“இந்த சுதந்திர நாட்டுல எப்படி வேணும்னாலும் படம் எடுக்கலாம்’ங்கற தைரியத்துல எடுக்கப்பட்டிருக்கற படம் பொல்லாங்கு.
படம் ஆரம்பிச்சதுல இருந்து, தேனிலவுக்காக கொடைக்கானல் வந்திருக்கிற ராகுலையும் (ரவிராகுல்), ஜான்சியையும் (நிஷா லால்வானி) நாலு பேர் கொண்ட கும்பல் துரத்துது. “ஏய்... ஏய்..’னு அவங்க கேப் விடாம கத்துறதை வைச்சு “அவங்கதான் வில்லன்கள்!’னு நம்மால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, மலைச்சரிவுல வெளித்தனமா ஓடி, ஜான்சி தடுக்கி விழும்போதெல்லாம் “பார்த்து, பத்திரம்’ன்னு பதறுர ராகுல், ஏன் ஜான்சிக்கு உதவ மாட்டேங்கறாரு?ன்னுதான் புரியலை. திடீர்னு ஜான்சி மேல ஒரு பாறை சரிஞ்சு. அதுல அவங்க கால் சிக்கிக்க, வில்லன்கள்கிட்ட மாட்டிக்கிறாங்க. அவங்களை காப்பத்துறதை விட்டுட்டு “திபு திபு’ன்னு எங்கேயோ ஓடுறாரு ராகுல். ஜான்சியை ஒரு பாழடைஞ்ச இடத்துல வைச்சு “அந்த கேமராவை கொடு?’ன்னு கேட்டு கொடூரமா சித்ரவதை பண்றாங்க. அதுக்குள்ள, ராகுல் ஒரு சாமியாரை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர.. அவர் தன் கட்டுப்பாட்டுல இருக்கற ஒரு ஆத்மாவை ஏவி விட்டு வில்லன்களை அடிச்சு போட்டு ஜான்சியை காப்பாத்தி ஆஸ்பத்திரியில சேர்க்கறாரு சுயநினைவுக்கு வர்ற ஜான்சி “என் புருஷனை காப்பாத்துங்க’ன்னு கதற... ராகுல் அதை பக்கத்துல நின்னுக்கிட்டே பரிதாபமா பார்க்க... அப்போ தான் நமக்கு புரியுது. “அது ராகுலோட ஆவி!’ன்னு. இந்த இடத்துல இடைவேளை.
இடைவேளைக்கு பிறகு... வில்லன்கள் செஞ்ச தவறு என்ன? அவங்க எந்த கேமராவை கேட்டு ஜான்சியை துரத்துறாங்க? ஏன் ராகுல் செத்துப்போனாரு? அந்த விஷயம் ஏன் ஜான்சிக்கு தெரியலை?ன்னு பல கேள்விகளுக்கான பதிலை க்ளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு வந்து சொல்லும்போது... சுத்தி உட்கார்ந்திருந்தவங்கள்ல பாதி பேரைக் காணோம். சலிப்பூட்டுற திரைக்கதை, மிகையான நடிப்பு, அளவுக்கு அதிகமான கொடூர காட்சிகள்னு ஏகப்பட்ட விஷயங்கள் முதுகுல கை வைச்சு முட்டித் தள்ளும் போது போகாம என்ன பண்ணுவாங்க! அதையும் தாண்டி அரங்கத்துல இருக்கறவங்க, திகில் காட்சிகள் வரும்போது பயப்படுறதுக்கு பதிலா பயங்கரமா கலாய்ச்சு சிரிக்கறாங்க. செய்வன “திருந்த’ செய்யலைன்னா என்ன ஆகும்?ங்கறதுக்கு “பொல்லாங்கு’ ஒரு நல்ல சாட்சி!
மொத்தத்தில் "பொல்லாங்கு", “சிரிப்பு" திகில் படம்!
ரசிகன் குரல்: இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. எஸ்கேப் ஆயிடுவோம்!