தினமலர் விமர்சனம்
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் ஜெ.வடிவேல்., தன் குருநாதர் மிஷ்கினையும் மிஞ்சி, வித்தியாசமான படம் தர வேண்டும்...என யோசித்திருப்பார் போலும்..ஆனால், அது., "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான" கதையாக., புது இயக்குநர்களை புறக்கணிக்கும் தயாரிப்பாளர் வீட்டிலேயே ஆட்டைய போட்டு சினிமா படம் பண்ணலாம்...எனும், கள்ளத்தனமான கான்சப்டில் அடிபட்டு போகிறது பாவம்!.
கதைப்படி., முதல் பட வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குநர் வடிவேல், அவரது அறை நண்பர்கள் ஸ்ரீராம் சந்தோஷ், காகின், கே... மூவரும்! நண்பனுக்கு முதல்படம் கிடைத்தால் தான் முறையே தாங்களும் அதில் வேலை பார்ப்பது...எனும் குறிக்கோளுடன் வேறு பட வேலைவெட்டிக்கு போகாமல், காத்திருக்கும் ஒளிப்பதிவாளர்(ஸ்ரீராம் சந்தோஷ்), படத்தொகுப்பாளர்(காகின்), இசையமைப்பாளர்(கே) மூவரும்!.
ஆனால், முதல்படமாக நலிவடைந்த கூத்துக்கலையை நம்பி உயிரிழந்த தன் தந்தையின் கதையை தான் எடுப்பேன்...என அடம்பிடிக்கும் வடிவேலை, கமர்ஷியல் படம் பண்ணி காசு பண்ண காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்...உதாசீனப்படுத்துகிறார்கள்!. அதனால், கடுப்பாகும் வடிவேல்., அப்படி உதாசீனப்படுத்தும் தயாரிப்பாளர் ஒருவரது வீட்டிலேயே நண்பர்கள் உதவியுடன் கொள்ளையடித்து அந்த காசில் அந்த கூத்து கதையை படம் பண்ணி ஹிட் அடித்து அதில் வரும் காசில், திருடிய பணத்தை திரும்ப வைப்பதும் மேலும் ஒரு தயாரிப்பாளருக்கு உதவுவதும் தான் கள்ளப்படம் படத்தின் கதை!. இந்த கதையுடன், அந்த தயாரிப்பாளர் வீட்டிலேயே அவரது செட்அப் ஆக இருக்கும் மாஜி ஹீரோயினும், தன் காதலருடன் சேர்ந்து தயாரிப்பாளரின் துட்டை தூக்க நினைப்பதையும், அவர்கள் அதில்., அந்த ஒரே நாளில் நடக்கும் கொள்ளை முயற்சியில், வகையாக மாட்டிக்கொள்வதையும், இவர்கள் வசதியாக படம் பண்ணுவதையும் கலந்து கட்டி..."எப்படி ஜெயிக்கிறோமுன்னு எவனும் பார்க்கறதில்லை...ஜெயிச்சோமான்னுதான்னு...பார்க்கும் உலகம்..."எனும் மெசேஜையும் சொல்லி கள்ளப்படத்தை, நல்ல படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்!
வாய்ப்பு தேடி அது கிடைக்காமல் கொள்ளையடிக்கும் உதவி இயக்குநராக, இப்பட இயக்குநர் வடிவேல் நடித்திருக்கிறார். இல்லை, இல்லை...வாழ்ந்திருக்கிறார். அவருடன் கூட்டு களவாணிகளாக ஓ. சாரி கலைஞானிகளாக...ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காகின், இசையமைப்பாளர் கே உள்ளிட்டவர்களும் கைகோர்த்து கவனம் ஈர்க்க முயன்றிருக்கின்றனர். இவர்களது தொழில் சம்பந்தப்பட்ட நடிப்பை விட படத்தில் இவர்களது மேற்படி பணிகள் சிறப்பு!
படத்தில் மாஜி நாயகியாக, தயாரிப்பாளர் ஆடுகளம் நரேனின் செட் அப்பாக வரும் லட்சுமி பிரியா செம 'மப்பு' மாப்பு!. 'இன்ஸ்' கவிதாபாரதியின் இச்சைககு அவர் எஸ் சொல்வதை சீன் ஆகவும் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். செந்தில், சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ஜிஸ்ணு, கவிதாபாரதி, வின்னர் ராமச்சந்திரன், செஃப் தாமு என எக்கச்சக்கம் பேர் வருகிறார்கள். அதில் "அவ கிடக்கட்டும்...80 லட்ச ரூபா காருக்கு எந்த சேதாரமும் ஆயிடக்கூடாது..." எனும் நரேன் கவனம் ஈர்க்கிறார்.
ஜெ. வடிவேலின் எழுத்து, இயக்கத்தில் கிளைமாக்சில் வரும் கூத்து பகுதிகள் ஓ.கே. அதேநேரம் படவாய்ப்பு தராத தயாரிப்பாளர் வீ்ட்டில் கொள்ளையடித்து படம் பண்ணலாம்...எனும் மெசேஜ் பெரும்அபத்தம்!. ஏற்கனவே இரவில் ஷூட்டிங் முடித்து திரும்பும் உதவி இயக்குநர்களை உண்டு, இல்லை....என குடையும் காவல்துறை, கள்ளப்படத்திற்கு அப்புறம் எப்படி கண்காணி்ககும்? என்பதே நம் கேள்வி!. மேலும் திருடி படம் எடுத்து ஜெயித்ததால் திருடிய பணத்தை அந்த தயாரிப்பாளரிடம் திருப்பி சேர்க்கும் நாயகர் இதே தான் எடுத்த படம் தோற்று போயிருந்தால் மீண்டும் திருடுவாரா...? எனும் கேள்வியும் எழுகிறது! தெரிந்தே திருடிவிட்டு திருடிய பொருளை திருப்பி கொடுத்தால் தவறு, சரி... என்று., ஆகிவிடுமா? எனும் கேள்விக்கும் இயக்குநர் தான் விடை சொல்ல வேண்டும்!.
எனவே, கள்ளப்படம், அவ்வளவு நல்ல படம் அல்ல...என்பதே நம் கருத்து!!