பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் வெளியான படம் 2.0. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த படம். படத்தை பற்றி இரு விதமான விமர்சனங்கள் வெளிவந்த போதும் படத்தில் அக்ஷய்குமார் நடித்த பட்சி ராஜன் கேரக்டரும், பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்கிற அந்த கேரக்டரின் நோக்கமும் பரவலாக பேசப்படுகிறது.
அக்ஷய்குமார் நடித்துள்ள பட்சி ராஜன் கேரக்டர் இந்தியாவின் பறவைகள் மனிதன் என்று போற்றப்படுகிற சலீம் அலியை அடிப்படையாக கொண்டதாகும். அக்ஷய் குமாரின் தோற்றம் முதல் அவர் தொடர்பான காட்சிகள் வரை சலீம் அலி தொடர்புடையதாகும். 2.0 படத்திற்கு பிறகு இணையத்தில் சலீம் அலியை தேடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நாமும், சலீம் அலி பற்றி தெரிந்து கொள்வோம்.
நவம்பர் 12, 1896ல் பம்பாயில் பிறந்தவர் சலீம் அலி. ஒரு வயதில் இருக்கும் போது தந்தையையும், மூன்று வயதில் தாயையும் இழந்தார். மாமா அம்ருதின் தியாப்ஜியால் வளர்க்கப்பட்டார். மாமாவின் வேட்டையாடும் தொழிலும், மூத்த சகோதரர் ஹமித் வேலைபார்த்த காட்டுப்பகுதிக்கு சலீம் அவ்வப்போது சென்று வந்ததும் இயற்கை ஆராய்ச்சிக்கும், பறவை ஆராய்ச்சிக்கும் சலீமை தூண்டியது.
வீட்டில், சலீம் பறவைகளை வளர்த்து வந்தார். இதுவே முதல் படி. இரண்டாவது துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான சலீம், குருவிகளை எங்கே பார்த்தாலும் சுடுவதை வழக்கமாக கொண்டார். ஒரு நாள் ஒரு குருவியை சுட்டவுடன் நேராக வந்து அவர் கால்களைத் தொட்டு உயிருக்காகக் கெஞ்சுவதுபோல இருந்தது. இது அவர் மனதை நெகிழ வைத்தது.
அன்று முதல் குருவி சுடுவதை நிறுத்திய சலீம், பறவைகளை நேசிக்க ஆரம்பித்தார். பறவைகள் மியூசியத்தில் ஆயிரக்கணக்கிலான பறவைகளை உயிரற்ற வடிவத்தில் சலீம் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். இங்கிருந்து தான் சலீமுக்கு பறவையைப் பற்றிய அதீத ஆர்வம் ஏற்படுகிறது. தானும் ஒரு பறவை ஆராய்ச்சியாளனாக ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டார்.
செயின்ட் சேவியர் கல்லூரியில் அவர் விலங்கியல் பிரிவில் சேர்ந்தார். அங்கு பறவைகளின் குடும்ப விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்கத் தொடங்கிய சலீம், ஒரு முழு பறவையாளராக மாறத் தொடங்கினார்.
பறவைகள் பற்றி முறையாக கற்க வேண்டும் என்ற உந்துதல் அவரை பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கு பறவைகளை பகுத்தறிந்து தரம் பிரிக்கும் டாக்சானமி மாணவராக சேர்ந்தார். பறவைகள் பற்றிய அறிவியல் பிரிவில் மிக முக்கிய பாடங்களான பறவைகளுக்கு வளையம் இடுதல், பட்டை கட்டுதல் ஆகிய இரண்டையும் சலீம் அலி கற்றுக் கொண்டார்.
சலீம் அலி, பரத்பூர் (ராஜஸ்தான்) பறவைகள் சரணாலயத்தை வடிவமைப்பதிலும், அமைதிப் பள்ளத்தாக்கு (கேரளா) தேசியப் பூங்கா உருவாவதிலும் முக்கிய பங்கு வகித்தார். அங்கீகாரங்களும், பட்டங்களும் தாமதமாக கிடைத்தாலும், பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கவுரவித்தன. இந்திய அரசு சலீம் அலியை 1958ல் பத்ம பூஷன் விருது வழங்கியும், 1976ல் பத்மவிபூஷண் வழங்கியும் கவுரவித்தது.
1985ல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின், கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை நிறுவியது. தன்னுடைய வாழ்வு முழுவதையும் பறவைகளுக்காக அர்ப்பணித்த சலீம் அலி, 1987 ஜூன் 20ம் நாள் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். பறவைகள் ஆராய்ச்சியில் இந்தியாவைத் தலைநிமிர்ந்து நிற்கவைத்த அவர், 'இந்தியாவின் பறவை மனிதன்“ என்று போற்றப்படுகிறார்.