ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏவிஎம்மின் மோகினி தொடரை இயக்கி வருபவர் ஆர்.கே., இதற்கு முன்பு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பாசம், வைர நெஞ்சம், அவளொரு மின்சாரம், வைராக்கியம் என நான்கு சீரியல்கள் இயக்கிய ஆர்.கே, ஐந்தாவதாக இந்த மோகினி மெகா சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு நேயர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து அவர் கூறுகையில்,
மோகினிதான் இந்த சீரியலின் பிரதான கேரக்டர். அவளது ஏழை காதலனுக்கு ஐந்து தங்கைகள் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் வரை நமக்குள் எந்தவித உறவும் இருக்கக்கூடாது என்பது அவர்களின் ஒப்பந்தம். ஆனால் அவளது காதலன் திடீரென்று கொல்லப்படுகிறான். அதையடுத்து தனது காதலனை கொன்றவனை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க திட்டமிடுகிறாள் மோகினி. ஆனால் கல்யாணம் செய்த பிறகுதான் காதலனை தனது கணவன் கொல்லவில்லை என்பது அவளுக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த மோகினி தொடரின் மீதிக்கதை.
மேலும், ஏவிஎம் சீரியல்களுக்கென்றே மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரும், வரவேற்பும் உள்ளது. அது இந்த சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு நான் இயக்கியதில் வைரநெஞ்சம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆனது. அதேபோன்று இப்போது இந்த மோகினி சீரியலுக்கும் நேயர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதனால் அதிக உற்சாகத்துடன் சீரியலை இயக்கி வருகிறேன்.
சீரியல்களின் ரேட்டிங்கைப் பொறுத்து கதை, கேரக்டர்களை மாற்றிக்கொண்டு வருகிறார்களே, அதேபோன்று இந்த சீரியலில் ஏதேனும் நிகழ்ந்ததா?
சில சீரியல்களில் அப்படி செய்கிறார்கள். ஆனால் ஏவிஎம் சீரியல்களைப் பொறுத்தவரை அப்படி எதுவும் செய்வதில்லை. முதலிலேயே கதையை தெளிவாக முடிவு செய்து விட்டுத்தான் படப்பிடிப்பில் இறங்குகிறோம். முக்கியமாக பரபரப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக தேவையில்லாத விசயங்களை நாங்கள் கதைக்குள் திணிப்பதில்லை. அதோடு, க்ரைம், வன்முறை, ஆபாசம், சிகரெட், மதுபானம் என எந்த விசயங்களையும் எங்கள் சீரியல்களில் அனுமதிப்பதில்லை. செண்டிமென்ட், காமெடி, விழிப்புணர்வு என மக்களுக்கு பயன்படக்கூடிய விசயங்களை மட்டுமே கதையில் கொண்டு வருகிறோம். அதனால்தான் எங்களது ஏவிஎம்மில் இருந்து வெளிவரும் சீரியல்கள் எல்லாமே ஆரோக்யமானதாக உள்ளன.
சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகள் சீரியலில் நடித்தால், நேயர்கள் அதிகமாக வரவேற்பதாக கூறப்படுகிறதே?
அதெல்லாம் இல்லை. சினிமா நடிகைகள் நடித்த எத்தனையோ சீரியல்கள் சரியாக போகவில்லை. அதேசமயம் சீரியல் நடிகைகள் நடித்த பல சீரியல்கள் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. சீரியல்களைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. கேரக்டர்களில் நடிப்பவர்களை அந்த கேரக்டர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். நடிகர் நடிகைகளாக எந்த சீரியலையும் மக்கள் பார்ப்பதில்லை.
சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலை எதிர்காலத்தில் மாற வாய்ப்பு உள்ளதா?
அது டவுட்தான். ஆண்களை மையமாக வைத்து வெளியான பல சீரியல்கள் வெற்றி பெறவில்லை. பெண்களை மையமாக வைத்து உருவான சீரியல்கள் மட்டுமே பெரிய அளவில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. காரணம் பெரும்பாலும் சீரியல் பார்ப்பதே பெண்கள்தான். தன்னைப்போன்ற ஒரு பெண் ஒரு பிரச்னையில் சிக்கி அதிலிருந்து மீள்வதற்கு போராடுவதைப் பார்க்கையில்தான் அவர்களுக்கு ஒரு பீல் வரும். அதனால் சீரியல்கள் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதை மாற்ற முடியாது. இதுவே நிரந்தரம்.
இந்தி சீரியல்களைப் போன்று தமிழ் சீரியல்களின் குவாலிட்டி இல்லையே?
இந்தியில் வெளியாகும் சீரியல்களின் பட்ஜெட் ரொம்ப பெரியது. இந்தியா முழுக்க அந்த சீரியல்கள் வெளியாகின்றன. அதன் வியாபாரம் வட்டம் ரொம்ப பெரியது என்பதால் பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். ஆனால் தமிழ் சீரியல்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான் வெளியாகிறது. மிகச்சிறிய வியாபார வட்டம். அதனால் இதற்குள் நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்கிறோம. அதனால் பட்ஜெட் விசயத்தில் இந்தி சீரியல்களுடன் நம்மால் போட்டி போட முடியாது.
மேலும், தமிழ் சீரியல்களைப் பொறுத்தவரை நம்முடைய நேயர்கள் எந்த மாதிரியான கதைகளை விரும்புகிறார்களோ அதை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு, எங்களது ஏவிஎம் சீரியல்களைப் பொறுத்தவரை கதை மட்டுமே பிரதானமாக சென்றபோதும், இடையிடையே மக்களுக்கு தேவையான சில விசயங்களையும் சொல்கிறோம். அதாவது ஒருவன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அதில் வரும் ஒரு கேரக்டர் தலைக்கவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை கேசுவலாக சொல்வது போன்றும் காட்சியமைப் போம். இப்படி எங்களால் முடிந்தவரை மக்களுக்கு தேவையான சில நல்ல விச யங்களையும் சீரியல்கள் மூலம் சொல்லி வருகிறோம் என்கிறார் இயக்குனர் ஆர்.கே.,