அம். படம் முழுக்க ஒரே மாதிரி முகபாவனையுடன் வருவது சற்றே போரடிக்கிறது. ஒரு பாடல் காட்சியில், கருப்பு ஃபிரேம் மூக்கு கண்ணாடியுடன் படத்தில் வரும் செந்தில், படம் பூரா அதே கெட்-அப்பில் வந்திருந்தார் என்றால், பூராசாமி, போரடிக்காத சாமியாக மிளிர்ந்திருப்பார். ஆனாலும் , தங்கர் பச்சான் நடை, உடை, பாவனை, குரல், கொந்தளிப்பில் இவரும் ஒரு மாதிரி ரசிகர்களை கவருவது ஆறுதல்!.
கதாநாயகி சுவாதி கச்சிதம்! ஆனாலும்., அவரது அப்பா கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்.வுடன் அவர் அளவுக்கு மீறி அடிக்கும் லூட்டி, ஆட்டம், பாட்டமெல்லாம் கொஞ்சம் அல்ல நிறையவே ஓவர்!. செந்தில் - சுவாதி மாதிரியே சூசன், யுகா, ஜான்விஜய், காதல் தண்டபாணி, முனிஸ்ராஜா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கும் மேலாக பளிச்சிட்டிருக்கின்றனர்.
பிரவீன் மித்ராவின் இசையில் பாடல்கள் புதுரகம், ஆர்.கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவு ஓ,கே.ரகம். செந்தில்.செல்.அம்மின் எழுத்து, இயக்கத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும், ஏ.சி.காரில் சொல்ல சொல்ல கேட்காமல் சிகரெட் பிடிக்கும் தாதாவை மிரட்ட அவர் எடுக்கும் அஸ்திரம், அதற்கு அந்த தாதா., நிம்மதியாக சாகத்துணியும் ஹீரோவை சாகவிடாது பழிவாங்க பண்ணும் கலாட்டா., படுக்கையில் ஒன்பாத்ரூம் போகும் பெரிய பிள்ளைகளுககு, இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மருத்துவம், பூராசாமியின் தாயுடைய லட்சியம்...உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுக்காக தி.வி.க.பூங்காவை திரும்பிப்பார்க்கலாம்!.
மொத்தத்தில், திரு.வி.க.பூங்கா, தற்போதைய சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மாதிரி வெறிச்சோடி கிடக்கவுமில்லை...,பெரிதாக பூத்துக்குலுங்கவுமில்லை!. சில விஷயங்களில் புதுசாக ஈர்க்கிறது!.