'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எவ்வளவு தான் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்து இருந்தாலும் இயற்கைக்கு முன்னர் எதுவும் பெரிதல்ல என பேரழிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் நிலைகுலைந்து போய் உள்ளன. ஊருக்கே உணவளித்தவர்கள் இன்று அடுத்தவர்களிடம் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுள்ளது இந்த கஜா புயல்.
நாகையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இன்னும் மின்வசதி இல்லாமல் அவதியுறுகின்றனர் மக்கள். பச்சிளம் குழந்தைகள் பாலுக்கு தவிக்கின்றனர். தங்க வீடு கூட இல்லாமல் ரோட்டில் படுத்து உறங்குகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அரசியல் கட்சியினரை தாண்டி, தன்னார்வலர்கள், பொதுமக்கள், திரையுலகினர் என பலரும் உதவி வருகின்றனர்.
நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்றத்தினர் மூலம் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இருந்தாலும் இந்த களப்பணி போதாது என்பதே உண்மை. தங்கள் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒவ்வொரு ஊர்களிலும், கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்தும், மாலை, தோரணங்கள் என விடிய விடிய கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள், தன் மக்களுக்கு பேரிடர் வரும்போது அதிகளவில் துணை நிற்க தயங்குவது ஏனோ தெரியவில்லை. இன்றைக்கு பல நடிகர்களின் ரசிகர்கள் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் களமிறங்கி வேலை செய்தாலும், இன்னும் பலரும் முன் வந்தால் தான் அந்த மாவட்டங்களை மீட்டெடுக்க முடியும்.
திரையுலகினர் களமிறங்குவார்களா.?
திரையுலகினர் பலரும் நிதியுதவியும், பொருள் உதவியும் அளித்து வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் ரசிகர் மன்றங்கள் மூலமாக உதவுகின்றனர். ஜிவி பிரகாஷ், விமல், மன்சூரலிகான், கஸ்தூரி போன்றவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இது மட்டும் போதாது இன்னும் பலர் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
கஜா புயலால் இப்போது ஏற்பட்டிருக்கும் துயரம் சொல்லி மாளாது. மக்களின் கண்ணீர் நிலையும் கையறு நிலையும் இதயத்தை அறுக்கிறது. இந்நேரம் நம் சினிமா உலகம் ஒன்றுபட்டு பாதிக்கப்பட்ட பகுதி நோக்கி கரங்கள் நீள வேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும், வெளியாகும் படங்களிலிருந்து ஒரு ரூபாய் தருகிறோம் என அறிவித்ததை இதுவரை சரிவர நிறைவேற்றவில்லை என்றாலும் போகுது. விடுங்கள்.
இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமாக மிகப் பெரிய தொகையை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிவிக்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் மனப்பூர்வமாக சம்மதிக்கவே செய்வார்கள். பணமாக நாம் செய்யும் உதவி அவர்களுக்கு அடுத்து முண்டியடித்து வாழ்க்கையைத் தொடங்க உதவும். அதேசமயம் மிக முக்கிய தேவையாக இருப்பது சீரமைப்புப் பணி.
நமது தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, இயக்குநர் சங்கம் இணைந்து பேசி அனைத்து சங்கங்களும் உடன்பட்டு களப்பணி செய்ய ஆவண செய்ய வேண்டும். சினிமா வரலாற்றில் மக்களின் துயரம் நம் துயரம் என சினிமா ஊழியர்களும், முதலாளிகளும், இயக்குநர்களும் இணைந்து இறங்கி நின்றார்கள் என்று பதிய வேண்டும்.
மக்களின் துயரத்தை நேரில் சென்று அவர்களுக்கு உதவ ஒரு சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தும் முடிவெடுக்கலாம். நடிகர்கள் அவர்களது ரசிகப்பட்டாளங்களை களமிறக்கச் சொல்லலாம். பணம், பொருள் மட்டுமல்ல, உடன் நிற்கும் உதவி இறந்துகிடக்கும் ஒரு மாட்டை அடக்கம் செய்ய ஒரு காலைப் பிடிக்க ஆள் இருந்தால் போதும். அந்த அளவு அங்கு துயரமும் உதவும் ஆள் பற்றாக்குறையும் கொட்டிக்கிடக்கு.
மக்களோடு மக்களாக சினிமா உலகம் நிற்கும் என்பதை மக்களின் துயரம் துடைத்துவிட்டுப் பேசுவோம். வெறும் டுவிட்டரிலும், முகநூலிலும், படங்களில் வீர வசனங்களிலும் மட்டுமல்ல நமக்கும், மக்களுக்குமான உறவு அதைத்தாண்டி துயர நேரங்களில் கூட நிற்பதுதான். நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பாக இருக்க முடியும்.
சினிமா உலகமே... வாருங்கள் மக்கள் பக்கம் நிற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.