தினமலர் விமர்சனம் » சும்மா நச்சுன்னு இருக்கு
தினமலர் விமர்சனம்
‘மகாபிரபு’, ‘பகவதி’, ‘ஏய்’ போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களின் இயக்குனர் ‘ஏ’ வெங்கடேஷ், அதிரடி, காமெடி என களமிறங்கியிருக்கும் திரைப்படம்தான் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’. தன் பாணியில் இருந்து விலகி ‘சாக்லெட்’ எனும் காதல் படத்தில் ஜெயித்த வெங்கடேஷ், இந்தகாமெடி படத்தில் கோட்டை விட்டாரா? கோட்டையை பிடித்திருக்கிறாரா? பார்ப்போம்!
25 லட்ச ரூபாய் அவசர, அவசிய தேவை பணத்திற்காக லட்சியம் எதுவுமில்லாமல் புதுக்கோட்டையில் இருந்து சென்னை வந்து ஆட்டோ ஓட்டுகிறார் ஹீரோ தமன்! ஓர் நாள் இரவு ஐந்தாறு இளைஞர்கள் துரத்த ஓடிவரும் ஒரு நாயகி விபா, அவரது ஆட்டோ முன் விழுந்து காப்பாற்ற சொல்லி கதறுகிறார்.விடுவாரா ஹீரோ? வித்தியாசமான(!) ஸ்டைலில் துரத்தி வந்தவர்களை விரட்டி அடிக்கிறார். ஆனால், அதில் ஒருவன் விட்டெறிந்த கல், ஹீரோயின் விபாவின் மண்டையை பதம் பார்க்க, வழிந்தோடு்ம் ரத்தத்துடன் அம்மணியை அலேக்காக தூக்கி ஆட்டோவில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போய் ‘அட்மிட்’ செய்கிறார். தவிர்க்க இயலாத சூழலில் விபாவின் கணவர் என்னும் இடத்தில் கையெழுத்தும் போடுகிறார். சுயவினைவின்றி விபா படுத்த படுக்கையாக இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன., விஷயம் கேள்விப்பட்டு விபாவின் மலேசிய கோடீஸ்வரர் ‘டத்தோ’ அப்பா ஏ.வெங்கடேஷ், குடும்ப சகிதமாக தனி விமானத்தில் சென்னை வந்து மகளையும் மகளது காதல் கணவனாக நடிக்கும் தமனையும் அவரது நண்பர்களையும் அதே விமானத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு மலேசியா திரும்புகிறார். அங்கு ராஜ வாழ்க்கை வாழும் தமன் அண்ட் கோவினர் யார்? என்னும் உண்மை தெரியவந்ததா? இதில் இன்னொரு நாயகி அர்ச்சனாவின் ரோல் என்ன? ‘பவர்’ சீனிவாசனின் பங்கென்ன? ‘பவர்’ என்ன? தம்பி ராமைய்யா, ஈரோடு மகேஷ் போன்றவர்களின் வேலை என்ன? என்பதற்கெல்லாம் காமெடி என்னும் பெயரில் அடித்து, பிடித்து, கடித்து விடை சொல்கிறது ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ படத்தின் வழவழ... கொழ,கொழ... மீதிக்கதை!
தமன் ஹேண்ட்ஸமான ஹீரோவாக தெரிகிறார். ஆனால், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ இப்படி அடுத்தடுத்து படு லோக்கலான கதைகளை தேர்ந்தெடுத்து படுகுழியில் விழுவதை தவிர்ப்பது நலம் பயக்கும்! ப்ளாஷ்பேக்காக இவர் ரஜினியின் ‘பாட்ஷா’ கதையை சொல்வதும், ‘பவர்’ சீனிவாசன் மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ கதையை அளப்பதும், ‘எத்தினி படத்தில...?! இன்னும் நல்லா யோசித்திருக்கலாம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்! அவர் எங்கே? யோசிக்க? அவர்தான் கோடீஸ்வர டத்தோவாக தனி ஹெலிகாப்டர்ல பறக்கிறதும், இவர் கீழே நிக்கிறப்போ பேக்-ரவுண்டில் ஹெலிகாப்டர் பறக்கிறதுமா... இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டிருக்கிறாரே பாவம் (நமக்கெல்லாம் வெங்கடேஷ் சார்., ‘அங்காடிதெரு’ அண்ணாச்சி கடை காரியதரிசி கேரக்டருதாங்க கச்சிதம், என்பதை கவனத்தில் கொள்ளவும்)!
