சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் நாடகத்தில் நடித்தவர்கள் தான் சினிமாவிலும் நடித்தார்கள். அதனால் நாடகம் போன்றே தூய தமிழில் வசனம் பேசினார்கள். அப்படியான காலத்தில் யதார்த்த தமிழில் பேசிய முதல் நடிகர் டி.எஸ்.பாலையா. அவரது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்."சே... இன்னிக்கு வெள்ளிக்கிழமை கத்திய கையால தொடப்படாதப்பா" என்று மதுரை வீரனில் எம்.ஜி.ஆரிடம் கெத்து காட்டியவர் டி.எஸ்.பாலையா. காதலிக்க நேரமில்லை படத்தில் சினிமாவின் கதையை சொல்லும் நாகேஷை விட அதை வசனமே பேசாமல் கேட்ட பாலையாவின் நடிப்பு இன்றைக்கும் பேசப்படுகிறது. மார்பு சதை குலுங்க குலுங்க தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் அடித்த தவில் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
திருவிளையாடல் படத்தில் வித்யாகர்வம் பிடித்த ஹேமநாத பாகவதராக நடித்தார். அவர் பாடும் "ஒரு நாள் போதுமா..." பாடலை பாடியவர் பாலமுரளிகிருஷ்ணா. அவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சென்று ஹேமநாத பாகவதராக நானே நடிக்கிறேன் என்றார். அதற்கு ஏ.பி.நாகராஜன் சொன்னார் "இசையில் நீங்கள் மேதைதான், ஆனால் நடிப்பில் அவர் தான் மேதை. இந்த இரண்டு மேதைகளும் சேர்ந்து தான் ஹேமநாதரை திரையில் வாழ வைக்க முடியும்" என்றார். அந்த கேரக்டரில் வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்று சொல்லி மறுத்து விட்டார். இதனால் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
படம் வெளியான பிறகு படத்தை பார்த்த பாலமுரளி கிருஷ்ணா உடனே ஏ.பி.நாகராஜன் வீட்டுக்கே சென்று "நாகராஜா நீ சொன்னது சரிதாம்பா. அவர் மாதிரி என்னால நடிச்சிருக்கவே முடியாது. நிஜத்துலகூட எனக்கு வித்யாகர்வம் கிடையாது. ஆனா இசைக்கு சம்பந்தமே இல்லாத பாலையா என்னமா நடிச்சிருக்காரு என்று பாராட்டி விட்டுத் திரும்பினார். பாலையா ஹேமநாத பாகவதராக இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.