தினமலர் விமர்சனம் » தீக்குளிக்கும் பச்சைமரம்
தினமலர் விமர்சனம்
சின்னத்திரையின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான பிரஜன் பெரிய திரை கதாநாயகராக அதுவும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவில் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் ‘‘தீக்குளிக்கும் பச்சைமரம்’’.
விவசாயம் படுத்ததால் அப்பா நிழல்கள் ரவி எடுக்கும் விபரீத முடிவு சின்ன வயதிலேயே நாயகர் பிரஜனை அனாதையாக்குகிறது. சித்தி கொடுமை, செய்யாத திருட்டுக்காக சிறுவர் சீ்ர்திருத்தப்பள்ளி தண்டனை... என வாழ்க்கை திசைமாறும் பிரஜன், சிறுவர் சீர்திருத்த பள்ளியை விட்டு வெளியேவந்ததும் நேர்மையாக வாழ முடிவெடுத்து தன் ஊருக்கு வருகிறார். அங்கு பிரஜனுக்கு, அவர் அப்பா நிழல்கள் ரவியிடம் வேலை பார்த்தவர் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அடைக்கலம் கொடுத்தவரும் இறந்துவிட அவரது வயதுக்கு வந்த மகள்களை பாதுகாக்கும் பொறுப்பும் பிரஜனுக்கு ஏற்படுகிறது. இரண்டு மகள்களில் இளைய மகளை திருமணம் செய்துகொள்ளும் பிரஜன், வறுமையை துரத்த, வாழ்க்கையை நடத்த அந்த ஊர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் அங்கீகரிக்கப்படாத உதவியாளராகிறார். அந்த மருத்துவமனையில் விபத்தில் சிக்கி உயிரோடு வருபவர்கள் உறுப்புகளுக்காக பிணமாக்கப்படுவதையும் பிணமாக வரும் இளம் பெண்களின் உடலில் உயர் அதிகாரிகள் சிலர் உயிர் கொடுக்க முயற்சித்து தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்வதையும் பார்த்து பொங்கி எழுகிறார் பிரஜன். அதனால் அவரும் அவரது அழகிய குடும்பமும் ஈடு செய்ய முடியாத இன்னல்கள்தான் ‘தீக்குளிக்கும் பச்சைமரம்’ கதை மொத்தமும்!
கறைபடிந்த பற்கள், பரட்டை தலை, அழுக்கான ஆடை, சோகமயமான முகம் என கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் பிரஜன். பிணவறையில் பிணங்களை கூறுபோடும் தொழில் கற்கும்போது அவர் படும் அவஸ்தைகளும் அதனால் மெல்ல மெல்ல போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் காட்சிகளும் யதார்த்தம். கதாநாயகி பிரயூவுடனான பிரஜனின் காதலும் கல்யாணமும் குடியும் குடித்தனமும் சாமானியர்களின் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் படம் பிடிக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.
சந்திரிகாவாகவே வாழ்ந்திருக்கிறார் பிரயூ. கணவன் கண் எதிரே பிணவறையில் அவருக்கு நிகழும் கொடூரம் எந்தப் பெண்ணுக்கும் எந்த ஜென்மத்திலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்னும் ரீதியில் ரசிகர்களை துடிக்க வைத்திருக்கும் விதத்தி்ல் புதுமுக இரட்டை இயக்குநர்கள் எம்.வினிஷ் - எம்.பிரபீஸ் வென்றிருக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் உபயோகமாக நடித்துளளனர்.
ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டின் கேமிரா கோணங்கள்தான் தீக்குளிக்கும் பச்சைமரத்தை பதறும் மரமாக்கியிருக்கிறது என்றால் மிகையல்ல! புதியவர் ஜிதின் ரோஷனின் இசை மிரடட்லாக இருக்கிறது!
மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் தீக்குளிக்கும் பச்சைமரம் - ‘ரசிகர்கள் பதறும் மரம்’.