தமன், தம்பி ராமைய்யா, ஈரோடு மகேஷ், ‘பவர்’ சீனி எல்லோரையும் காட்டிலும் ஹீரோயின்கள் விபா, அர்ச்சனா, இசையமைப்பாளர் அச்சு, ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், படத்தொகுப்பாளர்கள் வி.டி.விஜயன் - என்.கணேஷ்குமார் எல்லோரும் இருந்தும், ஏ.வெங்கடேஷின் எழுத்து இயக்கத்தில்
‘சும்மா நச்சுன்னு இருக்கு’ - ‘சுமாராத்தான்’ இருக்கு!.-------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
பெரிய தொழில் அதிபரோட பொண்ணு ஒரு பொறம்போக்கை லவ்வுது. அப்பாவின் சொத்துக்கள் வேண்டாம்னு உதறிட்டு அவன் வீட்டுக்கு வருது. அந்த தத்தி “எனக்கு உன் மேல ரியல் லவ் எல்லாம் இல்லை, சொத்துக்குத்தான் ஆசைப்பட்டேன்னு உளறிடறான். உடனே அவள் ஜெர்க் ஆகிநிக்கறார். அவன் கூட இருக்கும் ரவுடிங்க வேஸ்ட்டா போகக்கூடாது, டேஸ்ட் பார்த்துடலாம்னு சொல்றாங்க. அவ ஓடறா, அவங்க துரத்தறாங்க. இப்போ ஹீரோ என்ட்ரி.
ஃபைட்ல அந்தப்பொண்ணு தலைல அடிபட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய்டறா. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றாங்க. நர்ஸ், ஹீரோவை அந்த பொண்ணோட புருஷனா நினைச்சு ஃபார்ம்ல சைன் வாங்கறா. பொண்ணோட அப்பா வர்றாரு. அவர் கிட்டேயும் அந்த பொய்யை ஹீரோ மெயிண்ட்டெயின் பண்றாரு. அந்தப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி. அதை ஹீரோ லவ் பண்றாரு. அக்கா புருஷன்கர நினைப்பு எதுவும் இல்லாம அந்த பொண்ணும் லவ்வுக்கு ஓக்கே சொல்லுது. ஊரார்க்கு அக்காவை லவ்வுற ஹீரோ, தனி டிராக்ல தங்கச்சியை லவ்விட்டு இருக்கும்போது அக்காவுக்கு நினைவு திரும்புது. என்ன ஆகுது? என்பது தான் மிச்ச மீதி மொக்கை கதை. நல்ல காமெடி ஸ்கோப் உள்ள கதையை அநியாயமா மொக்கை படம் ஆக்குவது எப்படி?ன்னு ஏ.வெங்கடேஷ் கிட்டே எல்லாரும் கத்துக்கனும்.
ஹீரோ சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்ல ஹீரோவா வந்த தமன். மொக்கையான திரைக்கதை என்றாலும் இவரால் முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சி நடிக்கறார். 2 ஹீரோயின் இருந்தும் இவருக்கு ஒண்ணுல கூட கெமிஸ்ட்ரியோ, பிசிக்ஸோ ஒர்க் அவுட் ஆகலை.
நிஜ ஹீரோ டாக்டர் சீனிவாசன் தான். காமெடி வில்லனா வர்றார், இவர் விஜயை கலாய்த்து நடனம் ஆடுவது, ரஜினியை நக்கல் அடித்து பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் ஆரவாரம். தியேட்டர் அல்லோல கல்லோலப்படுகிறது. ஆனால் சீனிவாசன் கொஞ்சம் நடிக்கவும் கத்துக்கணும், சீக்கிரம் போர் அடிச்சுடும்.
