துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான, 'சர்கார்' படத்தில், அதிமுகவுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் சினிமாத் துறையினர் பலரும் மவுனமாக வேடிக்கைப் பார்த்து வந்தனர். ஜிவி.பிரகாஷ், பா.ரஞ்சித், அமீர் போன்ற வெகு சிலர் மட்டும் சர்கார் படத்துக்கும் விஜய்க்கும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சின்னத்திரை இயக்குநரும் செக்கச்சிவந்த வானம், கொடிவீரன், அருவி போன்ற படங்களில் நடித்த நடிகருமான கவிதாபாரதி சர்கார் படத்துக்கும், ஏ.ஆர்.முருகதாஸூக்கும் எதிராக கருத்து தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் அவர் கூறியதாவது :
சுந்தர் ராமசாமியின் அப்பா ராமேஸ்வரம் மீனவர். அவரோடு சேர்ந்து மொத்தம் பதிமூன்று பேர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
'என்னைக் கரைக்குக் கொண்டுபோனால் அடக்கம் செய்ய செலவாகும். அந்தக் காசுல என் புள்ளைங்க பசியாறட்டும், என்னைக் கடல்லயே போட்ருங்க...' என்று மரண வாக்காகச் சொல்லிவிட்டு செத்துப் போகிறார் சு.ரா.வின் தந்தை. அதேபோல் அவரது உடலைக் கடலில் வீசிவிடுகிறார்கள்.
'எல்லாருக்கும் அஸ்தியைக் கடல்ல கரைப்பாங்க. ஆனா, எங்கப்பாவையே கடல்ல கரைச்சிட்டாங்க' என்று கண்ணீர் விடுகிறான் சுந்தர் ராமசாமி. அப்படியாப்பட்ட சோகப்பின்னணி கொண்ட கதாநாயகன் என்ன செய்வான்..?
தன் தந்தையின் சாவுக்குக் காரணமான சிங்கள ராணுவத்துக் கெதிராகக் குரல் கொடுப்பான். அது கஷ்டமென்றால், குறைந்தபட்சம் தன் தந்தைபோல் இனி எந்த மீனவனும் சாகக்கூடாதென மீனவ நண்பனாகத் திகழ்வான்.
ஆனால், ஜெயமோகனைத் துணைகொண்ட முருகதாஸின் கதாநாயகன், ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியின் தலைமை அதிகாரியாகிறான். வருடம் ஆயிரத்து எண்ணூறு கோடி சம்பளம் பெறுகிறான். அதில் ஒத்தப்பைசாகூட ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் செலவிடவில்லை.
மாறாக, தனக்கெதிரான கம்பெனிகளை அழித்து, இழுத்து மூடுகிறான். அப்படி மூடப்பட்ட ஒரு கம்பெனியால் இருபத்தியிரண்டாயிரம் பேர் வேலையிழக்கின்றனர். இப்படி பல கம்பெனிகளை மூடி லட்சக்கணக்கானவர்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்ட கார்ப்பரேட் கிரிமினல், அவன் ஓட்டை யாரோ போட்டதற்காக வீறுகொண்டு எழுகிறான்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், காவிரி என எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கிறான். ஆனால், பாவம்... அந்தக் கூமுட்டைக்கு டில்லியில் ஒரு அரசாங்கம் இருப்பதே தெரியவில்லை. எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் முதல்வர் மாசிலாமணி தான் என்றே நம்புகிறான்.
அவரை எதிர்த்து டி.ராஜேந்தரின் உடல் மொழியிலும், சமுத்திரக்கனியின் வாய்மொழியிலும் போராடுகிறான். போதும், மீதியை வெண்திரையில் காணுங்கள்.
சொல்ல வந்தது இதுதான்...
1. ஏ.ஆர்.முருகதாஸ், தன் கதாநாயகனுக்கு சுந்தர் ராமசாமி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எச்.ராஜா என்று பெயர் வைத்திருக்கலாம். காரணம், ஏறக்குறைய எச்சாரின் அரசியல் பார்வையுடன் தான் தமிழக அரசியலின் மீது குரோதத்தோடு இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
2. சமகால நிகழ்வுகளை விஜய் டி.வி.யின் 'லொள்ளு சபா' வெகு சுவாரசியமாகக் கையாண்டிருக்கிறது.
3. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி எனப் பல போராட்டங்களில் இளம் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் களத்துக்கு வந்து போராடியிருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் இவற்றிற்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசாத முருகதாஸ், இவற்றையெல்லாம் தன்வயப்படுத்த முயன்றிருக்கிறார்.
4. தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு எதிரானதொரு கருத்தியலோடு இன்னொரு டிவி கைகோத்திருப்பது தற்செயலானது என்று கருத முடியாது.
5. தமிழ்த் திரையுலகில் பலமானதொரு பிஜேபி லாபி உருவாக்கப்படுகிறது. இதில், துன்ப அதிர்ச்சியாக சிலரும் இருக்கலாம். இனி நம் கதாநாயகர்களில் சிலர் மறைமுகமாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முனகுவார்கள்.
6. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் பிஜேபி வேட்பாளரானது தெரிந்ததே. அதுபோல், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சி தொகுதியின் பிஜேபி வேட்பாளராவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன
என்று கவிதா பாரதி தெரிவித்துள்ள கருத்துக்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸை பகிரங்கமாகத் தாக்கி சின்னத்திரை இயக்குநர் கவிதாபாரதி கருத்து வெளியிட்டது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.