தினமலர் விமர்சனம்
தான் அனாதை சிறுவனாக அடைக்கலம் ஆனபோது தன்னை தத்தெடுத்துக் கொண்ட மீனவ கிராமத்தை, தான் பெரியவன் ஆனதும் தத்தெடுத்துக் கொண்டு ஊருக்கே நல்லது செய்யும் நாயகனின் கதைதான் அந்தோணி யார் படக்கதை!
கதைப்படி, மீனவ கிராமம் ஒன்றின் சர்ச் பாதர் ராஜேஷ் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் ஹீரோ ஷாம். அந்த ஏரியாவிற்கே செல்ல பிள்ளையாகவும், நல்லது செய்யும் பிள்ளையாகவும் வளர்கிறார். ஹீரோ நல்லது செய்தால்., கெட்டது செய்யும் வில்லன் ஒருவரும் இருப்பாரே? இருக்கிறார். அவர் லால்! படகு வாடகை, மீன்பாடு ஏலம்... என எல்லாவற்றிலும் ஊர் மக்களை கொள்ளையடிக்கும் லாலையும், அவரது ஆட்களையும் ஷாம் எதிர்க்கிறார். இதனால் லால் - ஷாம் இடையே முட்டல், மோதல். இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம், ஷாம் மூலம் கடலையும், கடல் சார்ந்தவர்களையும் தெரிந்து கொள்ள வரும் ஆராய்ச்சி மாணவி மல்லிகா கபூருக்கு ஹீரோ மீது காதல். அதனால் அவரது காஸ்ட்லீ அண்ணன் ஒரு பக்கம் ஷாமை தீர்த்துக் கட்ட ஆளாய் பறக்கிறார். இப்படி போகும் கதையில் ஷாம் என்ன ஆனார்? ஊர் மக்களுக்காக என்ன செய்தார்? மல்லி கபூரின் காதல் என்ன ஆனது? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது அந்தோணி யார் படத்தின் மீதிக் கதை!
மீனவர் அந்தோணியாக ஷாம், அவரை ஒரு தலையாக காதலிக்கும் மல்லிகா கபூர், சர்ச் பாதர் ராஜேஷ், வில்லன் மைக்கேலாக லால், அவரது கையாள் அருள்மணி, மல்லிகாவின் அண்ணி பிரகதி, கிங்பிஷர் விவேக், அவரது ஜோடி மீனாள் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு
வழக்கமான சினிமாவில் இருந்து துணிச்சலாக மாறுபட்டு நாயகன் - நாயகியின் காதலை சேர விடாமல் செய்திருக்கும் இயக்குனர் சி.டி.பாண்டிக்கு தினாவின் இசையும், சான்டோனியாவின் ஒளிப்பதிவும் வலு சேர்க்கின்றன.