ஹீரோயின்ஸ் 2 பேரு. அர்ச்சனா, விபா அப்டின்னு. 2ம் தேறாது. 50 மார்க் போடலாம். லோ பட்ஜெட் படம் இல்லையா? அதான் சுமாரா இருந்தா போதும்னு நினைச்சிருப்பாங்க போல.
ஈரோடு மகேஷ் படத்துக்கு வசனம். சந்தானம் மாதிரி படம் பூரா வர்றார் ஆனா ஒரு சீனில் கூட அவரால் ஆடியன்ஸ் கிட்டே கை தட்டல் வாங்க முடியல. ரெண்டரை மணி நேரம் ஓடும் படத்துல தனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பை ஈரோடு மகேஷ் தவற விட்டுட்டார். ஒரு வசனகர்த்தாவாவும் சரி, ஒரு காமெடியனாவும் சரி வேஸ்ட் பண்ணிட்டார்
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஹீரோயின்க்கு அப்பாவா வரும் கேரக்டர் ரோல். ஓக்கே ரகம். தம்பி ராமைய்யா, அழகர் சாமியின் குதிரை நாயகன் அப்புக்குட்டி, வெண்ணிற ஆடை மூர்த்தி என வீணடிக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல் நீளம்.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. ஸ்டார் வேல்யூவுக்காக சீனிவாசனை புக் பண்ணியது, கதைக்கு சம்பந்தமே இல்லைன்னாலும் சீனிவாசனுக்கு பவர் ஃபுல் போர்ஷன் ஒதுக்கினது.
2. லோ பட்ஜெட் படம்னாலும், 3 ஹீரோயின்கள் இருந்தும் லோ லெவல்க்கு இறங்காம 3 பெரையும் கண்ணியமா காட்டியது.
3. பாடல்கள் சொதப்பலா இல்லாம சி செண்ட்டர் ஆடியன்சை கவரும் வகையில் படம் ஆக்கியது, சீனிவாசனுக்கு 2 பாட்டு தந்தது.
4. நினைத்ததை முடிப்பவன் நான் தான் துணிச்சலை வளர்த்தவன் நான் தான்... பாட்டுக்கு சீனியின் ஆட்டம், விஜய்யை கலாய்த்து நடன ஸ்டெப்ஸ், விஜய் ரசிகர்களையே கவர்வது
இயக்குநரிடம் சில கேள்விகள்1. நர்ஸ் எந்தவித ஆதாரமும் இல்லாம எடுத்த எடுப்புல ஹீரோவை அந்த பொண்ணோட புருசன்னு எப்படி நினைக்குது? பேஷண்ட்டுக்கு நீங்க என்ன முறை வேணும் அப்டினு தானே வழக்கமா கேட்பாங்க?
2. ஹீரோ, தம்பி ராமையா, ஈரோடு மகேஷ் 3 பேரும் பேண்ட், டி-சர்ட் போட்டு இன் பண்ணி தான் எப்பவும் நைட் டைம்ல தூங்கறாங்க, அது ஏன்? ஒரு சீனில் நடு இரவில் எதோ சத்தம் கேட்டு 3 பேரும் எழுந்து ஓடி வர்றாங்க. அவ்ளோவ் ஃபிரெஷா இண்ட்டர்வ்யூக்குப்போறவங்க மாதிரி இருக்காங்க
3. ஹீரோயினுக்கு என்ன விதமான கோமான்னு டாக்டர் கூட கடைசி வரை சொல்லவே இல்லை. ஏதோ பெக்கூலியர் டைப் ஆஃப் கோமான்னு ஒரு டாக்டரே பொத்தாம்பொதுவா சொல்வாரா?
4. ஹீரோவுக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுது. அதை பல காட்சிகளில் மகேஷ் சொல்றார். ஆனா மாமனார் வெங்கடேஷ் எவ்வளவு பணம் வேணும்னு கேட்கும்போது 3 லட்சம் போதும்னு ஹீரோ சொல்றாரே, எப்படி?
5, ஹீரோ தான் ஒரு அநாதைன்னு தேவை இல்லாம ஏன் பொய் சொல்லி மாட்டிக்கனும்? அம்மா இருக்காங்க, ஆனா அவங்களுக்கு எங்க லவ்மேட்டர் தெரியாதுன்னு சொல்லி ஈசியா சமாளிச்சிருக்கலாமே?
