தினமலர் விமர்சனம் » ஆஹா கல்யாணம்
தினமலர் விமர்சனம்
"நான் ஈ படத்தில் "ஈ ஆக நடித்த டோலிவுட் ஹீரோ நானி நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு வெற்றி திரைப்படம் தான் "ஆஹா கல்யாணம்
கதைப்படி, காலேஜ் ஹாஸ்டல் சாப்பாடு போரடிப்பதால் சேட்டு வீட்டு கல்யாணத்திற்கு திருட்டு தனமாக சாப்பிட போகும் ஹீரோ சக்தி எனும் நானி, அங்கு ஹீரோயின் ஸ்ருதி சுப்ரமணியம் எனும் வாணி கபூரின் கிண்டல் கேலி பேச்சுக்கு ஆளாகிறார். படித்து கொண்டே "பார்ட்டைமாக பெரிய இடத்து திருமணங்களை பிரமாண்டமாக நடத்தி தரும் "மேரேஜ் பிளானர் நிறுவனங்களில் தொழில் கற்கும் வாணி கபூருக்கு படிப்பு முடிந்ததும் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து தொழில் தொடங்கி பல பெரிய திருமணங்களை நடத்தி வைக்க வேண்டுமென்பது ஆசை! அதுமாதிரி ஆசை, லட்சியம் எல்லாம் எதுவுமில்லாமல் மீண்டும் கிராமத்திற்கு போய் அப்பா சொல்படி விவசாயம் பார்த்துவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கும் ஹீரோ நானி, முதலில் ஓசி சாப்பாடு, வித்அவுட்... என தன்னை கலாய்த்த வாணியை தேடிப்பிடித்து காதலுடன் சுற்றுகிறார்.
தெளிவாக இருக்கும் வாணிக்கு காதல் வர மறுக்கிறது. ஆனாலும் நட்பாகிவிடும் இருவருக்கும் படிப்பும் முடிகிறது. இருவரும் சேர்ந்து நகரத்தின் பெரிய திருமண திட்டமிடலாளர் சிம்ரனிடம் உதவியாளராக சேருகின்றனர். ஒரு பெரிய இடத்து வைபவ திருமணத்திற்கு கோடிகளில் பணம் வாங்கிவிட்டு அதில் எல்லாவற்றிலும் கமிஷனும் அடிக்கும் சிம்ரனை வெறுத்து ஒதுக்கும் இருவரும் அவரிடமிருந்து பிரிந்து வந்து தனியாக "கெட்டி மேளம் எனும் திருமணதிட்டமிடல் நிறுவனம் ஆரம்பிக்கின்றனர்.
ஆரம்பத்தில் நடுத்தரவர்கத்து திருமணங்களை சில லகரங்களில் சிறப்பாக நடத்தி தரும் இருவரும் படிப்படியாக உயர்ந்து 2 கோடி மதிப்பிலான பெரிய இடத்து திருமணங்களையும் வெகு சிறப்பாக நடத்தி பேரும் புகழும் சம்பாதிக்கும்போது இருவருக்குள்ளும் எதிர்பாராமல் ஒருசேர காதலும் காமமும் அரங்கேறுகிறது. அப்புறம்? அப்புறமென்ன? காதல், காதலைத் தொடர்ந்து வரும் ஊடல் ஊடலைத் தொடர்ந்து ஈகோ மோதல்... என சிக்கித்திணறும் இருவரும் "ஹேப்பி வெட்டிங்... எனும் பெயரில் புதிய நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்துகின்றனர். இருவரும் பிரிந்ததும் தொடர்ந்து தொழிலும் தோல்வியை தழுவி கடனாளி ஆகின்றனர். இந்நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய இடத்து திருமண ஆர்டர்,இருவரும் மீண்டும் இணைந்தால் உண்டு எனும் நிலையில் இருவரும் மீண்டும் தொழிலும், வாழ்க்கையிலும் இணைந்தனரா இல்லையா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!
நானி, நான் "ஈ மட்டுமல்ல, நான் ஆ, ஓ, ஓஹோ, ஆஹா எனும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார். அதிலும் ஒரு மாதிரி தமிழில்(தெலுங்கர் பேசும் தமிழில்...) அவர் பண்ணும் அலப்பறைகள் தியேட்டரை சிரிப்பில் அதிரவைப்பது படத்திற்கு பெரும் பலம்! நீ ஸ்ருதி சுப்ரமணியம் தானே சுருதிஹாசன் ஒண்ணும் கிடையாதே... என ஹீரோயினை இவர் கிண்டல் அடிக்கும் போதும் சரி, இவரை(நானியை) டேய் முதல்ல... தமிழை ஒழுங்கா பேசுடா... என கல்லூரி நண்பர் கிண்டல் அடிக்கும் போதும் சரி... மனிதர் ரசனையாக நடித்திருக்கிறார். சபாஷ்!
வாணி கபூர், மீசை முளைக்காத சிறுவர்கள் முதல் மீசை நரைத்த முதியவர்கள் வரை சகலரது வாயோரமும் ஜொள்ளு வர வழைக்கிறார். அத்தனை அழகு, கவர்ச்சி, நடிப்பில் முதிர்ச்சி, நடனத்தில் நல்ல தேர்ச்சி. அதிலும் நானியுடனான இண்டர்வெல்லுக்கு முந்தைய அந்த முத்தக்காட்சியிலும், படுக்கையறை காட்சிகளிலும் மனுஷி, ரசிகர்களை உண்டு, இல்லை என செய்துவிடுகிறார். வாவ், வாரே வா!