6. ஒரு சீன்ல ரோட்டோரமா ஹீரோயின் கார் அருகில் நிக்கறா. கார் பிரேக் டவுன் ஆகிடுச்சுன்னு ஹீரோ கிட்டே சொல்றா. பிரேக்கே இல்லைன்னா எப்படி காரை ஓரமா நிறுத்த முடியும்? மரத்துல இடிச்சுத்தானே நிறுத்த முடியும் ? அதுக்குப்பேசாம கார் பஞ்சர்னு சொல்லி இருக்கலாம்.
7. ஹீரோ - ஹீரோயின் லவ் மலர்ந்த டுபாக்கூர் கதைக்கு ஒரு புது சிச்சிவேஷன் கூடவா யோசிக்க முடியல? பாட்ஷா ரஜினி - நக்மா கதையை அப்படியேவா சுடுவாங்க? கற்பனை வறட்சி?
9. ஹீரோ, தன் மச்சினிகிட்டே எந்த உண்மையும் சொல்லலை. இதெல்லாம் டிராமான்னு சொல்லலை, மேரேஜ் பண்ணிக்கவே இல்லைன்னும் சொல்லலை, ஆனாலும் ஹீரோவோட லவ்வை ஏத்துக்கறாரே எப்படி?
மனம் கவர்ந்த வசனங்கள்1. லைப்ல ‘பிராடு‘ பண்ணுனா எதிர்காலம் ’’பிராடா’’(அகலமா) டா இருக்கும்.
2. சீனிவாசன் - நான் எப்போ வருவேன். எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது.
3. இந்த கதைல என்னவோ இடிக்குதே? உன் தொப்பை தான் இடிக்குது.
4. சீனிவாசன் - நான் தாண்டா உனக்கு வில்லன்; உன் பேர் என்ன? வில்லன் பேர்எல்லாம் சொல்ல மாட்டாண்டா
5. அக்னி நட்சத்திரம் கதை உங்க கதையை உல்டா பண்ணி இருக்கு, நீங்க ஏன் மணிரத்னம் மேல கேஸ் போடக்கூடாது ? சீனிவாசன் - நான் ஏன் அவர் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போடணும்?
6. யூ ஆர் லுக்கிங்க் ஸோ ஸ்மார்ட்னு அவ சொன்னாளே? அவ ஆஸ்திரேலியாக்காரி, கங்காருன்னா ரொம்ப பிடிக்கும், நீ பார்க்க கங்காரு மாதிரியே இருக்கியா அதான்.
7. இங்கே பாரு, நீ என்னை ரிஜக்ட் பண்ணிட்டே, அதுக்குப்பின் என்னை திட்டும் உரிமை உனக்கு கிடையாது.
8. ஐ லவ் யூ ஒரு நிமிஷம் இரு... தம்பி இங்கே வா, நான் யாரு? அக்கா இவர் யாரு? பெரியப்பா பார்த்தியா, ஒரு பெரியப்பா எப்படி அக்காவை லவ் பண்ண முடியும்?
9. செஸ்போர்டு முன் பாஸ், மூவ் பண்ணுங்க ஐயோ செஸ் போர்டை மூவ் பண்ணச்சொல்லலை. சிப்பாய், ராணி ஏதாவது மூவ் பண்ணுங்க.
10. என்னை விட்டு எப்பவும் ஒரு அடி தள்ளியே நில்லுன்னு எப்பவும் சொல்வேன், இப்போ சொல்றேன், என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட தள்ளி நிக்கக்கூடாது. ஐ லவ் யூ.
சி.பி.கமெண்ட் - சும்மா நச்சுன்னு இருக்கு - படு மொக்கையா இருக்கு. சீனிவாசன் - ஓக்கே. ஈரோடு மகேஷ் வசனம் சொதப்பல். திரைக்கதை மிக பலவீனம். சீனிவாசன் ரசிகர்கள் மட்டும் டி.வி.ல பார்க்கலாம்.