சிம்ரன், படவா கோபி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
வேணுபதன் குமாரின் அசரடிக்கும் ஒளிப்பதிவு, தரண்குமாரின் மயங்கடிக்கும் இசை உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகளுடன் புதியவர் ஏ.கோகுல் கிருஷ்ணனின் எழுத்தும்-இயக்கமும் ஆஹா கல்யாணத்திற்கு பெரிய ப்ளஸ்!
ஆரம்பகாட்சிகளில் சேட்டு வீட்டு கல்யாணத்தில் சிக்கன் பீஸ் போடுவது...(மார்வாடிகள் பியூர் வெஜிடேரியனாக்கும் என்பது மறந்து...) உள்ளிட்ட ஒரு சில ஓட்டை உடைசல்கள் குறைகள் இருந்தாலும், பைனான்ஸூம், ரொமான்ஸூம் ஒன்று சேருதல் கூடாது எனும் தத்துவம், வாழ்க்கையில் சில தவறுகளை ரப்பர் வைத்து அழிச்சுட்டு ஜாலியா வாழ பழகிக்கணும்... எனும் போதனை... "தூக்குறேன் டி... என சண்டையில் சவால் விடும் ஹீரோவிடம் தூக்கிகாட்டு எல்லோரும் பார்க்கட்டும் என ஹீரோயின் போகிறபோக்கில் அடிக்கும் காமெடி ப்ளஸ் காமநெடி பன்ச், எல்லாவற்றுக்கும் மேலாக கவித்துமான அந்த படுக்கையறை காட்சி, இடையில் பிரிந்த நாயகனும், நாயகியும் இறுதியில் ஒன்று சேர வேண்டுமே என ரசிகர்கனை தவிக்கவும், துடிக்கவும் வைத்த இயக்குநரின் திறமையான திரைக்கதை அமைப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் "ஆஹா கல்யாணத்தை ஆஹா ஓஹோ கல்யாணமாக தூக்கி நிறுத்தி விடுகின்றன!
மொத்தத்தில், ஆஹா கல்யாணம் - செம பிரமாதம்! ரசிகனுக்கு ருசி போஜனம்!! நிச்சயம் தயாரிப்பாளருக்கு வசூல் பிரளயம்!!!
--------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
பாலிவுட் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் சோப்ரா கம்பெனி தென்னிந்திய மொழிகளில் தமது முதல் படைப்பைத் தந்துள்ள படம் "ஆஹா கல்யாணம்.
நாயகன் நானி சக்தியாகவும், நாயகி வாணி கபூர் ஸ்ருதியாகவும் நடிப்பில் மிகை இல்லாமல் இயல்பாக நடித்து சபாஷ் பெறுகிறார்கள். இயல்பான கதை களம் என்பதால் படத்துடன் நம்மால் சுலபமாக ஒன்றிப்போக முடிகிறது.
சக்தி (நானி) ஹாஸ்டல் சாப்பாடு வெறுத்து நண்பர்களுடன் ஒருசேட்டு வீட்டுத் திருமணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிடச் செல்லும்போது அங்கு நாயகி (வாணி கபூர்) ஸ்ருதியிடம் பிடிபட்டு, சமாளித்து வெளியேற அங்கு அவள் நடனமாடும் நடனத்தை படம் பிடித்து அவளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறான். "படிப்பு முடிந்து ஊருக்கு வா என நானியிடம் "வர் அப்பா கூப்பிட, நான் இல்கேயே பிசினஸ் செய்கிறேன் என வாணி கபூருடன் சேர்ந்து கெட்டி மேளம் என்ற கல்யாண கான்ட்ராக்டர் வேலையை ஆரம்பித்து அதில் வெற்றிபெறுகிறார்கள். நானியும், வாணி கபூரும் ஒரு கட்டத்தில் ஈகோ வர இருவரும் பிரிந்து, தனித்தனியாக கெட்டிமேளம். ஹேப்பி வெட்டிங் என கான்ட்ராக்ட் கம்பெனி ஆரம்பித்து, பலமிழந்து நடத்த முடியாமல் கடனாளியாக, பின் இருவரும் நமது பலம் ஒற்றுமைதான் என உணர்ந்து மீண்டும் கெட்டி மேளம் என்ற கான்டிராக்ட் கம்பெனியை, நடத்தி வெற்றியை எட்டிப் பிடிப்பது தான் கதை.
நாயகனாக வரும் நானி முகம் நன்றாக நடிக்கிறது. வாணி கபூர் நடனம் பிரமாதம். கரண்குமாரின் இனிய இசை உற்சாகம். இயக்கம் சபாஷ் போட வைக்கிறது.
வாணி கபூர் அழுது கொண்டே சிரிப்பது, சிரித்து கொண்டே அழுவது என நம்ம சிவாஜியை நினைக்க வைக்கிறார். வசனம் மிக மிக இயல்பு.
"ஆஹா கல்யாணம் ஆஹா சொல்ல வைக்கிறது.